பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
வில்லாண்ட ராமசந்திரனே நின் சேவடி செவ்வித் திருக்காப்பு
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்னிட புறத்தினில் நிற்கும் சீதையும் பல்லாண்டு
சேவையின் உருவாய் நின்வலபுறம் நிற்கும் லக்ஷ்மணரும் பல்லாண்டு
பக்தியின் உருவாய் நின்னடி தொழுகின்ற அனுமனும் பல்லாண்டே
நின் அன்பன்றி எதுவும் வேண்டிடா பரத ஆழ்வாரும் பல்லாண்டு
பரதரின் அன்பன்றி எதுவும் வேண்டா சத்ருக்னரும் பல்லாண்டு
ஊர்மிளை மாண்டவி சுருதகீர்த்தியாகிய தேவியர் பல்லாண்டு
உன்னை இம்மண்ணுக்கு சுமந்துப் பெற்ற கோசலைப் பல்லாண்டே
உன்னை மடியிலும் மார்பிலும் தூக்கிச் சுமந்த தசரதர் பல்லாண்டு
மணிவயிறதில் மாணிக்கமே உனைக் கொண்ட கோசலைப் பல்லாண்டு
உன் புகழ் வளர தன் புகழ் கெட்ட கைகசிப் பல்லாண்டு
நின் புகழதனை இதுவென்று உணர்ந்த சுமித்திரை பல்லாண்டே
நீ சொன்ன வேதத்தை உனக்கே உரைத்த வசிஷ்டர் பல்லாண்டு
தன் யாகம் காத்திட உன்னைக் கோரிய கௌசிகர் பல்லாண்டு
நீ யாகம் காத்ததை அறிந்துன்னை புகழ்ந்த சுமதியும் பல்லாண்டு
உன் பாதத் தூசியால் சாபம் நீங்கிய அகலிகை பல்லாண்டே
உனக்காய் சீதையை சிறப்புடன் வளர்த்த ஜனகரும் பல்லாண்டு
சீதையை தான் பெற்ற மகளாய் வளர்த்த சுனயனா பல்லாண்டு
சீதையை மணக்க நீ உடைக்க வில் தந்த சிவனார் பல்லாண்டு
சீதையை தனது கருவினில் சுமந்த பூமியும் பல்லாண்டே
உன் பாதத்தில் தோன்றி பூமியை அணிசெய்யும் கங்கையும் பல்லாண்டு
அந்த கங்கை நீ கடந்திட படகதை தந்த குகனும் பல்லாண்டு
நீ படகிலேறும் முன் உன் பாதத்தை கழுவிய படகோட்டி பல்லாண்டு
கங்கை நீ கடக்கையில் கண்ணீர் சிந்திய சுமந்திரர் பல்லாண்டே
வனத்தில் உன்னை பூசித்து மகிழ்ந்த முனிவர்கள் பல்லாண்டு
பரத்துவாசர் அனுசுயா அத்ரி அகத்தியர் பல்லாண்டு
சுதீட்சணர் வான்மீகி சரபங்கர் சபரி நால்வரும் பல்லாண்டு
தண்டகவனத்தில் நின்னை சரணம் என்றவர் பல்லாண்டே
உன்னை கண்டிட சொர்க்கம் மறுத்த சரபங்கர் பல்லாண்டு
நீ உண்ணக் கனிகளை சுவைத்துத் தந்த சபரியும் பல்லாண்டு
உன் பெயர் சொல்லி குற்றங்கள் துறந்த வான்மீகி பல்லாண்டு
உனக்கு சூரியன் புகழை உரைத்து உதவிய அகத்தியர் பல்லாண்டே
உனை இதயத்தில் கொண்டே எப்போதும் வழிபடும் அனுமன் பல்லாண்டு
உனை நண்பனாய் அடைந்த சூரியபுதல்வன் சுக்ரீவன் பல்லாண்டு
சரணம் என்றே உனை நம்பி வந்த வீடணன் பல்லாண்டு
உனக்காய் யுத்தத்தில் உயிர்தர வந்த வானரர் பல்லாண்டே
உனை அவதாரம் தோறும் தரிசிக்கும் பேறுடை சாம்பவான் பல்லாண்டு
உன் சார்பில் நற்புத்தி தசமுகனுக்கு உரைத்த அங்கதன் பல்லாண்டு
முதலில் பிழைத்தாலும் உன் பொன்னடி பணிந்த வருணன் பல்லாண்டு
அவ்வருணனின் உடல்மேல் பாலம் அமைத்த நளனும் பல்லாண்டே
