பாதம் என்ன பாதம் இது வேங்கடேசர் பாதம்
வேங்கடாத்ரி மீதினிலே நிற்பவரின் பாதம்
வேண்டியவை தருபவரின் வேங்கட நற்பாதம்
ஏழுமலை ஆண்டவரை தாங்கி நிற்கும் பாதம்
எப்போதும் நிற்பவரின் பொறுமைமிகு பாதம்
இறைவனே சுட்டிக்காட்டும் பெருமைமிகு பாதம்
காண்பவரின் கடனழிக்கும் கருணைமிகு பாதம்
வேங்கடேச சுவாமியை தாங்கி நிற்கும் பாதம்
சங்குசக்ர தாரியாய் நிற்பவரின் பாதம்
வருபவர்க்கு வள்ளலாக வழங்குபவர் பாதம்
பொன்நகைகள் தரித்தவரின் பொன்னனைய பாதம்
வேங்கடக் கிருஷ்ணரைத் தாங்கி நிற்கும் பாதம்
சாளக்கிராம மாலையொன்று தரித்தவரின் பாதம்
மார்பினிலே மணப்பெண்ணைக் கொண்டவரின் பாதம்
மாப்பிள்ளை கோலத்தில் நிற்பவரின் பாதம்
மாண்புமிகு வேங்கடரின் மகிமைமிகு பாதம்
நறுந்துளசி மாலைகளை ஏற்பவரின் பாதம்
பொற்காசு மாலைகள் தரித்தவரின் பாதம்
வண்ணமலர் மாலைகள் அணிபவரின் பாதம்
வேங்கடநல் ராமரின் வினையழிக்கும் பாதம்
மார்பினிலே உதைத்தவரை மன்னித்தவர் பாதம்
மாலைகள் பலசூடி ஒளிர்பவரின் பாதம்
மங்கையுறை மார்பினரின் மகிமைமிகு பாதம்
மகிழ்ச்சியதை வழங்குகின்ற மகிமையுள்ள பாதம்
வகுளா தேவியாரின் திருமகனின் பாதம்
பத்மா வதியாரின் மணமகனின் பாதம்
ராமராக முன்பிறந்த குணமகனின் பாதம்
சங்கடங்கள் தகர்த்தழிக்கும் வேங்கடேசர் பாதம்
குபேரனிடம் கடன்பெற்று மணந்தவரின் பாதம்
கடன்பெற்று பணப்புழக்கம் உயர்த்தியவர் பாதம்
வட்டிதந்து குபேரனை உயர்த்துபவர் பாதம்
பக்தர்களின் கடன்களை கரைப்பவரின் பாதம்
பசுவுக்கு அடிவிழாமல் காத்தவரின் பாதம்
பசுதந்த பாலதனை பருகியவர் பாதம்
பாலாக பாசமது சுரப்பவரின் பாதம்
பாவமதை பொசுக்குகின்ற புனிதமிகு பாதம்
புற்றினுள்ளே தவத்தினிலே ஆழ்ந்தவரின் பாதம்
ஆழ்வார்கள் பாசுரத்தில் ஆழ்பவரின் பாதம்
பக்தியதில் ஆழ்பவரை ஆள்பவரின் பாதம்
ஆழ்ந்தமிழ்ந்து தியானிக்க அருமையான பாதம்
விண்ணினின்று மண்ணிற்கு இறங்கிவந்த பாதம்
விண்ணவர்கள் இறங்கிவந்து பூசைசெய்யும் பாதம்
விண்ணிற்கு மோட்சம் தந்து அனுப்பிவைக்கும் பாதம்
விண்ணாளும் மண்ணாளும் மன்னவரின் பாதம்
அனந்தாழ்வார் சேவையதை ஏற்றவரின் பாதம்
அனந்தாழ்வாரிடம் சிறுவனாக சென்றவரின் பாதம்
கடப்பாறையால் அடித்தவரை பொறுத்தவரின் பாதம்
கருணையதன் அவசியத்தை உணர்த்தியவர் பாதம்
அன்னமாச்சாரிக்கு அருளிய நற்பாதம்
மோர்விற்கும் பெண்ணிற்கு மோட்சம்தந்த பாதம்
ராமானுசர் பரிந்துரைத்தால் உகந்துதவும் பாதம்
வராகரின் இடத்தினிலே குடிகொண்ட பாதம்
பொருள்கேட்டு வருவோர்க்கு பொருளளிக்கும் பாதம்
அருள்கேட்டு வருவோர்க்கு அருளளிக்கும் பாதம்
கேட்டதைக் கேட்டபடி உகந்தளிக்கும் பாதம்
வேங்கட மலையானின் வாழ்வளிக்கும் பாதம்
பொன்மகுட தாரியாய் நிற்பவரின் பாதம்
பொன்னாபரண தாரியாய் ஒளிர்பவரின் பாதம்
காதிரண்டில் காதணிகள் தரித்தவரின் பாதம்
திருநாமம் கண்மறைக்க சிரிப்பவரின் பாதம்
0 comments:
Post a Comment