ஸ்ரீராமபிரான் பிறந்த பொழுது ஸ்ரீராமரின் பாதங்கள் மிகவும் சிறயதாகவும் தாமரை மொட்டை போன்றும் இருந்தன. குழந்தை ராமரை முதன் முதலாக குளிக்க வைத்த செவிலிப் பெண் ஸ்ரீ ராமரின் குட்டிப் பாதங்களை அன்போடு உருவி விட்டாள். பின்பு ஸ்ரீ ராமரின் குட்டிப் பாதங்களை மென்மையான துண்டால் துடைத்து, உள்ளங்காலில் திருஷ்டிப் பொட்டு ஒன்று வைத்தாள். குழந்தை ராமருக்காக வைக்கப்பட்டிருந்த தங்கக் கொலுசுகளை ஸ்ரீராமரின் அந்த குட்டிப் பாதங்களுக்கு அணிவித்தாள். இவ்வாறு குழந்தை ராமரின் அந்தப் பாதங்களை அலங்கரித்து அழகு பார்த்த அந்த செவிலித்தாய் குழந்தை ராமரை தூங்கிக் கொண்டிருந்த கௌசல்யையின் அருகில் படுக்க வைத்தாள். அப்பொழுது ஸ்ரீராமரின் அந்தக் குட்டிப் பாதங்கள் மென்பட்டால் போர்த்தப் பட்டு இருந்தன. கௌசல்யா தேவி கண்விழித்த பொழுது குழந்தை ராமரின் குட்டிப் பாதங்களை கண்களால் ஒற்றிக் கொண்டும் முத்தமிட்டும் மகிழ்ந்தாள்.
குழந்தை ராமர் பிறந்த செய்தியைக் கேட்டு அங்கு வந்த தசரதரும் குழந்தை ராமரின் குட்டிப் பாதங்களை கண்களால் ஒற்றிக் கொண்டும் முத்தமிட்டும் மகிழ்ந்தார்.
குழந்தை ராமர் வளரத் துவங்கி நடைபழக ஆரம்பித்த பொழுது ஸ்ரீராமரின் குட்டிப் பாதங்கள் பஞ்சு மெத்தைகள் மீதும், பட்டுத் துணிகளின் மீதும், தேக்கு சந்தனம் ஆகியவற்றால் ஆன பலகைகளின் மீதும் சலவைக் கற்களால் ஆன பளபளப்பான தரைகளின் மீது மட்டுமே நடந்தன. ஸ்ரீராமர் சிறுவனாக வளர்ந்து விளையாடிய நாட்களில் ஸ்ரீ ராமரின் பாதங்கள் மண்ணை மிதிக்காமல் புல்தரைகளை மட்டுமே மிதிக்கும்படியாக தசரதர் கவனமாக பார்த்துக் கொண்டார். லக்ஷ்மண பரத சத்ருகனர்கள் ஸ்ரீராமரின் பாதங்களை அப்பொழுதிருந்தே போட்டி போட்டுக் கொண்டு பூஜித்து வந்தனர்.
ஸ்ரீராமர் குருகுல வாசம் செய்த நாட்களில் ஸ்ரீ ராமரின் பாதங்கள் வஷிஷ்டரால் ரகசியமாக ரசிக்கப்பட்டு, மானசீகமாக தொழப்பட்டன. வஷிஷ்டர் சொன்ன சின்ன சின்ன வேலைகளை செய்ய ஸ்ரீராமரின் புனிதப் பாதங்கள் இங்கும் அங்கும் ஒடின. ஸ்ரீராமர் குதிரையேற்றம் யானையேற்றம் செய்த நாட்களில் ஸ்ரீராமரின் பாதங்கள் குதிரைகளை உதைத்து உற்சாகமாக ஓடச் செய்தன. யானைகளை உதைத்து அவற்றை ஆனந்தமாகவும் மெருமிதத்தோடும் பிளிரச் செய்தன.
குருகுல வாசம் முடிந்து அரண்மனை திரும்பிய ஸ்ரீராமர் சுற்றுப் பயணம் மேற்கொள்ள விரும்பினார். அப்பொழுது ஸ்ரீராமரின் பாதங்களுக்காக தோலாலும் மென்மையான துணிகளாலும் ஆன உயர் ரக பாதுகைகளை தசரதர் வரவழைத்தார். அப்பாதுகைகளை அணிந்தபடி ஸ்ரீராமரின் பாதங்கள் சத்ருஞ்ஜெயன் என்ற யானையின் மீது சுகமாக பயணித்தன.
சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு அரண்மனை திரும்பிய ஸ்ரீராமரின் பாதங்கள் சில நாட்கள் கழித்து விஸ்வாமித்ரருக்கு உதவும் பொருட்டு ஸ்ரீராமரின் குருவை பின் தொடர்ந்து வனம் நோக்கி சென்றன. அங்கே ஸ்ரீராமர் தாடகையை வதம் செய்த பொழுது ஸ்ரீராமரின் பாதங்கள் ஸ்ரீராமரை ஸ்திரமாக தாங்கி நின்றன. பின்னர் விஸ்வாமித்ரரின் யாகத்துக்கு ஸ்ரீராமர் காவலாக இருந்த பொழுது அவ்வாசிரமத்தை ஸ்ரீராமரின் பாதங்கள் ஆறுநாட்கள் சுற்றிச் சுற்றி வந்தன. ஸ்ரீராமர் சுபாகு மாரீசனை போரிட்டு வென்ற பொழுதும் ஸ்ரீராமரின் பாதங்கள் ஸ்ரீராமரை திடமாக தாங்கி நின்றன. அதன் பின் விஸ்வாமித்ரரின் விருப்பத்தை முன்னிட்டு ஸ்ரீராமரின் பாதங்கள் ஸ்ரீராமரின் குருவை பின் தொடர்ந்து மிதிலை நோக்கி நடந்தன.