பாலம் அமைத்திட உதவிய சிற்றுயிர் அணிலும் பல்லாண்டு
அன்னை சீதைக்கு ஆறுதல் கூறிய திரிசடை பல்லாண்டு
அன்னை சீதைக்கு ஆறுதல் கூறிய சரமையும் பல்லாண்டு
அன்னை சீதையின் துயரம் அழித்த மாருதி பல்லாண்டே
உன்னைக் கட்டிய நாகங்கள் துரத்திய கருடர் பல்லாண்டு
லக்ஷ்மணர் மயக்கம் போக்கிட உதவிய சுசேணர் பல்லாண்டு
லக்ஷ்மணர் மயக்கம் போக்கிட மருந்துகள் வழங்கிய பர்வதமும்
அதைத் தன் தோளில் சேயென சுமந்து கொணர்ந்த அனுமனும் பல்லாண்டே
நீ யுத்தம் செய்கையில் தேர்தந்து உதவிய இந்திரன் பல்லாண்டு
அன்னை சீதையின் புனிதத்தை நிலை பெறச் செய்த அக்னியும் பல்லாண்டு
உன் அவதார நோக்கத்தை உனக்கெடுத்துரைத்த பிரம்மனும் பல்லாண்டு
உன்னை மீண்டும் கோசலம் திரும்பிட கூறிய சிவனும் பல்லாண்டே
அன்பனே நீ நீராடிய புனித நதிகள் பல்லாண்டு
மந்தாகினியும் கங்கையும் சரயுவும் பம்பையும் பல்லாண்டு
அன்பனே நீ மனம் மகிழ்ந்தே தங்கிய இடங்களும் பல்லாண்டு
அயோத்தியும் சித்திரகூடமும் பஞ்சவடியும் பல்லாண்டே
மூவேளை நீராடி நீ தினம் தொழுத சூரியன் பல்லாண்டு
உன் குலதெய்வமாய் உனக்கருள் செய்த ரங்கரும் பல்லாண்டு
சூரிய குலத்தினில் உனக்குமுன் பிறந்த மன்னர்கள் பல்லாண்டு
உன் அன்புப் பிள்ளைகள் லவனும் குசனும் பல்லாண்டு பல்லாண்டே
உந்தன் கதையை உலகுக்கு தந்த வான்மீகி பல்லாண்டு
உந்தன் கதையை தமிழில் தந்த கம்பனும் பல்லாண்டு
உந்தன் கதையை பக்தியால் சொன்ன துளசிதாசருக்கும்
இன்னும் பற்பல கவிஞர்கள் தமக்கும் பல்லாண்டு பல்லாண்டே
வீரனே உந்தன் வலக்கையில் விளங்கும் கோதண்டம் பல்லாண்டு
கோதண்டத்தில் இருந்து புறப்படும் குறிதப்பா அம்புகள் பல்லாண்டு
குறிதப்பா அம்புகள் குறையாமல் கொடுக்குமுன் தூணியும் பல்லாண்டு
உன் இடையில் விளங்கிடும் வாளும் சிரசின் மகுடமும் பல்லாண்டே
அரசே உந்தன் ஆட்சியில் வாழ்ந்த மக்கள் பல்லாண்டு
அரசே உந்தன் ஆட்சியில் வாழ்ந்த மாக்கள் பல்லாண்டு
இறையே உன்னருளால் மோட்சம் புகுந்த உயிர்கள் பல்லாண்டு
அவ்வுயிர்கள் அனைத்துக்கும் உலகொன்று நிறுவிய நான்முகன் பல்லாண்டே
அறிஞன் அழகன் அஞ்சனை புத்திரன் பல்லாண்டு பல்லாண்டு
உந்தன் நாமத்தை சொல்வதில் மகிழும் மாருதி பல்லாண்டு
உந்தன் கதைகள் பேசுவோர் இடம்செல்லும் அனுமன் பல்லாண்டு
உந்தன் நினைவில் கண்ணீர் சொரியும் சிரஞ்சீவி பல்லாண்டே
பல்லாண்டென்று பவித்திரனை பரமேட்டியை கோதண்டமெனும்
வில்லாண்டான் தன்னை ஶ்ரீராமபக்தன் ரமேஷ் விரும்பிய சொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் ஶ்ரீராம்ராமராம வென்று
பல்லாண்டும் பரமாத்மனை சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே
இன்று புத்த பௌர்ணமி. மனம் நிறைந்துள்ளது. ஶ்ரீராமஜெயம்!
0 comments:
Post a Comment