CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

ஸ்ரீராமர்புகழ்

நம்மைப்போல சிரித்தவர் நம்மைப்போலே அழுதவர்
நம்மைப்போலே காதலித்து காதலோடு வாழ்ந்தவர்
இழப்புகளைக் கண்டவர் மீண்டெழுந்து வந்தவர்
உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகங்களை அறிந்தவர்
செல்வத்தையும் கண்டவர் ஏழ்மையையும் கண்டவர்
செல்வத்திலும் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தவர்

விதியென்னும் புயலிலே ஆடாத மரமல்லர்
அத்தனை புயலிலும் வீழாத மரமவர்
தன்னுயிராம் சீதையை தியாகம்செய்த மேன்மையர்
இதயத்தில் சீதையை இழக்காத ஆண்மையர்
புரிதலில்லா மக்களை பொறுத்துக்காத்த பூமியர்
புரிந்தபின் இதயத்தில் உயிரான சாமியர்

என்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே
என்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே
என்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே
என் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே
என் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே!

ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்

கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
துறு துறு சிறுவன் தசரத ராமர்
கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்

இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
ராஜ குருவாம் பரத ராமர்
தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
அன்புள்ள கணவன் சீதா ராமர்

உற்ற தோழன் குகனின் ராமர்
உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
தெய்வ உருவாம் அனுமத் ராமர்
ஞான சூரியன் ஜாம்பவ ராமர்

மூத்த மகனாம் சுமித்ர ராமர்
மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
மன்னித்தருளும் கைகேயே ராமர்
மகனே போன்றவர் ஜனக ராமர்

எளிய விருந்தினர் சபரியின் ராமர்
அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
பாப வினாசனர் கோதண்ட ராமர்

ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்
பெண்கள் போற்றும் கற்புடை ராமர்
மக்கள் மகிழும் அரசுடை ராமர்
பக்தர் நெகிழும் பண்புடை ராமர்

வேள்விகள் காக்கும் காவலன் ராமர்
சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்
இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
திருமண நாயகன் ஜானகி ராமர்

சிவ வில் முறித்த பராக்ரம ராமர்
ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
கடலை வென்ற வருண ராமர்
பாலம் கண்ட சேது ராமர்

மரம் ஏழு துளைத்த தீர ராமர்
மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
குலப் புகழ் காத்த சூர்ய ராமர்

சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்
தாயுமானவர் லவகுச ராமர்
தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்

கீதை தந்த கண்ணன் ராமர்
கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
சிவனை வணங்கும் பக்த ராமர்
சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்

முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
காந்தியின் கடவுள் சத்திய ராமர்
அறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்

ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்

ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்
ராம் ராம் என்றால் உவகை பெருகும்
ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
ராம் ராம் என்றால் தர்மம் புரியும்

ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
ராம் ராம் என்றால் வெற்றி விழையும்
ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்

ராம் ராம் என்றால் மனது அடங்கும்
ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்
ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்

ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
இன்பம் எல்லாம் விரைவில் கூடும்

ஸ்ரீராமபுண்யஜெயம்

ஸ்ரீராமபுண்யஜெயம்

பெரிய குரு தட்சணை

தேவகிநந்தன் வசுதேவபுத்ரன்
யசோதேயன் நந்தகுமாரன்

ஆயன் மாயன் சேயன் தூயன்
இலையன் சிலையன் களையன் மலையன்
அமிழ்ந்தவன் உமிழ்ந்தவன் விழுங்கினன் முழங்கினன்
உதைத்தவன் வதைத்தவன் கதைத்தவன் சிதைத்தவன்

ஆலன் லீலன் சீலன் ஞாலன்
பாலன் வாலன் காலன் காலன்
குறும்பன் கரும்பன் இரும்பன் துரும்பன்
ஆடலன் விளையாடலன் கூடலன் குழலூதினன்

ராதையன் பூங்கோதையன்
பாதையன் நற்கீதையன்
துகிலிழுத்தவன் துகிலளித்தவன்
உடனிருப்பவன் துயரறுப்பவன்

உரலுருட்டினன் உறித்திருட்டினன்
தோலிருட்டினன் பொய்புரட்டினன்
மலையெடுத்தவன் குடைப்பிடித்தவன்
தேர்ச்செழுத்தினன் தேரழுத்தினன்

மண்ணையுண்டவன் வெண்ணையுண்டவன்
கீரையுண்டவன் தோலையுண்டவன்
அவலையுண்டவன் அகிலமுண்டவன்
அறிவுக்குவிருந்தினன் மனதுக்குமருந்தினன்

ஏகன் அனேகன் ப்ரணவன் ப்ராணன்
ஈகன் இகபரன் அரங்கன் சுரங்கன்
மயக்கினன் கலக்கினன் விளக்கினன் விளக்கினன்
லயித்தவன் ஜெயித்தவன் நழுவினன் சிறையினன்

பன்முகன் இன்முகன் நன்முகன் நாயகன்
இன்னகன் விண்ணகன் மண்ணகன் தாயகன்
இன்மனன் நன்மனன் பொன்மனன் பூமணன்
சற்குணன் பொற்குணன் நற்குணன் நாரணன்

மேஷன் ரிஷபன் மிதுனன் கடகன்
சிம்மன் கன்யன் துலான் விருச்சிகன்
தனுஷன் மகரன் கும்பன் மீனன்
கிரகன் நட்சத்திரன் நாடியன் நற்சோதிடன்