மிதிலை நகரம் செல்லும் வழியில் விசாலா நகரத்தை ஆளும் சுமதி என்ற மன்னனால் ஸ்ரீராமரின் பாதங்கள் போற்றுதலால் பூஜிக்கபட்டன. அதன் பின்னர் ஸ்ரீராமர் மிதிலாபுரியை அடையும் முன் வழியில் ஒரு கல்லைக் கண்டார். ஸ்ரீராமரின் பாதங்கள் அந்தக் கல்லை நோக்கி நடந்தன. ஸ்ரீராமரின் பாதங்கள் அக்கல்லின் அருகே சென்றபொழுது ஸ்ரீராமரின் பாதங்களில் இருந்த தூசி அந்தக் கல்லின் மேல் பட்டது. உடனே அக்கல் ஒரு பெண்ணாக உயிர்த்தெழுந்தது. அப்பெண் தன் பெயர் அகலிகை என்றும் தான் செய்திருந்த பாவமும் பெற்றிருந்த சாபமும் ஸ்ரீராமரின் பாதங்களால் நீங்கியதென்றும் கூறி ஸ்ரீராமரின் பாதங்களை விழுந்து தொழுதாள். இக்காட்சியை கண்ட விஸ்வாமித்ரரும் லக்ஷ்மணரும் ஸ்ரீராமரின் பாதங்கள் எத்தனை மகிமை வாய்ந்தது என்பதை உணர்ந்து கொண்டனர். விஸ்வாமித்ரர் கமலக் கண்ணுடைய ஸ்ரீராமா உன் கருவண்ணமான இந்தப் பாதங்களின் மகிமையை நான் உணர்கிறேன் என்றார்.
அதன் பிறகு ஸ்ரீராமரின் பாதங்கள் மிதிலை நகரின் தெருக்களை புனிதப் படுத்தியபடி நடந்து சென்றன. மிதிலை நகரின் அரசர் ஜனகரால் அன்போடு பூஜிக்கப்பட்டன. ஸ்ரீராமர் சிவனாரின் வில்லை தூக்கி நாணேற்றி முறித்த பொழுது ஸ்ரீராமரின் பாதங்கள் ஸ்ரீராமரை திடமாக தாங்கி நின்றன. பின்னர் அங்கே வந்த அன்னை சீதை ஸ்ரீராமரின் பாதங்களைப் பார்த்த வண்ணம் ஸ்ரீராமருக்கு மாலையணிவித்தாள். பின்பு ஸ்ரீராமர்-சீதை திருமணத்தின் பொழுது மருதாணிக் கோலங்களால் ஸ்ரீராமரின் இந்தப் பாதங்கள் நன்கு அலங்கரிக்கப்பட்டு பொலிவோடு விளங்கின.
திருமணம் முடிந்த சில நாட்கள் கழித்து ஸ்ரீராமரின் பாதங்கள் ஒரு பல்லக்கில் சுகமாக இருந்த படி அயோத்தி மாநகர் நோக்கி பயணித்தன. வழியில் பரசுராமர் குறிக்கிட்ட பொழுது ஸ்ரீராமரின் பாதங்கள் பல்லக்கிலிருந்து இறங்கி முன் சென்று பரசுராமர் முன் திடமாக நின்றன. அப்பொழுது பரசுராமர் ஸ்ரீராமரை உச்சி முதலும் ஸ்ரீராமரின் இந்தப் பாதங்கள் வரையிலும் ஏளனமாக பார்த்தார். என்றாலும் ஸ்ரீராமரின் பாதங்களை கண்ட புண்ணியத்தால் ஸ்ரீராமரால் வெல்லப்பட்டு ஆணவம் அழிந்தவராகவும் மகிழ்ச்சி மிகுந்தவராகவும் ஆனார். ஸ்ரீராமரின் பாதங்களை பார்த்த வண்ணம் ஸ்ரீராமரை வலம் வந்து விடை பெற்று சென்றார்.
அதன் பிறகு ஸ்ரீராமரின் பாதங்கள் பல்லக்கில் ஏறிக் கொண்டு சுகமாக பயணித்து அயோத்தியை அடைந்தன.
இளவரசரான ஸ்ரீராமர் பொது காரியங்களை கவனிப்பதில் விருப்பம் உள்ளவராக இருந்தார். ஆகையால் ஸ்ரீராமரின் பாதங்கள் அயோத்யாவின் தெருக்களில் சகஜமாக சென்று வந்தன. அயோத்தியாவின் தெருக்களில் மட்டும் அல்லாது கோசல தேசத்தின் பல கிராமங்களுக்கும் குதிரைகளை உதைத்தபடியோ, அல்லது யானையின் மீது இருந்தபடியோ அல்லது தேரின் மீது இருந்தபடியோ சென்று வந்தன. அப்படி அங்கு சென்று தெரிந்து கொண்ட விஷயங்களை தசரதருக்கு தெரிவிக்க ஸ்ரீராமர் விரும்புவார். ஆகையால் ஸ்ரீராமரின் பாதங்கள் அரச தர்பாருக்கு செல்லும் படிக்கட்டுக்களில் துள்ளலோடு ஏறி இறங்கின.
இப்படியாக பகலில் தன்னை அங்கும் இங்கும் சுமந்தபடி திரிந்த இந்த பாதங்களை ஸ்ரீராமர் இரவுகளில் பஞ்சு மெத்தையின் மீது வைத்துக் கொண்டு சுகமாக தூங்குவார். அவர் விழிக்கும் முன் கண்விழிக்கும் அன்னை சீதை தினமும் முதன் முதலில் செய்யும் காரியம் ஸ்ரீராமரின் பாதங்களை பூஜிப்பதே ஆகும். கண்களில் ஒற்றிக் கொள்வதற்காக அன்னை சீதை இப்பாதங்களை தொடுவதை உணர்ந்து ஸ்ரீராமர் ஒரு புன்னகையோடு கண்விழித்துக் கொள்வார்.
இப்படியிருக்கையில் ஸ்ரீராமர் தன் தந்தை தசரதர் தன் சித்தி கைகேயியிக்கு கொடுத்திருந்த வாக்கை காப்பாற்றும் பொருட்டு வனம் போக முடிவு செய்தார். அப்பொழுது ஸ்ரீராமரின் பாதங்கள் அரசர்கள் அணியும் உயர்ரக பாதுகைகளை துறந்து எளிமையான மரக் குறடுகளை ஏற்றுக் கொண்டு வனம் நோக்கி நடந்தன. அப்பொழுது ஸ்ரீராமரின் பாதங்கள் விட்டுச் சென்ற சுவடுகளை பின்பற்றி அயோத்யா நகரின் மக்களெல்லோரும் வனம் நோக்கி நடந்தனர். அவர்களை ஸ்ரீராமர் சமாதானம் செய்து அனுப்பிய பிறகு ஸ்ரீ ராமரின் பாதங்கள் கங்கைக் கரையை அடைந்து நின்றன. அப்பொழுது ஸ்ரீராமரின் நண்பனும் வேடர்குல அரசனுமாகிய குகன் ஸ்ரீராமரின் பாதங்களை விழுந்து வணங்கி போற்றி மகிழ்ந்தான்.
