மௌனமாய் இருக்கும் மரத்தைப் பார்க்கிறேன்
மௌனமே வடிவாம் புத்தரைக் காண்கிறேன்
உள்ளிருந்து வளரும் மரத்தைப் பார்க்கிறேன்
உள்ளாழ்ந்து கனியும் புத்தரைக் காண்கிறேன்
நிலைத்து நிற்கும் மரத்தைப் பார்க்கிறேன்
அசையா சிலையாம் புத்தரைக் காண்கிறேன்
காற்றுக்கு அசையும் மரத்தைப் பார்க்கிறேன்
பிடிவாதம் இல்லா புத்தரைக் காண்கிறேன்
உணவுக்கு அலையா மரத்தைப் பார்க்கிறேன்
உணவுக்கு செல்லா புத்தரைக் காண்கிறேன்
கிடைத்ததில் செழிக்கும் மரத்தைப் பார்க்கிறேன்
மலர்ந்த முகத்துடன் புத்தரைக் காண்கிறேன்
கல்லெறிய கனிதரும் மரத்தைப் பார்க்கிறேன்
எதிரிக்கும் இனிக்கும் புத்தரைக் காண்கிறேன்
எவருக்கும் நிழல்தரு மரத்தை பார்க்கிறேன்
எவரையும் தள்ளா புத்தரைக் காண்கிறேன்
ஆழவேர் செலுத்திய மரத்தைப் பார்க்கிறேன்
ஆழ்ந்த மெய்ஞான புத்தரைக் காண்கிறேன்
சுவைமிகு கனிதரு மரத்தைப் பார்க்கிறேன்
பொன்மொழி போதனை புத்தரைக் காண்கிறேன்
உயர்ந்தும் தலைகனக்கா மரத்தை பார்க்கிறேன்
தற்பெருமை அழுக்கில்லா புத்தரைக் காண்கிறேன்
காற்றில் களிக்கும் மரத்தைப் பார்க்கிறேன்
பால்மணப் புன்னகை புத்தரைக் காண்கிறேன்
புத்தப் பெருமாளே வந்தனங்கள் உமக்கு
கௌதம சித்தார்த்தா கரவணக்கம் உமக்கு
மௌனக் கோமானே சிரச்சேவை உமக்கு
புன்னகை மன்னனே புன்னகைப்பூ உமக்கு
புத்தரே வணக்கம் புத்தரே வணக்கம்
ஞானியாய் கனிந்த சுத்தரே வணக்கம்
புத்தரே வணக்கம் புத்தரே வணக்கம்
மௌன நல்லுருவே மௌனமாய் வணக்கம்
0 comments:
Post a Comment