முதலையறுத்தவன் யானைவிடுத்தவன்
கஜேந்திரவரதன் நரேந்திரவதனன்
உரலையிழுத்தவன் மரத்தைவிடுத்தவன்
நளகூபரவரதன் நலமேதருவதனன்

ஆமேய்த்தவன் ஆதேய்த்தவன்
புல்லூட்டினன் பால்கூட்டினன்
ஆவருடினன் ஆதடவினன்
ஆசுற்றினன் ஆபற்றினன்

ஆவணைத்தவன் ஆவனைத்தவன்
ஆமயக்கினன் ஆயியக்கினன்
ஆவுக்கொருநண்பன் ஆவிரும்புமன்பன்
ஆமணிக்கிசைவன் ஆமணியின்னிசையன்

காளிங்கநர்த்தனன் ஆலிங்கனர்த்தனன்
ராசலீலாதாரி பரமவுபகாரி
அகயோகியன் சுகபோகியன்
தவவீரியன் சுபகாரியன்

ஸ்ரீபாண்டவதூதன் ஸ்ரீபார்த்தகீதன்
பான்சசன்யசத்தன் குருட்சேத்திரயுத்தன்
பரீட்சீத்தைமீட்டான் தற்பெருமைகாட்டான்
இஷ்டத்துக்குக்கல்யாணன் பிரம்மச்சர்யப்ரமாணன்

வாழைபோல்செழிப்பன் ஆலைமேல்மிதப்பன்
ஊழிதோறும்பிறப்பன் வாழியெனவுரைப்பன்
அருந்தருமகற்பன் பெருஞ்சத்யகவசன்
கடமையிருகண்ணன் கண்ணியகருமன்னன்

ஆனந்தசயனன் ஆனந்தநடனன்
கரும்புஜகசயனன் கரும்புஜகநடனன்
நவநீதசோரன் தங்கமணியாரன்
புன்முறுவல்காரன் கீர்த்தியபாரன்

தோப்புக்கரணன் அபிஷேகன் அலங்காரன் புகழாரன்
பொன்னாரன் பூவாரன் பல்லாரன் சொல்லாரன்
மலராரன் மல்லியாரன் முத்தாரன் மணியாரன்
தாமரையாரன் வெண்தாமரையாரன்
செண்பகமலராரன் செந்தாமரையாரன்

கலியமூர்த்தி எளியமூர்த்தி இனியமூர்த்தி புனிதமூர்த்தி
மறைமூர்த்தி மலைமூர்த்தி சத்யமூர்த்தி நித்யமூர்த்தி
வரதமூர்த்தி விரதமூர்த்தி தேவமூர்த்தி தெய்வமூர்த்தி
அன்புமூர்த்தி அகிலமூர்த்தி அண்டமூர்த்தி உண்டமூர்த்தி

கோப்ரியன் கோபிப்ரியன் ஆப்ரியன் ஆவினப்ரியன்
கோநேசன் கோதாசன் கோவாசன் கோவீசன்
கோபாலன் கோவாளன் கோவைத்தியன் கோவைத்தனன்
பால்சோறுப்ரியன் திருவெண்ணைப்ரியன்
தயிர்சாதப்ரியன் நீர்மோர்ப்ரியன்

குதிரைமுகன் கூர்மமுகன் பன்றிமுகன் சிங்கமுகன்
ராமமுகன் கிருஷ்ணமுகன் கருணைமுகன் பொறுமைமுகன்
நல்லமுகன் ஞானமுகன் வல்லமுகன் வரதமுகன்
சூர்யமுகன் சந்திரமுகன் மலர்ச்சிமுகன் குளிர்ச்சிமுகன்

திருத்துழாய்ஆரன் சதுர்வேதஆரன்
பிரபந்தஆரன் அபங்கஆரன்
திருவாய்மொழியாரன் திருப்பாவைமணியாரன்
பல்லாண்டுமுத்தாரன் நாச்சியார்மொழியாரன்

திருமழிசைத்தமிழாரன் மதுரகவிமொழியாரன்
திருமாலையாரன் ஸ்ரீசுப்ரபாதன்
கொஞ்சுகுலசேகரபிஞ்சுதமிழாரன்
திருமங்கைமன்னன்பெரியமொழியாரன்

திருப்பாவையாரன் நாச்சிமொழியாரன்
திருமொழியாரன் சந்தவிருத்தாரன்
திருமாலையாரன் திருவெழுச்சியாரன்
அன்றலர்ந்ததாமரையன் சென்றுளவுமாநிறையன்
கொண்டலுடைவான்நிறத்தன் வெள்ளைமனபால்நிறத்தன்

ஸ்ரீராமானுஜஜெயம்

ஸ்ரீராமானுஜஜெயம்

இளையபெருமாள் துதி

அவர் படுக்கப்போனால் அவர் படுக்க முன்படுத்தீர்
அவர் பிறக்கப்போனால் அவர் சிறக்க பிறப்பெடுத்தீர்
அவர் மழையிலானால் நனையவிடாமல் நீர் குடையானீர்
அவர் மழையானால் சிதறவிடாமல் நீர் கூடையாவீர்

