அஞ்சனை பெற்ற அருந்தவப் புதல்வனே
வஞ்சனையற்ற பக்தியில் முதல்வனே
ராம பக்தியில் தன்னை இழந்திடும்
தன்னை இழப்பதில் உள்ளம் நெகிழ்ந்திடும்
நல்ல வித்தையில் நீயென் முன்னோடி
அதை நான் கற்றிட கேட்கிறேன் மன்றாடி
மீண்டும் மீண்டும் கனவில் வந்து
உள்ளம் தளரா ஊக்கம் தந்து
எனை ராம பக்தனாய் ஆக்கிய குருவே
பணிவின் துணிவின் பக்தியின் உருவே
எப்படி சொல்வேன் நன்றிகள் உனக்கு
கைம்மாறு செய்ய வக்கில்லை எனக்கு
காமக் களியாட்டம் நிறைந்த இலங்கையில்
ராக்கதர் யாவும் உறங்கும் வேளையில்
ராம தூதனாய் உள்ளே நுழைந்தாய்
ராக்கதர் ஆட்டத்தை அறவே களைந்தாய்
நான் இருந்ததனாலா நடமாடும் இலங்கையாய்
நானுறங்கும் வேளையில் என்னுள்ளே புகுந்தாய்?
ஆணவம் உள்ளவன் நானென புரிந்தும்
காடென வளர்த்த காமங்கள் தெரிந்தும்
கதையோடு எந்தன் கனவில் தோன்றினாய்
பக்தியின் விதையை சேற்றில் ஊன்றினாய்
ராவணன் மமதையை நெருப்பால் எரித்தாய்
என் மமதையை மட்டுமேன் அன்பால் கரைத்தாய்?
எண்ணுருப்பு தேய நிலத்தில் விழுகிறேன்
ராம பக்தனே உன் பாதம் தொழுகிறேன்
நீ கைகூப்பும் நிலையை மனதில் கொணர்கிறேன்
ஆணவம் அற்றல் இதுவென உணர்கிறேன்
இறை படைப்பில் உனைவிட செல்வந்தர் இல்லை
இதை உணர்ந்ததால் என்னுள் ஏழ்மைகள் இல்லை
அடியேன் பணிகிறேன் உன் பாதம் தொழுகிறேன்
இன்னொரு இமயமே உன் கால்களில் விழுகிறேன்
இவ்வுலகம் எனையும் உனைப் போல கொள்ளட்டும்
இன்னொரு அனுமன் இவனென்று சொல்லட்டும்
ஸ்ரீராமருக்காய் மலைசுமந்த உன் தோளுக்கு வணக்கம்
வெண்கல மணியணிந்த உன் வாலுக்கு வணக்கம்
ஸ்ரீராமர்புகழ் பாட நீ மீட்டும் யாழுக்கு வணக்கம்
உன்னையே தாங்கி நிற்கும் உன் காலுக்கு வணக்கம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்!!
12 comments:
WOW! Translation is also equally good anna :-)
Happy Krishna jayanthi to all!!!
Thanks mani!
அன்புடையீர்,
இவ்வளவு அழகான கவிதை எப்படி எழுத முடிந்தது?
உள்ளத்தை உருக்கி விட்டது.
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
பார்த்தசாரதி
''எல்லா ஒளிக்கும் ஒளியான ஒளி
இருட்டு வேளையில் உதயம் செய்தது
எல்லா உருவும் உருவாக்கும் அருவம்
குழந்தை உருவம் விரும்பி எய்தது''
''A Light that is source of all the lights
Desired to take birth on a night!
The formless that forms all the forms
Decided to take a baby form!''
Only You can write like this in both lauguages....very niceeeeee
Happy Krishna Jayanthy!
#பார்த்தசாரதி
குட்டிக் கண்ணன் தன் பிறந்த நாளுக்கு எனக்கு பரிசளித்து விட்டான். :)
நன்றி
#நிரு
நன்றி நிரு, கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.
கவிதை நல்லா இருக்கு
நன்றி ஈஸ்வரி.
ஒண்ணு கேட்குறேன் தப்பா நினைக்காதிங்க ramesh,
ராமன் கர்பவதியான சீதையை காட்டில் விட சொல்லும் இடத்தில் உங்கள் மனதில் என்ன பட்டது?
என்னால் எவ்வளவு சரியான காரணங்கள் சொன்னாலும் இதை மட்டும் ஏற்றுகொள்ளவே முடியலை.
ஈஸ்வரி, தங்கள் கேள்வியில் எந்த தவறுமில்லை. இது ராம காதையை படிக்கும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் ஏற்படும் உறுத்தல் தான். இதே உறுத்தல் எனக்கும் ஏற்பட்டது. அது பற்றி விளக்கமாக சொல்ல வேண்டும். அதனால் என் அடுத்த பதிவு உங்கள் கேள்விக்கான பதில் தான்.
இதைப் பற்றி நானே தனிப் பதிவு ஒன்று போட வேண்டும் என் நினைத்திருந்தேன். அதற்கு உங்களது இந்த பின்னூட்டம் ஒரு தூண்டுகோளாக அமைந்து விட்டது. நன்றி!
wonder full pls do let me know your mail id yagavaaa@gmail.com
thanks... :)
I have emailed you.. pls check...
Post a Comment