ஒர் இரவை கங்கைக் கரையில் கழித்த ஸ்ரீராமர் அதிகாலையில் கங்கையைக் கடக்கும் பொருட்டு குகன் ஒரு படகை வரவழைத்தான். ஆனால் அந்த படகோட்டி ஸ்ரீராமரின் பாதங்களை பூஜிக்கும் பொருட்டு ஸ்ரீராமரை தன் படகில் ஏறக்கூடாது என தடுத்தான். காரணம் கேட்டதற்கு ஸ்ரீராமரின் இந்த பாதங்களால் கல்லே பெண்ணாகும் பொழுது மரத்தாலான தன் படகு என்னாகுமோ என்றான். ஸ்ரீராமர் தன்னுடைய பாதங்களை நன்கு கழுவிவிட்டு படகேறுவதாக கூறிய பொழுது தானே ஸ்ரீராமரின் பாதங்களை கழுவி அதில் தூசுகள் இல்லை என்பதை உறுதி செய்ய அனுமதி கிடைத்தால் மட்டுமே ஸ்ரீராமரை படகில் ஏற்ற ஒத்துக் கொள்வதாக கூறினான். ஸ்ரீராமரும் அவன் மனதை அறிந்து ஒரு புன்னகையோடு ஒரு கல்லில் அமர்ந்து படகோட்டிக்கு தன்னுடைய பாதங்களைக் கொடுத்தார். அந்த படகோட்டி ஸ்ரீராமரின் பாதங்களை ஒரு தாம்பூல தட்டில் வைத்து, அதன் மேல் நீருற்றி கழுவினான். பின்பு அதன் மேல் சந்தனமும் குங்குமமும் பூசினான். பின்னர் தன்னுடைய ஒரு வேட்டியை ஸ்ரீராமர் அமர்ந்திருந்த பாறையில் இருந்து படகு வரை விரித்து ஸ்ரீராமரை அதன் மேல் நடந்து வரும்படி கேட்டுக் கொண்டான். ஸ்ரீராமரின் பாதங்கள் அவ்வேட்டியின் மீது நடந்து சென்று அப்படகில் ஏறிக் கொண்டன.
அதன் பிறகு ஸ்ரீராமரின் பாதங்கள் காட்டு வழிகளில் நடந்து பரத்துவாஜ முனிவரின் ஆசிரமத்தை அடைந்து அங்கு பரத்துவாஜ முனிவரால் பூஜிக்கப் பட்டன. பின்னர் வால்மீகியின் ஆசிரமத்தை அடைந்து அங்கு வால்மீகி மகரிஷியால் பூஜிக்கப் பட்டன. அதன் பிறகு ஸ்ரீராமரின் பாதங்கள் சித்ரகூட மலையில் ஏறின. அங்கு லக்ஷ்மணரால் கட்டப் பட்ட குடிலிக்குள் ஸ்ரீராமரின் பாதங்கள் ஒரு நல்ல நேரத்தில் நுழைந்தன. ஸ்ரீராமர் அருகில் இருந்த நதிக்கு குளிக்கச் செல்லும் பொழுதும் அன்னை சீதையோடு அருகில் உள்ள வனங்களில் உல்லாசமாக நடந்து சென்ற பொழுதும் ஸ்ரீராமரின் பாதங்களை கற்களோ முற்களோ காயப் படுத்தி விடக் கூடாதென்பதில் லக்ஷ்மணர் தெளிவாக இருந்தார். இதனால் ஸ்ரீராமர் செல்லும் இடங்களில் உள்ள கற்களையும் முற்களையும் அப்புறப் படுத்தி எங்கும் இலைகளாலும் மலர்களாலும் அலங்கரித்து வைத்தார்.
சில நாட்கள் கழித்து பரதர் அங்கே வந்து ஸ்ரீராமரின் பாதங்கள் முன் விழுந்து வணங்கினார். தனது தாய் தனக்காக வென்ற ராஜ்யத்தை ஸ்ரீராமரின் பாதங்களில் பணிவாக சமர்ப்பித்தார். ஸ்ரீராமர் ராஜ்யத்தை ஏற்க மறுத்ததால் ஸ்ரீராமரின் பாதங்களால் புனிதமடைந்திருந்த பாதுகைகளை ஸ்ரீராமரிடம் வேண்டி பெற்றுக் கொண்டு அப்பாதுகைகளை தன் தலையின் மேல் வைத்தபடி அயோத்தி சென்றார்.
ஸ்ரீராமர் சித்ரகூடத்தை விட்டு இடம்பெயர முடிவு செய்ய ஸ்ரீராமரின் பாதங்கள் தண்டக வனம் நோக்கி நடந்தன. ஸ்ரீராமரின் பாதங்கள் காட்டுப் பாதையில் பயணித்து அத்ரி மகரிஷியின் ஆசிரமத்தை அடைந்தன. அங்கே அத்ரி மகரிஷியாலும் பதிவிரதையான அனசூயாவாலும் அர்க்கியம் பாத்யம் ஆகியவற்றால் பக்தியோடு பூஜிக்கப் பட்டன.
மறுநாள் காலை அவ்வாசிரமத்தை விட்டு தண்டகவனத்தை நோக்கி ஸ்ரீராமரின் பாதங்கள் நடக்கத் துவங்கின. அப்பொழுது விராதன் என்னும் அரக்கனுக்கும் ஸ்ரீராமருக்கும் ஏற்பட்ட மோதலில் ஸ்ரீராமரின் பாதங்கள் விராதனை உதைத்தும் மிதித்தும் அவனுக்கு பாடம் புகட்டின. ஸ்ரீராமரின் பாதங்கள் தன் மேல் பட்ட புண்ணியத்தால் விராதன் தன் முற்பிறவி ஞாபகம் வந்தவனாக ஸ்ரீராமரின் பாதங்களை நன்றியோடு போற்றி துதி செய்தான். தன் சுயரூபம் பெற்றவனாக ஸ்ரீராமரின் பாதங்களை புகழ்ந்தபடியே வானம் நோக்கி பறந்தான்.