அவர் அமரப்போனால் அவர் அமர ஆசனமாய்
அவர் ஆளப்போனால் அவர் ஆள தாசனுமாய்
அவர் நிற்கப்போனால் அவர் நிற்க நீர் மேடை
உமக்கு கட்டளையாவதவர் முகக்குறிப்பு கண்ஜாடை

அவர் தமையனானால் அவர் அணைக்க நீர் தம்பி
அவர் தம்பியானால் அவரை அணைக்க நீர் தமையன்
அவர் தலைவனானால் அவருக்கு நீர் தொண்டன்
நீர் தலைவனானால் உமக்கு அவர் தொண்டன்

அவர் வேதமானால் நீர் விளக்கம்தரும் ஆசான்
அவர் கீதையானால் நீர் பொருளுரைக்கும் பாஷ்யான்
அவர் நடக்கும் பாதையெல்லாம் நீர் முன்சென்று திருத்துவீர்
அவருக்காய் உண்ணாமல் உறங்காமல் உம்மைநீர் வருத்துவீர்
பொன்ஆதிஷேஷ ராமானுஜேஷ
லக்ஷ்மண அருளாளே பலராமப் பெருமாளே
உடையவரே பாஷ்யரே உடையளவில் காஷ்யரே
எதிராஜ மூர்த்தி எண்ணற்ற கீர்த்தி

கோவிலொரு கோபுரம் சுருக்கமாய் ஏறி
நாராயண மந்திரம் முழக்கமாய் கூறி
அனைவருக்கும் மோக்ஷம் வழங்கினீர் வாரி
நரகம் புக துணிந்த பரம உபகாரி

இளையபெருமாளே உம் பாதம் போற்றி
லக்ஷ்மணப்பெருமாளே உம் சேவை போற்றி
பலராமப்பெருமாளே உம் கீர்த்தி போற்றி
ராமானுஜேஷரே உம் தொண்டு போற்றி

கிருஷ்ண பலராமரே போற்றி
பலராம கிருஷ்ணரே போற்றி
ராம லக்ஷ்மணரே போற்றி
லக்ஷ்மண ராமரே போற்றி!!

ஸ்ரீராமதூதஜெயம்

ஸ்ரீராமதூதஜெயம்

சின்ன குரு தட்சணை

அஞ்சனை பெற்ற அருந்தவப் புதல்வனே
வஞ்சனையற்ற பக்தியில் முதல்வனே
ராம பக்தியில் தன்னை இழந்திடும்
தன்னை இழப்பதில் உள்ளம் நெகிழ்ந்திடும்
நல்ல வித்தையில் நீயென் முன்னோடி
அதை நான் கற்றிட கேட்கிறேன் மன்றாடி

மீண்டும் மீண்டும் கனவில் வந்து
உள்ளம் தளரா ஊக்கம் தந்து
எனை ராம பக்தனாய் ஆக்கிய குருவே
பணிவின் துணிவின் பக்தியின் உருவே
எப்படி சொல்வேன் நன்றிகள் உனக்கு
கைம்மாறு செய்ய வக்கில்லை எனக்கு

காமக் களியாட்டம் நிறைந்த இலங்கையில்
ராக்கதர் யாவும் உறங்கும் வேளையில்
ராம தூதனாய் உள்ளே நுழைந்தாய்
ராக்கதர் ஆட்டத்தை அறவே களைந்தாய்
நான் இருந்ததனாலா நடமாடும் இலங்கையாய்
நானுறங்கும் வேளையில் என்னுள்ளே புகுந்தாய்?

ஆணவம் உள்ளவன் நானென புரிந்தும்
காடென வளர்த்த காமங்கள் தெரிந்தும்
கதையோடு எந்தன் கனவில் தோன்றினாய்
பக்தியின் விதையை சேற்றில் ஊன்றினாய்
ராவணன் மமதையை நெருப்பால் எரித்தாய்
என் மமதையை மட்டுமேன் அன்பால் கரைத்தாய்?

எண்ணுருப்பு தேய நிலத்தில் விழுகிறேன்
ராம பக்தனே உன் பாதம் தொழுகிறேன்
நீ கைகூப்பும் நிலையை மனதில் கொணர்கிறேன்
ஆணவம் அற்றல் இதுவென உணர்கிறேன்
இறை படைப்பில் உனைவிட செல்வந்தர் இல்லை
இதை உணர்ந்ததால் என்னுள் ஏழ்மைகள் இல்லை

அடியேன் பணிகிறேன் உன் பாதம் தொழுகிறேன்
இன்னொரு இமயமே உன் கால்களில் விழுகிறேன்
இவ்வுலகம் எனையும் உனைப் போல கொள்ளட்டும்
இன்னொரு அனுமன் இவனென்று சொல்லட்டும்

ஸ்ரீராமருக்காய் மலைசுமந்த உன் தோளுக்கு வணக்கம்
வெண்கல மணியணிந்த உன் வாலுக்கு வணக்கம்
ஸ்ரீராமர்புகழ் பாட நீ மீட்டும் யாழுக்கு வணக்கம்
உன்னையே தாங்கி நிற்கும் உன் காலுக்கு வணக்கம்

ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்!!

ரோம ரோமமு ராம நாமமே!

ஓம் ஸ்ரீசீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமந்த் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மணே நமஹ!

கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.
- நம்மாழ்வார்


சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்

எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்

ஸ்ரீராம காயத்ரி

ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்

ஸ்ரீ சீதா காயத்ரி

ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்

ராம பாத காயத்ரி

ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்

வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே

கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே

ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே

நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே

ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை

ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்
-கம்பர்

நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே

-கம்பர்

மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்

நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கிய
ர்

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்

ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்

காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்

நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்

ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்

ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-
சிவவாக்கியர்

காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்

திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி

டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே

ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே

சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?

ராம்ராம்

அம்மா பரமேஸ்வரியை
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்

கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்

இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!

சுவாமி சின்மயானந்தர்

சுவாமி சின்மயானந்தர்
என் கீதாச்சார்யார்

நன்றியுரை

சின்மையா னந்தரை சிந்தையுடன் நினைக்கிறேன்
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது

அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது

இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது

மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது

கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது

அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ

அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!

சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!

சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!

Friday, May 9, 2014

பதினாறு புகழ் ராமர்




பெண்மைமதித்தது  வேள்விகாத்தது
வில்லைமுறித்தது வில்லைதரித்தது
கட்டளைஏற்றது துறவைஏற்றது
சத்தியம்காத்தது விரதம்காத்தது

குறிதப்பாதது பொறிதப்பாதது
விருந்தைஏற்றது சரணைஏற்றது
ஒருமுறைவிட்டது மறுமுறைகொன்றது
தியாகம்செய்தது முக்திதந்தது


1. பெண்மை மதித்தது:

தாடகையின் வதையின் பொழுது அவள் ஒரு பெண் என்பதால் அவளுடைய தாக்குதலுக்கு உடனடியாக எதிர் தாக்குதல் செய்யாமல் ஸ்ரீராமர் நின்றார். பின் விஸ்வாமித்ரரின் கட்டளையேற்று அவளைக் கொன்றார்.

இதைப் பற்றி குலசேகர ஆழ்வார் சொல்வதைப் பாருங்கள்.

"திண்டிறலாள் தாடகை தன் உரமுருவ சிலை வளைத்தாய்"

ராமர் தாடகையின் உரத்தை அதாவது தன்னம்பிக்கையை அவளிடம் இருந்து பிரிப்பதற்காகவே தான் தன் கோதண்டத்தை வளைத்தார். அவளைக் கொல்லும் எண்ணம் அவருக்கு அப்பொழுது இல்லை.

அவள் தாக்குதல்கள் அனைத்தையும் முறியடித்துக் காட்டினார். யுத்த மொழியில் உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று முதலில் அவளுக்கு சொல்லிப் பார்க்கிறார். ஆனால் அவளோ அதை புரிந்து கொள்வதாக இல்லை.மறுபுறம் விஸ்வாமித்ரரும் அவளிடம் இந்த அணுகுமுறையெல்லாம் வேலைக்கு ஆகாது என்பதை சொல்லிக் கொண்டே இருக்கிறார். அதை ராமரும் இப்பொழுது தன் யுத்த பாணியால் உறுதி செய்து விட்டார். அதன் பிறகு தான் தாடகையை கொல்ல ஸ்ரீராமர் முடிவு செய்து ஒரே அம்பில் அவளைக் கொன்றார்.

இங்கே ஸ்ரீராமரின் யுத்த பாணியை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஸ்ரீராமர் ஒருவரோடு சண்டையிடும் பொழுது அவர் நான்கு படிநிலைகளை கையாள்வார்.

1. எதிரியின் தாக்குதல்கள் அனைத்தையும் முறியடித்துக் காட்டுவது.
2. எதிரியின் உயிருக்கும் உருப்புகளுக்கும் சேதமில்லாமல் எதிரியைத் தாக்குவது. எதிரியின் ஆயுதங்களை உடைப்பது, வாகனங்களைத் தாக்குவது, க்ரீடம் கவசம் ஆகியவற்றை தாக்குவது.
3. எதிரியின் கைகள் மற்றும் கால்களைத் தாக்குவது.
4. எதிரியின் உயிருக்கு குறி வைப்பது.



2. வேள்வி காத்தது : 

விஸ்வாமித்ரரின் யாகம் காத்தது. இதை செய்யும் பொழுது ஸ்ரீராமருக்கு பனிரெண்டு வயது நிரம்பியவராக இருந்தார்.

3. வில்லை முறித்தது :


ஐயாயிரம் வீரர்கள் இழுத்து வந்த சிவவில்லை ஒரு கையால் தூக்கி நாணேற்ற முயன்றது. இங்கேயும் வில்லை முறிக்கும் எண்ணம் ஸ்ரீராமருக்கு இல்லை. அவர் நாணேற்றவே முயற்சித்தார். வில் நெடு நாட்களாக பயன்படுத்தப் படாமல் இருந்ததால் அது முறிந்து விழுந்தது.  

