பாதம் என்ன பாதம் இது ஆறுமுகர் பாதம்
சிவனாரின் நெற்றியிலே தோன்றியவர் பாதம்
மூன்றாம்கண்ணில் பிறப்பெடுத்த ஆறுகுணர் பாதம்
வள்ளியவள் போற்றுகின்ற வடிவான பாதம்
திருவேற்காட்டினிலே தவம்செய்த திருமகனார் பாதம்
சக்தியிடம் சக்திவேலை பெற்றவரின் பாதம்
மலையொன்றை கூர்வேலால் பிளந்தவரின் பாதம்
தெய்வானை துதிசெய்யும் தெய்வீக பாதம்
குழந்தை குணம் தருபவரின் கனிவுமிகு பாதம்
உலக அறிவதனை தருபவரின் உத்தம நற்பாதம்
அன்பதனை ஊறவைக்கும் அன்புடையோன் பாதம்
வள்ளியவள் வணக்கமுடன் நேசிக்கும் பாதம்
தொழிலதனில் கவனமதை தருபவரின் பாதம்
தியானமதில் வெற்றியதை தருபவரின் பாதம்
தெய்வீக அனுபவங்கள் தருபவரின் பாதம்
தெய்வானை பணிவுடனே பக்தி செய்யும் பாதம்
குண்டலியாய் மனிதர்களில் வாழ்பவரின் பாதம்
முதுகுதண்டில் மேலும் கீழும் செல்பவரின் பாதம்
மனமதனை ஆள்பவரின் மகிமைமிகு பாதம்
வள்ளியவள் மனமதனை திருடியவர் பாதம்
நான்முகரை சிறைபிடித்த நற்குணரின் பாதம்
சிவனாரை சீடராய் ஆக்கியவர் பாதம்
ஓம்காரப் பொருளதனை விளக்கியவர் பாதம்
தெய்வானை இதயத்தை அலங்கரிக்கும் பாதம்
ஔவையின் தமிழதனை ரசித்தவரின் பாதம்
தமிழ் மொழியில் கவிகள் பல புனைந்தவரின் பாதம்
தமிழதனை வளர்த்தவரின் இனிமையான பாதம்
வள்ளியவள் காதலோடு கன்ணிலொற்றும் பாதம்
சூரனை யுத்தத்தில் வென்றவரின் பாதம்
ஆறுபடை வீடுகொண்டு நின்றவரின் பாதம்
சக்கரங்கள் ஆறினையும் ஆள்பவரின் பாதம்
தெய்வானை அனுதினமும் அன்புசெய்யும் பாதம்
முக்கண் அப்பரின் திருமகனார் பாதம்
முழுமுதலாம் திருமாலின் மருமகனார் பாதம்
கருணைமிகு கணபதியின் தம்பியாரின் பாதம்
வள்ளியவள் தன்வாழ்வை அர்ப்பணித்த பாதம்
அருணகிரி திருப்புகழால் போற்றியவர் பாதம்
சட்டியன்று நோன்பிருக்க அருள்பவரின் பாதம்
கந்த சட்டி கவசமும் போற்றுகின்ற பாதம்
தெய்வானை தன்வாழ்வை அர்ப்பணித்த பாதம்
கார்த்திகைப் பெண்களும் கொஞ்சிய நற்பாதம்
மயிலேறி மின்னலென பயணிக்கும் பாதம்
சேனாதிபதிகளுள் சிறந்தவரின் பாதம்
வள்ளியவள் மலர்கள் தூவும் மங்கள நற்பாதம்
இந்திரனின் துன்பத்தை அகற்றியவர் பாதம்
தேவர்களும் மனமகிழ்ந்து பூசிக்கும் பாதம்
இந்திரனின் மருமகனின் இனிய நற்பாதம்
தெய்வானை மலர்கள் தூவும் மங்கள நற்பாதம்
0 comments:
Post a Comment