ஸ்ரீராமரின் பாதங்கள் தொடர்ந்து நடந்து சரபங்கரின் ஆசிரமத்தை அடைந்தன. அங்கே சரபங்கர் ஸ்ரீராமரின் பாதங்களை தரிசிக்கவும் பூஜிக்கவும் விரும்பி இந்திரன் அழைத்தும் சொர்க்கம் செல்லாமல் காத்திருந்தார். ஸ்ரீராமரின் பாதங்களை கண்ட சரபங்கர் அகமகிழ்ந்து தன் பிறவிப் பயனை தான் அடைந்ததாக கூறினார். ஸ்ரீராமரின் பாதங்களை நீராலும் மலர்களாலும் அபிஷேகம் செய்து பூஜித்த பின் யோகத் தீயில் தன் உடலை விட்டு சுவர்க்கம் சென்றார்.
அதன் பின்னர் ஸ்ரீராமரின் பாதங்கள் வனத்தின் கரடு முரடான பாதைகளில் பயணித்து சுதீக்ஷ்ணரின் ஆசிரமத்தை அடைந்தன. சுதீக்ஷ்ணர்
ஸ்ரீராமரின் பாதங்களை நன்னீரால் நீராட்டி மலர்களால் பூஜித்து மகிழ்ந்தார். மறுநாள் காலை ஸ்ரீராமரின் பாதங்கள் ஒரு நெடிய ஆசிரம யாத்திரையை துவங்கின. அந்த யாத்திரை பத்தாண்டுகள் நீடித்தது. அந்த யாத்திரையின் பொழுது ஸ்ரீராமரின் பாதங்கள் பல ரிஷிகளின் குடில்களை புனிதப் படுத்தின. எந்தெந்த ஆசிரமங்களில் எல்லாம் ஸ்ரீராமரின் பாதங்கள் நுழைந்தனவோ அங்கெல்லாம் பூஜிக்கப் பட்டன.
பத்தாண்டுகள் கழித்து ஸ்ரீராமரின் பாதங்கள் மீண்டும் சுதீக்ஷ்ணரின் ஆசிரமத்தை அடைந்தன. சுதீக்ஷ்ணர் ஸ்ரீராமரின் பாதங்களை மீண்டும் மகிழ்ச்சியோடு பூஜித்து மகிழ்ந்தார். சில நாட்கள் கழித்து ஸ்ரீராமரின் பாதங்கள் அகஸ்தியரின் ஆசிரமம் நோக்கி நடக்கத் துவங்கின. வழியில் அகஸ்தியரின் தம்பியின் குடிலை அடைந்து அம்முனிவரால் பூஜிக்கப் பட்டன. பின்னர் அங்கிருந்து நடக்கத் துவங்கிய ஸ்ரீராமரின் பாதங்கள் அகஸ்தியரின் ஆசிரமத்தை அடைந்தன. அகஸ்தியர் ஸ்ரீராமரின் பாதங்களை ஆனந்தத்தோடு பூஜித்து மகிழ்ந்தார்.
மறுநாள் காலை ஸ்ரீராமரின் பாதங்கள் பஞ்சவடி நோக்கி நடக்கத் துவங்கின. வழியில் ஸ்ரீராமர் சடாயுவைக் கண்ட பொழுது நின்றன. ஸ்ரீராமர் சடாயுவோடு உரையாடி முடித்தபின் பஞ்சவடியை சென்றடைந்தன. அங்கே லக்ஷ்மணர் குடில் ஒன்றை அமைத்த பொழுது ஸ்ரீராமர் லக்ஷ்மணரின் வற்புறுத்தலால் தனது பாதங்களை புற்களின் மேல் வைத்துக் கொண்டு ஒரு பாறையின் மீது அன்னை சீதையோடு அமர்ந்திருந்தார். லக்ஷ்மணர் குடிலைக் கட்டி முடித்தவுடன் ஒரு நல்ல நேரத்தில் ஸ்ரீராமரின் பாதங்கள் அந்த குடிலுக்குள் நுழைந்தன.
பஞ்சவடியில் தங்கியிருந்த நாட்களில் ஸ்ரீராமர் அன்னை சீதையுடன் ஆற்றில் நீந்தி விளையாட விரும்பினார். அப்பொழுது ஸ்ரீராமரின் பாதங்கள் தண்ணீரை உதைத்து பின் தள்ளி ஸ்ரீராமரை முன் தள்ளின. அருகில் உள்ள வனங்களில் ஸ்ரீராமரின் பாதங்கள் அன்னை சீதையின் பாதங்கள் உடன்வர ஆனந்தமாக நடந்தபடி சுற்றிவந்தன. அன்னை சீதையோடு ஸ்ரீராமர் ஊஞ்சலில் அமர்ந்திருந்த நேரங்களில் ஸ்ரீராமரின் பாதங்கள் தரையை உதைத்து ஊஞ்சலை முன்னும் பின்னும் சென்றுவரச் செய்தன.
பின்னர் ஒருநாள் ஸ்ரீராமரின் பாதங்கள் நடந்து வந்த பாதையில் பதிந்திருந்த ஸ்ரீராமரின் பாதரேகைகளை கண்ட சூர்ப்பணகை ஸ்ரீராமரின் மேல் காதலுற்றால். ஸ்ரீராமர் அக்காதலை புறக்கணித்த போதும் அவ்வரக்கியின் தாக்குதலில் இருந்து அன்னை சீதையை காத்த பொழுதும் ஸ்ரீராமரின் பாதங்கள் திடமாக நின்றன. லக்ஷ்மணரால் மூக்கறுபட்ட சூர்ப்பணகையால் தூண்டப்பட்ட கரன் பதினான்கு அரக்கர்களை அனுப்பிய பொழுதும் பின்னர் பதினான்காயிரம் வீரர்களை அழைத்துக் கொண்டு யுத்தத்திற்கு வந்த பொழுதும் ஸ்ரீராமரின் பாதங்கள் திடமாக நிற்க ஸ்ரீராமர் அற்புதமாக போர் புரிந்து வெற்றி வாகை சூடினார்.
சில நாட்கள் கழித்து ஆசிரமத்தின் முன்னால் ஸ்ரீராமர் தனது பாதங்களை லக்ஷ்மணர் மடியின் மீது வைத்துக் கொண்டு சுகமாக அமர்ந்திருந்தார். லக்ஷ்மணர் ஸ்ரீராமரின் பாதங்களுக்கு சொடுக்கெடுத்துக் கொண்டும் பிடித்துவிட்டுக் கொண்டும் ஸ்ரீராமரோடு உரையாடியபடி அமர்ந்திருந்தார்.