4. வில்லைத் தரித்தது:

பரசுராமர் தந்த விஷ்ணுவில்லை வளைத்து நாணேற்றி அதில் அம்பொன்றை வைத்து சார்ங்கராமனாக பரசுராமர் முன் நின்றது. இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் ஸ்ரீராமரின் சாத்வீக யுத்த முறை தன் வலிமையை நீரூபித்தல் என்ற முதல் நிலையிலேயே வெற்றி பெற்றது. அதற்கு காரணம் எதிருலிருந்த பரசுராமர் தான். அவரும் பெருமாளின் அவதாரம். அவருக்கு அரக்க குணம் கிடையாது. அவருடைய நோக்கமும் வன்முறை கிடையாது. அவருடையே நோக்கம் கர்வம் மிக்க சத்ரியர்களை அழிப்பதே ஆகும். ஸ்ரீராமர் கர்வமற்ற சத்ரியர் என்பது பரசுராமருக்கு புரிந்து விட்டது. ஸ்ரீராமரால் மென்மையான அந்தணர்களுக்கு எந்த கெடுதலும் வராது என்பதை பரசுராமர் புரிந்து கொண்டார். இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஸ்ரீராமர் பரசுராமர் ஆகிய இருவரின் பெருமைகளையும் தான்.

ஸ்ரீராமர் தன் வலிமையை காட்டுவதற்காக வில்லை நாணேற்றிக் காட்டவில்லை. தன் பலம் இத்தகையது என்பதை பரசு ராமர் புரிந்து கொண்டால் சண்டை தவிர்க்கப் படும் என்பதற்காக ஸ்ரீராமர் வில்லை வளைத்துக் காட்டினார்.

பரசுராமர் ராமர் வலிமையானவர் என்பதற்காக சண்டையை கைவிடவில்லை. தான் ஆயுதம் ஏந்திய காரணமான 'சத்ரிய ஆணவம்' ராமரிடம் இல்லை. இரண்டாவது, கையில் ஆயுதம் இருக்கிறது என்பதற்காகவே வலிமையேதுமின்றியே துள்ளிக் கொண்டிருந்த சத்ரியர்கள் மத்தியில் அவ்வளவு பலசாலியாக இருந்தும் தழும்பாத நிறைகுடமான ஸ்ரீராமரைப் பார்த்து பரசுராமருக்கு ராமர் மேல் பெரும் மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டு விட்டது. இதனால் தான் ராமரைக் கையெடுத்து  வணங்கி விட்டு தன் தவவலிமையையும் ராமருக்கே கொடுத்து விட்டு பரசுராமர் அவ்விடம் விட்டு விலகி செல்கிறார். சண்டைக்கு கிளம்பி வந்து விட்டு எதிரி தம்மை விட பலசாலியாக இருக்கிறான் என்பதற்காக சண்டையை பாதியிலேயே கை விட்டு விட்டு விலகிச் செல்ல பரசுராமர் ஒன்றும் கோழையல்ல. அவர் பெருமாளின் வீரத்தினுடைய அவதாரம். உண்மையான வீரனென்பவன் கொண்ட கொள்கைக்காக கடைசிவரை நிற்பானே ஒழிய ஒரு நாளும் தோல்விக்கு அஞ்சி சண்டையை கைவிட மாட்டான். ஆனால் அதே சமயம் சண்டை போட கிளம்பியதற்கான நோக்கங்கள் நிறைவேறி விட்டால் உடனே வரட்டு கௌரவம் பார்க்காமல் எதிர் நிற்பவரிடம் சமாதானம் செய்து கொள்வான். இதைத் தான் இங்கே பரசுராமர் செய்தார்.

உடனே பாவலர்கள் யாவரும் இந்தக் காட்சியைப் பற்றி பாடும் பொழுது பரசுராமரை வென்றவனே, பரசுராமரின் ஆணவத்தை அழித்தவனே என்றெல்லாம் ராமரைப் புகழத் தொடங்கிவிட்டார்கள். அப்படி பரசுராமரைப் பற்றிக் குறைத்தும் இழித்தும் கூறுவது தவறு. 

ராமர் எந்த அளவிற்கு குணத்தில் சிறந்தவரோ அதே அளவிற்கு பரசுராமரும் குணத்தில் சிறந்தவரே.

அப்பா சொன்னார் என்ற ஒரு காரணத்திற்காகவே அம்மாவை சிரமறுத்தார். தாயை சிரமறுத்த மறு கணமே தன் தாயின் உயிர் திரும்ப வேண்டுமென சிறமறுக்க சொன்ன தந்தையிடமே வரமும் கேட்டார். தந்தை சொல்லை தட்டாமை என்பதற்கும் தாய் பாசம் என்பதற்கும் இதைவிடவும் சிறந்த உதாரணம் இருக்க முடியுமோ?

ராமரும் பரசுராமரை வணங்கியே வழியணுப்புகிறார்.

ஸ்ரீராமருக்கு யாரையும் தோற்கடிப்பது பிடிக்காது. அவர் எல்லோரையும் வெல்ல வைத்து மகிழ்பவரே அன்றி யாரையும் தோற்கடித்து மகிழ்பவர் அல்லர். பிறரை தோற்கடித்து அவர்களை விட தான் உயர்ந்தவன் என நினைத்து சந்தோஷப் பட்டுக் கொள்ளும் சிறுபுத்தி என்றுமே ராமருக்கு கிடையாது.

இரண்டு உயர்ந்த ஆத்மாக்களுக்கிடையே புரிதலின்மையால் நிகழ்ந்த ஒரு சிறு தற்காலிக உரசலே அந்த சம்பவமேயன்றி அது இரண்டு சிறுபுத்திக்காரர்கள் தம்மில் யார் உயர்ந்தவர் என தீர்மனித்துக் கொள்ள நடத்திய குடுமிப் பிடி சண்டையன்று. அங்கே யார் பெரியவன் என்பது தீர்மானிக்கப் படவில்லை. சண்டை தேவையா இல்லையா என்பது தான் தீர்மானிக்கப் பட்டது.


