உள்ளத்தில் கோவில் கொண்ட உத்தமனே உனை நினைத்தால்
உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உடல் முழுதும் சிலிர்க்குதன்றோ
கண்ணியத்தின் ரூபமாய் நிற்பவனே உனை நினைத்தால்
நல்லவனாய் வாழ்ந்திடவே வேட்கையும் பிறக்குதன்றோ
தியாகத் திருவிளக்காய் ஒளிர்பவனே உனை நினைத்தால்
கல் நெஞ்சும் கரைந்து கண்ணீராய் பெருகுதன்றோ
தந்தை சொல் காத்திடவே தந்தையை பிரிந்தவனே
தந்தையை பிரிந்துசென்று தவித்துத் திரிந்தவனே
பரதன் கோரிக்கையை ஏற்கவும் மறுத்துவிட்டு
பாதுகையை மட்டுமே கொடுத்து அனுப்பிவிட்டு
தம்பி சென்ற திசையை தினந்தோறும் பார்த்தவனே
தம்பியை நினைத்து தினம் கண்ணீர் வார்த்தவனே
மனைவியை சிறைப்பிடித்த மூர்க்கனையும் கொல்லாமல்
தூது பல விட்டவனே அவநம்பிக்கையை சுட்டவனே
தூதுகளை புறக்கணித்து போர்செய்ய வந்தவனை
கடுமையாய் தோற்கடித்தும் கொல்லாமல் விட்டுவிட்டு
இன்றேனும் திருந்துவான் தவறுக்காய் வருந்துவான் என
நம்பி நின்றவனே உளப் பகையை வென்றவனே
மக்கள் நலம் காத்திடவும் தர்மம் நிலைத்திடவும்
பின்வரும் அரசருக்கு முன்மாதிரியாய் வாழ்ந்திடவும்
இதயத்தை பிய்த்தே எறிகின்ற வலியுடனே
உன் இதய தேவதையை வனம் போகச் செய்துவிட்டு
என்றென்றும் அவள் நினைவாய் நடைபிணமாய் இருந்தவனே
மௌனமாய் தினம் அழுது ரத்தக் கண்ணீரும் சொரிந்தவனே
கல்லாக காட்சி தரும் கற்கண்டும் நீயன்றோ ஸ்ரீராமா
உயரத்தில் இருக்கின்ற சில்வண்டின் தேனன்றோ ஸ்ரீராமா
முதல் கடியில் கசக்கின்ற நெல்லிக் கனியன்றோ ஸ்ரீராமா
மூழ்க துணிந்துவிட்டால் முத்தளிக்கும் கடலன்றோ ஸ்ரீராமா
இருகரம் கொண்டே வானத்தை அளப்பது போல்
உன் பெருமை சொல்ல வந்து எப்போதும் தோற்கின்றேன்
உன் பெருமை சொல்வது உனைச் சேர்ந்தவரின் சுகமென்றால்
அம்முயற்சியில் தோற்பது உன் பகைவரின் சுகமன்றோ!
ஸ்ரீராமா ஸ்ரீராமா ஸ்ரீராமா ஸ்ரீராமா
நான் வாழ்ந்தாலும் நீயே நான் வீழ்ந்தாலும் நீயே
எவ் வழியினுலும் நீயே என் வலியினிலும் நீயே
உன் பாதம் பணிகின்றேன் சிரம் தாழ்த்த விழைகின்றேன்
உன் பளிங்கு நீர் அன்பாலே கல்நெஞ்சம் குழைகின்றேன்
உன் புகழை நினைப்பதன்றி வேறெதுவும் நான் வேண்டேன்
உன் புகழை சொல்வதன்றி வேறதுவும் நான் வேண்டேன்
ஸ்ரீராமா ஸ்ரீராமா ஸ்ரீராமா ஸ்ரீராமா
ஸ்ரீராமா ஸ்ரீராமா ஸ்ரீராமா ஸ்ரீராமா
ஸ்ரீராமா ஸ்ரீராமா ஸ்ரீராமா ஸ்ரீராமா
ஸ்ரீராமா ஸ்ரீராமா ஸ்ரீராமா ஸ்ரீராமா
4 comments:
இந்தப் பின்னூட்டம் பிரசுரிக்க இல்லை -
பொருட் பிழை போலத் தெரிந்தது - என் புரிதல் பிழையாகவும் இருக்கலாம்...
//இருகரம் கொண்டே வானத்தை அளப்பது போல்
உன் பெருமை சொல்ல வந்து எப்போதும் தோற்கின்றேன்
உன் பெருமை சொல்வது உனைச் சேர்ந்தவரின் சுகமென்றால்
அம்முயற்சியில் தோற்பது உன் பகைவரின் சுகமன்றோ!//
இந்த பத்தியை படித்து முடிக்கையில், அவன் புகழ் சொல்ல வந்து நீங்கள் தோற்றதால், நீங்கள் பகைவர் என்பது போல் பொருள் வருகிறது...
என் புரிதல் பிழையென்றால் மன்னித்துக் கொள்ளுங்கள்...
அம்முயற்சியில் தோற்பது உன் 'பகைவரின் சுகம்' என்று சொல்லியிருக்கிறேன். ராமரின் பகைவருக்கு என்ன சுகம் உண்டு என சிந்தித்து பாருங்கள். ராமரிடம் தோற்ற பிறகு அவர்கள் பரமானந்தத்தை அடைகிறார்கள். அது அகம்பாவம் அற்று விழுவதால் கிடைக்கும் மகிழ்ச்சி.
நான் அவர் புகழை சொல்லும் பொழுது அவரை சேர்ந்தவர்களின் சுகத்தை அனுபவிக்கிறேன். அதாவது நான் என்பது அற்று விழாமல், அல்லது தன்னை இழக்காமல் அனுபவிக்கும் ஆனந்தம். அவர் புகழை முழுமையாக சொல்ல முடியாத பொழுது அந்தத் தோல்வியில், என் அகம்பாவம் அற்று விழுகிறது. அது அவர் பகைவர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி.
நான் அனுபவித்த அனுபவிக்கின்ற விஷயத்தையே எழுதியிருக்கிறேன். கல் போன்ற கற்கண்டே, முதல் கடியில் கசக்கின்ற நெல்லிக்கனியே, என்றெல்லாம் ராமரை பற்றி எழுதும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம் 'ஆஹா என்ன அழகாக சொல்லிவிட்டோம்! ஆழ்வார்கள் கூட நம்மிடம் தோற்றார்' என்று தற்பெருமை ஏற்படுகிறது. அதே சமயம் ராமரையும் அவர் பெருமைகளையும் நினைக்கும் பொழுது ஏற்படும் உணர்வுகளை முழுமையாக சொல்ல முடியாமல் போகும் பொழுது ஒரு வித தோல்வி மனப்பான்மை ஏற்பட்டு, பணிவு வருகிறது.
சிவனார் கழுத்தின் பாம்பிற்கும், விஷ்ணுவை சுமக்கும் கருடனுக்கும் இவ்வித ஆணவம் ஏற்பட்டு பின் திருந்துவதை புராணங்களில் காண்கிறோம். அதே சமயம் இறைவனிடம் தோற்று துன்பமுறும் அசுரர்கள் மகிழ்ச்சியாக சொர்க்கம் செல்வதையும் பார்க்கிறோம். இல்லையா?
பி.கு: உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் நிறைய பேருக்கு ஏற்படும் என்பதால் பின்னூட்டத்தை பிரசுரம் செய்துள்ளேன்.
விளக்கம் சொல்ல சந்தர்ப்பம் அளித்தமைக்கு நன்றி, கவிநயா. மேலும், நான் ஆங்கிலத்தில் இயற்றி வரும் ராமாயணத்தை நேரம் கிடைக்கும் பொழுது படிக்கவும். ராமரின் பண்புகளை கொண்டாடும் நோக்கத்துடன் எழுதப்படும் ராமாயணம். பக்தி ரசம். தவறாமல் பருகவும். :) ஸ்ரீ ராமஜெயம்!
ஓ, நீங்க அப்படி வரீங்களா? உண்மைதான், பகைவருக்கே இறையின் தரிசனம் நேரடியாகவும் சுலபமாகவும் கிடைக்கிறது. விளக்கத்திற்கு நன்றி.
உங்க ஆங்கில இராமாயணம் எங்கே இருக்கு?
ஆமா... :)
http://smilemakerkrishna.blogspot.com/
இந்த தளத்தின் வலது பத்தியில் முதல் அத்தியாயம் முதல் கடைசியாக எழுதப்பட்ட அத்தியாயம் வரையிலான சுட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன. (My Lord's Story என்கிற தலைப்பின் கீழ்.)
கடைசியாக ஸ்ரீராம பாதுகா பட்டாபிஷேகம் முடிந்துள்ளது.
Post a Comment