அப்பொழுது அன்னை சீதையின் குரல் கொள்ளைப் புறத்தில் இருந்து கேட்க ஸ்ரீராமரின் பாதங்கள் அங்கே ஓடின. அன்னை சீதை அங்கிருந்த பொன்மயமான மானின் மீது ஆசை கொண்டதை அறிந்த ஸ்ரீராமர் அம்மானை அவளுக்கு பிடித்துத் தர விரும்பினார். ஸ்ரீராமரின் பாதங்கள் அம்மானை துரத்தியபடி வனமெங்கும் ஓடின. லக்ஷ்மணரால் பராமரிக்கப் பட்ட இடங்களில் மட்டுமே நடந்து பழகிய ஸ்ரீராமரின் பாதங்கள் அன்று கற்களும் முற்களும் கிடந்த இடங்களில் ஓடின. இதனால் ஸ்ரீராமரின் பாதங்கள் சகதியும் புழுதியும் படிந்ததாக ஆனது. பின்னர் ஸ்ரீராமரின் பாதங்கள் திடமாக நிற்க ஸ்ரீராமர் அந்த மாயமானை கொன்றார். அதன்பின் ஸ்ரீராமரின் பாதங்கள் ஸ்ரீராமாசிரமத்தை நோக்கி நடந்தன. அப்பொழுது லக்ஷ்மணர் தனியாக எதிர் வருவதை கண்டு ஸ்ரீராமர் அதிர்ச்சியடைய ஸ்ரீராமரின் பாதங்கள் நின்றன. அப்பொழுது லக்ஷ்மணர் ஸ்ரீராமரின் பாதங்கள் முன் வணங்கி அன்னை சீதையின் வற்புறுத்தலால் தான் ஆசிரமத்தை விட்டு வர வேண்டியதாகி விட்டது என்று கூறி கண்ணீர் சிந்தினார். ஸ்ரீராமர் அவரை ஆறுதல் படுத்த ஸ்ரீராமரின் பாதங்கள் தனக்கு என்றென்றும் உற்ற துணையாகிய லக்ஷ்மணரின் பாதங்கள் உடன் வர ஸ்ரீராமாசிரமம் நோக்கி நடந்தன.
ஆசிரமத்தில் அன்னை சீதையை காணாமல் ஸ்ரீராமர் திகைப்படைய ஸ்ரீராமரின் பாதங்கள் அவ்வாசிரமத்தின் உள்ளும் புறமும் மீண்டும் மீண்டும் சென்று வந்தன. அவ்வாசிரமத்தை ஸ்ரீராமரின் பாதங்கள் சுற்றிச் சுற்றி வந்தன. அருகில் இருந்த ஆற்றங்கரைக்கு ஓடிச் சென்றன. ஸ்ரீராமரின் பாதங்கள் அன்னை சீதையின் பாதங்களோடு தாம் நடை போட்ட இடங்களுக்கெல்லாம் ஓட்டமும் நடையுமாக சென்று வந்தன.
பின்னர் ஸ்ரீராமரின் பாதங்கள் தென் திசை நோக்கி ஒரு புதிய பயணத்தை துவங்கின. வழியில் ராவணனால் தாக்கப்பட்டுக் கிடந்த சடாயுவை ஸ்ரீராமர் காண ஸ்ரீராமரின் பாதங்கள் அங்கே நின்றன. அன்னை சீதை ராவணனால் அபகரிக்கப் பட்ட செய்தியை கூறி சடாயு உயிரை விட்டார். ஸ்ரீராமர் சடாயுவிற்கு இறுதிக் கடன்கள் முடித்தவுடன் ஸ்ரீராமரின் பாதங்கள் தென் திசை நோக்கி பயணித்தன.
அப்படிச் செல்லும் பொழுது ஸ்ரீராமர் கபந்தனுடன் சண்டையிட ஸ்ரீராமரின் பாதங்கள் திடமாக நின்றன. ஸ்ரீராமராலும் லக்ஷ்மணராலும் கைககள் துண்டிக்கப் பட்ட கபந்தன் தான் பெற்றிருந்த சாபம் நீங்கப் பெற்றவனாக ஸ்ரீராமரின் பாதங்கள் முன் தன் தலை வைத்து தொழுதான். பின் ஸ்ரீராமரின் பாதங்களின் புகழை பாடிய படியே வானம் நோக்கி தன் அழகிய சுய உருவோடு சென்றான்.
அதன் பின்னர் ஸ்ரீராமரின் பாதங்கள் ஸ்ரீராம பக்தையான சபரியை தேடிக்கொண்டு நடந்து சென்றன. அப்பொழுது நன்கு பராமரிக்கப் பட்ட பாதை ஒன்றை ஸ்ரீராமரின் பாதங்கள் அடைந்தன. அந்தப் பாதை ஸ்ரீராமரின் பாதங்கள் நடந்து வர வேண்டும் என்பதற்காக சபரி அன்போடு பராமரித்து வைத்திருந்த பாதை. அந்தப் பாதையை நடுவில் சாமந்தி மலர்களும் ஓரங்களில் துளசி இலைகளும் ஆங்காங்கே தாமரை மலர்களும் எங்கும் மல்லிகை மலர்களும் வண்ண வண்ண கோலங்களாக அலங்கரித்தன. ஸ்ரீராமரின் பாதங்கள் அந்த மலர்களின் மேல் நடந்து சென்று சபரியின் ஆசிரமத்தை அடைந்தன. அங்கே சபரி ஸ்ரீராமரின் பாதங்களை தன் கண்ணீரால் பூஜித்தாள். ஸ்ரீராம லக்ஷ்மணரை ஒரு தாயைப் போல கனிகள் தந்து உபசரித்த சபரி ஸ்ரீராமரின் பாதங்களை நன்னீரால் அபிஷேகம் செய்து மலர்களால் பூஜித்து முக்தி நிலை அடைந்தாள்.
சபரிக்கு முக்தி வழங்கிய பின் ஸ்ரீராமரின் பாதங்கள் பம்பைக் கரைக்கு சென்று அங்கு பம்பை ஆற்றில் இறங்கி அவ்வாற்றை புனிதப் படுத்தின. பின்னர் ரிஷ்யமுக பர்வதம் நோக்கி நடக்கத் துவங்கின. அப்பொழுது ஸ்ரீராமரின் பாதங்களை தன் உயிராக கருதுபவரும் ஸ்ரீராமரின் பாதங்களின் மகிமையை முழுமையாக அறிந்தவரும் ஸ்ரீராமரின் பாதங்களை தன் கைககளால் தொட்டு சேவை செய்யும் பேறு பெற்றுவருமான ஆஞ்சநேயர் அங்கு தோன்றினார். ஸ்ரீராமரின் பாதங்களின் முன்பாக முட்டியிட்டு அந்த பாதங்களை உளமார தியானித்து தன் இதயத்தில் ஸ்ரீராமர் பாத உருவத்தை நன்கு பதியவைத்துக் கொண்டார். பின்னர் ஸ்ரீராமபக்தரான ஆஞ்சநேயரின் பாதங்களை பின் தொடர்ந்து ஸ்ரீராமரின் பாதங்கள் ரிஷ்யமுக பர்வதத்தில் ஏறி சுக்ரீவர் தங்கியிருந்த குகைக்குள் நுழைந்தன.