5.  கட்டளை ஏற்றது :

கைகேயியின் கட்டளை ஏற்று கானகம் சென்றது. இங்கேயும் புரிந்துக் கொள்ளப் பட வேண்டியது, தசரதர் ராமரைக் காட்டுக்கு போகச் சொல்லக் கிடையாது. கைகேயி தான் தசரதர் சொன்னதாக ராமரிடம் ராமரைக் காட்டுக்குப் போகச் சொல்கிறார். ராமரும் தந்தை சொன்னார் என்று நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது நீங்கள் சொன்னீர்கள் என்றாலே நான் அதை சிரமேற்கொண்டு செய்வேன் என்று சொல்கிறார்.

இங்கே தசரதரின் நிலைப் பாட்டிலும் ஒரு நுட்பமான காரணம் இருக்கிறது.  தசரதர் கைகேயியை மிக எளிதாக அடக்கியிருக்கலாம்.

"உன்னால் ஆனதை பார்த்துக் கொள். நான் ராஜ்ஜியத்தை சபை நடுவே ராமனுக்கு வழங்கி விட்டேன். இனி அது எனதல்ல. உனக்கு நான் வரம் கொடுத்திருக்கிறேன் என்பதற்காக என்னிடம் இல்லாததையெல்லாம் நான் கொடுக்க முடியாது.உனக்கு ராஜ்ஜியம் வேண்டுமென்றால் அதை என் கைக்குள் இருக்கும் பொழுதே கேட்டிருக்க வேண்டும்."  இப்படியெல்லாம் பேசி கைகேயியை மடக்கியிருக்கலாம். அதில் எந்த தர்மசங்கடமும் கிடையாது.

வரம் கொடுக்கிறேன் என்று ஒருவன் சொல்லிவிட்டால் அவன் வரம் பெற்றவனுக்கு அடிமையென்று அர்த்தம் கிடையாது. வரம் பெற்றவன் கேட்பதையெல்லாம் கொடுக்கவேண்டும் என்றும் அர்த்தம் கிடையாது.

நாம் சிவபெருமானிடமும் பிரம்மாவிடமும் இதைக் காணலாம். இறவா வரம் கேட்ட அசுரர்களுக்கெல்லாம் இவர்கள் மறுப்பு சொல்லியிருக்கிறார்கள். உனக்கு ஏதாவது வரம் கொடுக்கிறேன் என்றால் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று தான் பொருளே ஒழிய. முடியாததையெல்லாம் செய்ய வேண்டும் என்கிற அவசியம் கிடையாது.

இதெல்லாம் தசரதருக்கு தெரியாமல் இல்லை. அப்படியிருந்தும் அவர் மனம் உடைந்ததற்கு காரணம், ஸ்ரீராமரின் குணம் அவருக்கு தெரியும். கைகேயி ராஜ்ஜியத்தின் மீது ஆசைக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தாலே ராமர் கைகேயியிடம் ராஜ்ஜியத்தை ஒப்படைத்து விட்டு அவள் விருப்பப் பட்டது போல வனவாசம் செல்வார் என்பது தசரதருக்கு தெரியும். இந்த அறிவு தான் தசரதரை உடைத்துவிட்டது.

கைகேயியை அடக்கத் தெரியாமல் தசரதர் உடையவில்லை. கைகேயி இப்படி பிரச்சனை பண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் ராமரை எப்படி சமாதானப்படுத்தி பட்டாபிஷேகத்தை ஏற்றுக் கொள்ளச் செய்வது என்பது புரியாமல் தான் தசரதர் அந்தச் சூழ்நிலையில் உடைந்து போனார்.

6. துறவை ஏற்றது:

ஸ்ரீராமர் இளவரசராக இருந்த பொழுதும் துறைவை ஏற்றுக் கொண்டார். கடினமான வன வாழ்க்கைக்கு இன்முகத்துடன் தயாராகினார்.


7. சத்தியம் காத்தது:

1. தந்தை சொல்லைக் காத்தது. கைகேயியிற்கு தசரதர் தான் வரம் கொடுத்திருந்தார். வரம் காலாவதியான பின் தான் கைகேயி தசரதரிடம் வரம் கேட்டாள். ஆகையால் தசரதரும் சரி ராமரும் சரி கைகேயியிற்கு எவ்வகையிலும் கட்டுப் பட்டிருந்தவர்கள் அல்ல. ஆனாலும் ஸ்ரீராமருடைய குணம் தந்தை சொல்லைத் தன் சொல்லாக கருதி செயல்படுவது. ராமர் கைகேயியிடம் 'என் அப்பா உங்களுக்கு வரம் கொடுத்தாரா? அதைப் போய் என் அப்பாவிடமே கேளுங்கள்' என்று சொல்லிவிட்டால், தான் வேறு தன் தந்தை வேறு என்பதாகிவிடும். அது ராமரின் குணம் கிடையாது. தந்தையிடம் சித்திக் கேட்கும் பொருள் நம்மிடம் தானே இருக்கிறது அதை நாமே சித்திக்கு கொடுத்து விடலாமே என்கிற ஒரு மனநிலையில் தான் ராமர் காட்டுக்குப் போக சம்மதித்தார். இதனால் அவர் தந்தை வரம் தருவதாக சொன்ன சொல் உண்மையாகி விட்டது.


2.பொய் சொல்லாதிருந்து சத்தியத்தை தன் நாவில் காத்தது.

லக்ஷ்மணர் இந்திரஜீத்தைக் கொல்லும் பொழுது 'என் அண்ணன் என்றுமே சத்தியத்தை தன் நாவில் காத்தது உண்மையானால் இந்திரஜீத்தின் தலையைக் கொய்து வா' எனக் கூறி தன் அம்பைத் தொடுத்தார். அந்த அம்பும் இந்திரனின் தலையைக் கொய்தது. மிக முக்கியமான எதிரியின் உச்சக் கட்ட போராட்டத்தில் லக்ஷ்மணர் எந்த மந்திரமும் ஜபிக்கவில்லை. ஏனென்றால் அவர் கூறிய அந்த வாசகத்தின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை வேறு எந்த மந்திரத்தின் மீதும் இல்லை. அது அவர் கண் கூடாக கண்ட உண்மை. அதனால் தான் அவ்வாசகத்தை அந்த முக்கியமான கட்டத்தில் பயன்படுத்தி அவர் வெற்றியைக் கண்டார்.

இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. அவர் தன் சத்தியத்தின் வலிமையை அந்த அம்புக்குக் கொடுக்கவில்லை. லக்ஷ்மணரும் உண்மையைத் தானே எப்பொழுதும் பேசியிருப்பார். அவர் எங்கேனும் பொய் பேசியிருப்பாரா? என்ற கேள்வியெழும்.

லக்ஷ்மணர் மனமறிந்து என்றும் பொய் சொல்ல வில்லை.  ஆனால் அவர் சொன்ன சில வார்த்தைகள் பொய்யாகிவிட்டது.

தசரதரை பொண்டாட்டி தாசன் என்றார். அவ்வார்த்தை பொய்யானது. பரதரைப் பார்த்து பேராசைக் காரன் அண்ணனையேக் கொல்ல வருகிறான் என்றார். அவ்வார்த்தையும் பொய்யானது. இதெல்லாம் தெரிந்ததால் தான் லக்ஷ்மணர் முக்கியமான அந்த யுத்தத் தருணத்தில் ராமரின் சத்திய வலிமையை தன் ஆயுதத்துக்கு கொடுத்து அதை வலிமையேற்றினார்.

ஆனால் இதே லக்ஷ்மணர் தான் ராமானுஜராக பிறந்து ஆண்டாளின் பாக்களைக் கூட உண்மையாக்கினார் என்பது அவருக்கே உரிய சிறப்பு.

ராமனுஜருக்கு இணையான குரு இவ்வுலகில் இல்லை என்றால் அது மிகையான வார்த்தைகள் அல்ல. ஏனென்றால் அவர் அளவுக்கு இறைத் தொண்டு செய்தவரும் யாரும் கிடையாது. இறைவனையே நேரடி குருவாகப் பெற்றவரும் யாரும் கிடையாது. ராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் என இரு அவதாரங்களிலும் பெருமாளைப் பிரியாமல் கூடவே இருந்தவர்களும் யாரும் கிடையாது.


8. விரதம் காத்தது:

1.ஏகபத்தினி விரதம் காத்தது
2.சத்திய விரதம் காத்தது
3.நம்பியோரை கைவிடேன் என்ற விரதம் காத்தது

9. குறி தப்பாதது:

வில் வித்தையில் குறி தப்பாதது. ஒரு சொல். ஒரு வில். ஒரு இல். என்று இதை சிறப்பித்துக் கூறுவார்கள்.

10. பொறி தப்பாதது:

ஐம்பொறிகளையும் கட்டுக்குள் வைத்திருந்தது.

ராமர் பார்க்கக் கூடாததைப் பார்க்கவில்லை.
ராமர் கேட்கக் கூடாததை கேட்கவில்லை.
ராமர் தொடக் கூடாததை தொடவில்லை.
ராமர் சொல்லக் கூடாததை சொல்லவில்லை. சுவைக்கக் கூடாததை சுவைக்கவில்லை.
ராமர் முகர்ந்து பார்க்கக் கூடாதவற்றை முகர்ந்து பார்க்கவில்லை.உதாரணம் புகையிலைப் போன்ற பொருட்கள். பூஜைக்கான பூக்களை முகர்ந்துப் பார்க்கக் கூடாதென்பார்கள். ராமர் அது போன்ற தவறுகளை செய்ய மாட்டார்.

11. விருந்தை ஏற்றது:

சபரியின் விருந்தை ஏற்றது. குகனின் விருந்தை ஏற்றது.

12. சரணை ஏற்றது:

விபீஷணன் சரணை ஏற்றது. இந்தக் கட்டத்தில் ஸ்ரீராமர் கூறிய வாசகம் ராமாயணத்தின் உச்சக் கட்ட ஸ்லோகமாக சான்றோர்களால் கருதப்படுகிறது. அதை 16 வார்த்தைகள் பாவாக கீழே காணலாம்.

என்னையே கதியாய் சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதன்பின் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்

இதை கொஞ்சம் மாற்றி நாம் ஸ்ரீராமரை சரணாகதித் துதி கூறி வழிபடலாம்.