ஸ்ரீராமரும் சுக்ரீவரும் நண்பர்களாக ஸ்ரீராமரின் பாதங்கள் அக்னியை வலம் வந்தன. சுக்ரீவர் ஸ்ரீராமரின் பாதங்களில் விழுந்து வணங்கினார். அதன் பிறகு மிருகங்களை வேட்டையாடும் க்ஷத்ரிய தர்மப்படி ஸ்ரீராமரின் பாதங்கள் ஒரு மரத்தின் பின்னால் திடமாக நிற்க ஸ்ரீராமர் ஒரே பாணத்தால் வாலியை வீழ்த்தினார். தரையில் கிடந்த வாலியை நோக்கி ஸ்ரீராமரின் பாதங்கள் நடந்தன. தரையில் கிடந்ததால் வாலி ஸ்ரீராமரின் பாதங்களை முதலில் பார்த்தான். அதனால் அவன் தன் குற்றங்களை உணர்ந்தவனாக செய்த பாவங்களின் தண்டனையை அடைந்தவனாக புனிதமடைந்து தன் மகனான அங்கதனை ஸ்ரீராமரின் பாதங்களில் ஒப்படைத்து சுவர்க்கம் சென்றான்.
ஸ்ரீராமரின் அருளால் சுக்ரீவன் கிஷ்கிந்தையின் அரசனானதும் மழைக் காலம் துவங்கியது. அந்த மழைக் காலம் முடியும் வரை ஸ்ரீராமரின் பாதங்கள் பிரஸ்ரவண மலையின் ஒரு குகையை விட்டு எங்கும் செல்லவில்லை. மழைக்காலம் முடிந்த பிறகு ஆஞ்சநேயரின் நினைவூட்டுதலாலும் லக்ஷ்மணரின் கோபத்தாலும் சுக்ரீவர் ஸ்ரீராமரின் பாதங்களில் விழுந்து வணங்கினார். தான் திரட்டிய மிகப் பெரிய படையை ஸ்ரீராமரின் பாதங்கள் முன் சமர்ப்பித்தார்.
ஸ்ரீராமரின் பாதங்களில் விழுந்து வணங்கி ஆஞ்சநேயர் அங்கதன் தலைமையில் தென் திசை நோக்கிச் சென்றார். ராம நாமத்தை ஜபித்தபடியும் ஸ்ரீராமரின் பாதங்களை துதித்தபடியும் சென்றதால் ஆஞ்சநேயர் பல தடைகளையும் மீறி இலங்கையில் அன்னை சீதையைக் கண்டார். ஸ்ரீராமர் தந்த மோதிரத்தை சீதையிடம் கொடுத்து ஸ்ரீராமரின் பாதங்களை வர்ணிக்க வந்திருப்பவர் ஸ்ரீராம தூதனே என்று அன்னை சீதை தைரியமடைந்தாள். அன்னை சீதைக்கு நல்வார்த்தைகள் கூறி உறசாகப் படுத்திய ஆஞ்சநேயர் ஸ்ரீராம நாமத்தை ஜபித்த படியும் ஸ்ரீராமர் பாதத்தை துதித்தபடியும் பல அரக்கர்களை கொன்று, ராவணனை எச்சரித்து, இலங்கையை கதி கலக்கி, தீக்கிரையாக்கினார். பின்னர் ஸ்ரீராமரின் பாதத்தை துதித்தபடி ஸ்ரீராமரை அடைந்து ஸ்ரீராமரின் பாதங்களில் அன்னை சீதை தன்னிடம் தந்த சூடாமணியை சமர்ப்பித்தார்.
ஸ்ரீராமர் இலங்கையின் மேல் போர் தொடுக்க முடிவு செய்ய சுக்ரீவரின் படைகள் உற்சாகத்தோடு போருக்கு தயாராகின. அப்பொழுது ஸ்ரீராமர் ஆஞ்சநேயரின் தோள்களில் அமர்ந்து கொள்ள ஸ்ரீராமரின் பாதங்கள் ஆஞ்சநேயரின் நெஞ்சை உரசியபடி காற்றில் தொங்கிக் கொண்டு இலங்கை நோக்கி சென்றன. ஆஞ்சநேயரும் ஸ்ரீராமரின் பாதங்களை பிடித்து விட்டுக் கொண்டும் ஆனந்தமாக ஸ்ரீராமர் புகழை பாடிக் கொண்டும் நடந்து சென்றார். இவ்வாறாக ஸ்ரீராமரின் பாதங்கள் இந்தியப் பெருங்கடலின் வடகரையை அடைந்தன.
ஸ்ரீராமரின் பாதங்கள் ஆர்ப்பரிக்கும் கடலின் முன்பாக நின்று கொண்டு இருந்தன. அப்பொழுது ஸ்ரீராமரின் பாதங்களே சரண் என்று விபீஷணன் தனது நான்கு மந்திரிகளுடன் அங்கே வந்து ஸ்ரீராமரின் பாதங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டான். தனது இந்தப் புனிதப் பாதங்களில் எவர் சரண் புகுகிறார்களோ அவர்களை புறந்தள்ளுவதில்லை என்ற கொள்கையுடைய ஸ்ரீராமர் அவனை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டு இலங்கையின் அரசனாக அபிஷேகம் செய்து வைத்தார்.
அதன் பிறகு ஸ்ரீராமர் தனது பாதங்களை தர்ப்பைப் புல்லின் மேல் வைத்துக் கொண்டு சயனித்த படி கடலை நோக்கி தவமிருந்தார். ஆறுநாட்கள் அந்நிலையில் அவர் இருந்தும் கடலரசன் மனம் இரங்காததால் கோபமுற்ற அவர் தனது பாதங்களை பூமியில் உதைத்து எழுந்தார். பின்னர் ஸ்ரீராமரின் பாதங்கள் திடமாக நிற்க ஸ்ரீராமர் கடலை நோக்கி பல திவ்ய அஸ்திரங்களை தொடுத்தார். இதனால் கலக்கமடைந்த கடலரசன் குற்றம் புரிந்தவர்களுக்கும் அபயம் அளிக்கக் கூடிய ஸ்ரீராமரின் பாதங்களை பயத்தால் பக்தியோடு பிடித்துக் கொண்டான். தன்னை கடந்து செல்ல பாலம் அமைக்கும் யோசனையயும் கூறினான்.
இதைத் தொடர்ந்து நளன் என்ற வானரன் பாலம் அமைக்க ஸ்ரீராமரின் பாதங்கள் அந்த பாலத்தில் அடியெடுத்து வைத்தன. அப்பாலத்தின் பாறைகளை மிதித்து அப்பாறைகளை புனிதப் படுத்திய படி நடந்து சென்று ஸ்ரீராமரின் பாதங்கள் இலங்கையை அடைந்தன. அங்கே சுவேல மலை மீது ஸ்ரீராமரின் பாதங்கள் ஏற ஸ்ரீராமர் இலங்கையை பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து ஆரம்பித்த போரில் ஸ்ரீராமரின் பாதங்கள் திடமாக நிற்க ஸ்ரீராமர் பல அரக்கர்களை கொன்று குவித்தார். போரில் தன் படைகள் அழிவதை அறிந்த ராவணன் தாமே யுத்தத்திற்கு வந்தான். அப்பொழுது ஸ்ரீராமரின் பாதங்கள் திடமாக தரையில் நிற்க ஸ்ரீராமர் அவனை சரமாரியால் தரையில் விழச் செய்தார். தலை குப்புற விழுந்த ராவணன் தன் தலையை தூக்கிய பொழுது ஸ்ரீராமரின் பாதங்களை தரிசித்தான். அந்தப் புண்ணியத்தால் அவனுக்கு அன்று மரணம் ஏற்படவில்லை. ஸ்ரீராமர் அவனுக்கு அவகாசம் தந்து அனுப்பி வைத்தார்.
ஸ்ரீராமரின் பாதங்கள் திடமாக நிற்கவும் வேகமாக முன்னும் பின்னும் ஓடிய வண்ணம் இருக்கவும் ஸ்ரீராமர் கும்பகர்ணன் முதலான பல கொடிய அரக்கர்களை கொன்று குவித்தார். பன்னீராலும் நன்னீராலும் அபிஷேகம் செய்யப் பட்டு எப்பொழுதும் அழகாகவும் மணம் மிக்கதாகவும் இருந்த ஸ்ரீராமரின் பாதங்கள் யுத்தத்தில் மண்ணாலும் ரத்தத்தாலும் அழுக்கடைந்தன.
இந்திரஜித் மாயையால் போர்புரிந்து வானரப் படைக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தினான். பின்னர் தன் மாயபலத்தை அதிகரிக்க நிகும்பலை சென்று யாகம் செய்தான். அந்த யாகத்தை தடுக்க முடிவு செய்த லக்ஷ்மணர் ஸ்ரீராமரின் பாதங்களை நன்னீரால் அபிஷேகம் செய்து மலர்களால் பூஜித்து தனக்கு அனுமதி கொடுக்கும் படி வேண்டிக் கொண்டார். ஸ்ரீராமரின் அனுமதியோடு ஸ்ரீராமரின் பாதங்களை துதித்தபடி இந்திரஜித்தோடு போர் புரிந்த லக்ஷ்மணர் ஸ்ரீராமரின் சத்திய விரதத்தின் மேல் சத்தியம் செய்து ஒரு அம்பை எய்ய அவ்வம்பு இந்திரஜித்தின் தலையை கொய்தது. இவ்வெற்றியை லக்ஷ்மணர் ஸ்ரீராமரின் பாதங்களில் சமர்ப்பித்து மகிழ்ந்தார்.
இதைத் தொடர்ந்து ஸ்ரீராமர் தனது பாதங்களை திடமாக ஊன்றி நின்று ராவணனின் மூலப்படை முழுவதையும் அழித்தார்.
தன் மூலப் படை அழிந்ததை அறிந்த ராவணன் ஸ்ரீராமரோடு போர் புரிய தன் தேரில் வர ஸ்ரீராமரின் பாதங்கள் இந்திரன் அனுப்பிய தேரில் ஏறிக் கொண்டன. தொடர்ந்து நடந்த யுத்தத்தில் ராவணனை ராமர் கொன்றார். அப்பொழுது லக்ஷ்மணரும் ஆஞ்சநேயரும் விபீஷணரும் சுக்ரீவரும் ஸ்ரீராமரின் பாதங்களில் மலர்களை சமர்ப்பித்து ஸ்ரீராமரை கொண்டாடினார்கள்.
அப்பொழுது ராவணனின் மனைவி மண்டோதரி அழுதபடி அங்கே வர அவள் நிழலைக் கூட மிதிப்பது அப்பெண்ணிற்கு செய்யும் அவமானம் என ஸ்ரீராமரின் பாதங்கள் அவ்விடம் விட்டு விலகி நின்றன.
ராவணனின் இறுதிக் கடன்களை முடித்த விபீஷணர் ஸ்ரீராமரின் பாதங்களை ஒரு தாம்பூலத்தின் மீது வைத்து நீராட்டினார். ஸ்ரீராமரின் பாதங்கள் மேல் பன்னீரும் சந்தனமும் பூசினார். இப்படியாக ஸ்ரீராமரின் பாதங்களை பூஜித்த விபீஷணர் ஸ்ரீராமரின் பாதங்களை அபிஷேகம் செய்த நீர் கொண்டு தனக்கு பட்டாபிஷேகம் செய்து கொண்டார்.
அரசர் விபீஷணர் அன்னை சீதையை ஸ்ரீராமர் முன்பு அழைத்து வர ஸ்ரீராமர் சீதையை ஏற்கவில்லை. அப்பொழுது அன்னை சீதை தான் தினமும் தொழும் ஸ்ரீராமரின் பாதங்களை தியானித்த வண்ணம் அக்னியில் பிரவேசம் செய்ய அக்னி தேவனும் பிரம்மாவும் சிவபெருமானும் இந்திரனும் இன்னும் பல தேவர்களும் அங்கு தோன்றினார்கள். அப்பொழுது பிரம்மா எந்தப் பாதங்கள் மனித குலம் உய்யவும் தேவர்களை காக்கவும் தர்மத்தை நிலை நாட்டவும் மண்ணில் இறங்கி கரடு முரடான காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிந்தனவோ அந்தப் பாதங்களை நான் தொழுகிறேன் என்றார். மேலும் அவர் எந்தப் பாதங்கள் பாற்கடலில் பாம்பணையில் சுகமாக இருந்தனவோ எந்தப் பாதங்கள் பின் ஒரு கருவினில் புகுந்தனவோ எந்தப் பாதங்கள் எல்லா மனிதர்களின் பாதங்களைப் போலவே சிறிதாக இருந்து பின் மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்தனவோ அந்தப் பாதங்களை நான் தொழுகிறேன் என்றார். மேலும் பிரபுவே ஸ்ரீராமா தாங்கள் தங்கள் விருப்பத்தாலேயே தங்களின் தெய்வீக பின் புலத்தை மற்ற மனிதர்கள் போலவே மறந்துள்ளீர்கள். தாங்களும் மற்ற மனிதர்கள் போல தங்களின் கடமையை நல்ல படியாக செய்துவர தாங்கள் விரும்பி ஏற்றுக் கொண்ட இந்த அஞ்ஞானம் நீங்கி தாங்கள் தங்களின் சுயரூபத்தை உணர்வீர்கள். அதன் பிறகு மனிதப் பிறவி நிறைவு பெற தாங்கள் தங்கள் நிரந்தர இருப்பிடமான வைகுண்டம் செல்வீர்கள். இது நீங்கள் பிறக்கும் முன் நீங்கள் வகுத்த திட்டமாகும் அதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன் என்று கூறினார். அக்னிதேவன் அன்னை சீதையை ஸ்ரீராமரிடம் ஒப்படைத்து அன்னை சீதையின் தூய்மையை புகழ்ந்துரைத்து ஸ்ரீராமரின் பாதங்களை வணங்கி விடைபெற்றார்.
ஸ்ரீராமரின் பாதங்கள் அதைத் தொடர்ந்து விபீஷணர் கொண்டு வந்த புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டு அயோத்யை நோக்கிப் பயணித்தன. வழியில் பரத்வாஜரின் ஆசிரமத்தை அடைந்து அங்கு அவரால் அன்போடு உபசரிக்கப்பட்டன. அதன் பின்னர் ஸ்ரீராமரின் பாதங்கள் புஷ்பகவிமானத்தில் ஏறி நந்திகிராமம் சென்றடைந்தன. அங்கு ராமர் போலவே மரவுரி சடை தரித்து காத்திருந்த பரதர் ஸ்ரீராமரின் பாதங்களை பாசத்தோடு முத்தமிட்டு மகிழ்ந்தார். ஸ்ரீராமரின் பாதங்களை பரத சத்ருக்னர்கள் நன்னீராலும் பன்னீராலும் நன்கு கழுவி சந்தனத்தாலும் குங்குமத்தாலும் பொட்டிட்டு பூஜித்து மகிழ்ந்தார்கள். பின்னர் ஸ்ரீராமரின் இந்த பாதங்கள் பரதர் ஓட்டிச் சென்ற தேரில் சுகமாக இருந்த படி தசரதரின் அரண்மனையை அடைந்தன. அங்கே ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேகம் நடந்த பொழுது ஸ்ரீராமர் தன் பாதங்களை பொன்னாலும் மென்பஞ்சாலும் பட்டாலும் ஆன ஒரு மேடையில் வைத்தபடி சுகமாகவும் கம்பீரமாகவும் வீற்றிருந்தார். ஸ்ரீராமரின் பொற்பாதங்களுக்கடியில் ராம ராஜ்யம் மலர்ந்தது.
அதன்பிறகு ஸ்ரீராமரின் பாதங்கள் அதிக தூரங்கள் நடக்கவில்லை. அதிகாலையில் அன்னை சீதையால் பதி பக்தியோடு ஸ்ரீராமரின் பாதங்கள் பூஜிக்கப் பட்டன. அதன்பிறகு ஸ்ரீராமரின் பாதங்களை லக்ஷ்மண பரத சத்ருக்னர்கள் பூஜிப்பார்கள். ஆஞ்சநேயர் எப்பொழுதும் ஸ்ரீராமரின் பாதங்களை தரிசித்த படியும், ஸ்ரீராமரின் பாதங்களைப் பிடித்து விட்டுக் கொண்டும் ஸ்ரீராமரின் பாத விரல்களுக்கு சொடுக்கெடுத்துக் கொண்டும் ஆனந்தமாக இருந்தார்.
பல்லாண்டுகளுக்குப் பின் ஸ்ரீராமரின் பாதங்கள் சரயு நதி நோக்கி நடந்தன. ஸ்ரீராமர் சரயு நதியில் இறங்கி மஹாவிஷ்ணுவாக ஆற்றிலிருந்து வெளிப்பட்டார். அங்கே அவருக்காக காத்திருந்த கருடரின் மேல் ஸ்ரீ ராமர் மஹாவிஷ்ணுவாக ஏறி அமர்ந்தார். நீலவண்ணமயமான அவருடைய பாதங்கள் காற்றையும் ஆகாயத்தையும் தொட்டு புனிதப் படுத்தியபடி வைகுண்டம் நோக்கி சென்றன.
ஸ்ரீராமரின் பாதங்களை புகழ்ந்தபடி ஸ்ரீராமரின் பாத சுவடுகளை பின்பற்றி அயோத்யா நகர மக்களும் சரயு நதியில் இறங்கி சுவர்க்கம் சென்றார்கள்.
ஸ்ரீராமரின் பாதங்களின் மகிமைகளைக் கூறும் இந்த ஸ்ரீராமர் பாத ராமாயணத்தை படிக்கும் யாவரும் எல்லா நலமும் வளமும் பெற வேண்டுமென பிரார்த்தித்து ஸ்ரீராமரின் பொற்பாதங்களை வணங்குகிறேன்.
4 comments:
ஸ்ரீராமரின் பொற்பாதஙள் திவ்ய தரிசனம் அளித்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
மிக்க நன்றி! ஸ்ரீராமஜெயம்!!
ஆகா, எவ்வளவு அழகான பதிவு. ஸ்ரீராமரின் தாமரைப் பாதங்களின் மீதான் உங்கள் அன்பு தெளிவாகத் தெரிகிறது. பாதிதான் வாசித்திருக்கிறேன். மீண்டும் வருவேன்.
ஸ்ரீ ராம ஜெயம்.
மிக்க நன்றி கவிநயா!
வாங்க... மீண்டும் மீண்டும்.... :)
ஸ்ரீ ராம ஜெயம்!!!
Post a Comment