உன்னையே கதியாய் சரணம் புகுந்தேன்
என் வாழ்க்கைக்கினி நீயே பொறுப்பு
குற்றங்கள் யாவும் பொறுப்பாய் துடைப்பாய்
நன்மைகள் யாவும் ஒவ்வொன்றாய் கொடுப்பாய்

13. ஒரு முறை விட்டது:

இன்று போய் நாளை வா என்று நிராயுதபாணியான தன் எதிரியை கொல்லாமல் விட்டது. அதற்கு காரணம் தன் வலிமையை அவனுக்கு உணர்த்திய பின் அவனுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் அவன் யுத்தத்தை முடித்துக் கொள்ள சமாதானத்திற்கு வருவான் என்கிற காரணம் தான்.

14. மறு முறைக் கொன்றது:

ராவணனை கொன்றது ராமரின் தனிப் புகழ். காரணம் அவனை கர்த்தவீர்யார்ஜுனன் வாலி தேவர்கள் என பலரும் கொல்லப் பார்த்தார்கள் அவர்களால் முடியவில்லை. தீமையின் உருவமான ராவணனின் மரணம் நன்மையின் உருவமான ராமரின் கையில் என்பது விதி.

15. தியாகம் செய்தது:

 கர்ப்பவதியான தன் ஆருயிர் மனைவியுடனான வாழ்வை தியாகம் செய்தது. ராமர் சீதையை தியாகம் செய்தது என்பது மனு நீதிச் சோழன் தன் மகனைத் தேர்க் காலில் இட்டதை விடவும் சிபிச் சக்கரவர்த்தி தன் சதையை அறுத்து தராசின் மீது வைத்ததை விடவும் வலி மிகுந்த செயல்.

எந்த ஒரு ஆணுக்குமே தன் மனைவி மீதான அன்பு உச்சத்தை அடைவது என்பது தன் முதல் வாரிசை அவள் வயிற்றில் சுமக்கும் தருணத்தில் தான்.  அப்படிப் பட்ட ஒரு சூழ்நிலையில் ஸ்ரீராமர் தன் மனைவியை காட்டிற்கு அனுப்பினார். அது அவருக்கு எவ்வளவு வலித்திருக்கும் என்பதை பற்றி சிந்தித்தால் அவரின் மேன்மை புரியும்.

அவர் யாரையும் திருப்தி செய்வதற்காக தன் மனைவியை தியாகம் செய்யவில்லை. அவருக்கு ஒரு கடமையிருந்தது.

இன்னொருவன் இல்லத்தில் இருந்த தன் மனைவியை அவர் எப்படி ஏற்றுக் கொண்டார் என்பதை மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை அவருக்கு இருந்தது. அவர் தேவர்கள் வந்து சாட்சி கூறிய பிறகே தன் மனைவியை முறைப்படி ஏற்றுக் கொண்டார். ஆனால் இது நடந்தது இலங்கையில். இப்பொழுது அயோத்யாவின் மக்களுக்கு அதை அவரால் நிரூபிக்க முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில் மக்கள் பல்வேறு விதமாக பேசத் துவங்கினார்கள்.

இதனால் ராமருக்கு மூன்று பிரச்சனைகள் ஏற்பட்டன.

1.மக்களுக்கு நாட்டின் சட்டத்தை பற்றிய குழப்பம்.
2.நீதியின் மீது ஏற்பட்ட அவநம்பிக்கை.
3.தன் மனைவியைப் பற்றி பலரும் பல விதமாக பேசுவது.

மூன்றுப் பிரச்சனைகளுக்கும் அவர் வைத்த முற்றுப் புள்ளி தான் அவர் சீதையக் காட்டுக்கு அனுப்பியது. அதன் பிறகு யாரும் எதுவும் பேச முடியவில்லை. ஆனால் ராமர் சீதையை விட்டுக் கொடுக்கவில்லை. அதே மக்களின் முன்பாக ஒவ்வொரு அசுவமேத யாகத்தின் பொழுதும் இன்னும் பல யாகங்களின் பொழுதும் தன் மனைவி அமர வேண்டிய இடங்களில் எல்லாம் சீதையின் பொன் விக்கிரகத்தை வைத்து சீதையின் மேன்மையை மக்களுக்கு உணர்த்தினார்.

அவர் சீதையை தியாகம் செய்தது மக்களுக்காகத் தானே அன்றி தன் இதயத்தில் தன் வாழ்வில் என்றுமே சீதை தான் தன் மனைவி என்பதை நாளும் நாளும் நிரூபித்தார்.

இப்படி அவர் வாழ்ந்துக் காட்டியதால் தான் மக்களுக்கு அவர் செய்த தியாகம் புரிந்தது. ராமர் மீதும் சீதை மீதும் அளவற்ற நன்மதிப்பும் மரியாதையும் பக்தியும் உண்டானது.




16. முக்தி தந்து:

தன் ராஜ்ஜியத்தில் இருந்த அனைவருக்கும் ஒரு புல்லைக் கூட கைவிடாமல் அனைத்து உயிருக்கும் முக்தி அளித்தது.

இதைத் தான் நம்மாழ்வார் பின் வரும் படியாக பாடியுள்ளார்.

கற்பார் ராமபிரானை அல்லால்  மற்றும் கற்பரோ
புற்பா முதலா புல்லெறும் பாதியொன் றின்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக் குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே!

0 comments: