செந்தாமரை மலர் மீது வீற்றிருப்போய் போற்றி
செந்தாமரை மலர் கையில் ஏற்றிருப்போய் போற்றி
அபயஹஸ்த கரம் இரண்டால் அருள்பவளே போற்றி
வள்ளல்குண கண் இரண்டால் தருபவளே போற்றி
செம்பொன் மணிமகுடம் தரித்தவளே போற்றி
செம்மைசேர் நகைகளில் ஜொளிப்பவளே போற்றி
நவமணிகள் உடலெங்கும் உடையவளே போற்றி
நவமணிகள் பெருமைக்கு உரியவளே போற்றி
நெற்றியில் நிலைத்திருக்கும் நெற்றிச்சுட்டி நேரழகு
மால்பெருமை ஓதுகின்ற தோடுகளோ பேரழகு
உன் மூக்கில் ஒளிர்கின்ற மூக்குத்தி ஓரழகு
உன் கழுத்தை அலங்கரிக்கும் மாலைகளோ சீரழகு
இல்லாத இடையழகை தேடுகின்ற ஒட்டியாணம்
என்றாவதொரு நாளில் உன்னருளால் வெற்றி காணும்
உன் கைகளில் கலகலக்கும் வளையல்களின் சத்தங்கள்
வளமெங்கும் வளர்ந்திடும் என்பததன் அர்த்தங்கள்
உன் பாதங்களை பற்றியுள்ள பசும்பொன் கொலுசுகள்
வறுமையை ஒழித்துவிட்டு கொட்டிடும் முரசுகள்
தங்க வங்கிகள் உன் புஜங்களை பாசத்தோடு பற்றியே
தரணியெங்கும் பெற்றன புகழென்னும் வெற்றியே
உன் விரல்களில் வீடு கொண்ட வண்ண வண்ண மோதிரங்கள்
உன் பூவிரல்களை மொய்த்திடும் பல வண்ண வண்டினங்கள்
உன் கைகளை அலங்கரிக்கும் மருதாணிக் கோலங்கள்
திரும்பிடும் திசையெல்லாம் பொன்வசந்த காலங்கள்
நகைக்கெல்லாம் அரசியாம் உன் உதட்டோரப் புன்னகை
அப்புன்னகைக்கு ஈடாமோ தேய்கின்ற பொன் நகை
முத்துக்கள் உன் பற்களோடு மோதியே தோற்றன
புஷ்பராகங்கள் உன் கண்களிடம் தோல்வியை ஏற்றன
உன் மனவுறுதிக்கு முன்னால் வைரமும் உடைபடும்
உன் மன்னவர் வண்ணம்முன் மரகதமும் கடைபடும்
நீ வெட்கினால் தான் வெளுத்ததாய் மாணிக்கம் வெட்கிடும்
உன் வெட்கம் வெல்லும் மாணிக்கத்தை எப்பாம்பு கக்கிடும்?
மஞ்சள் தேய்த்த உன் முகத்திடம் பவளத்திற்கும் தோல்வி
பொலிவில் உனக்கார் ஈடென்பது தேவையற்ற கேள்வி
நீ செல்லும் திசையெல்லாம் பெருகிடும் வளம்
காரணம் நீ தரும் உழைத்திடும் குணம்
உன்னருள் பெற்றவன் நிழலையும் சோம்பல் நெருங்காது
வெற்றியை காணும்முன் அவன் உற்சாகம் நொறுங்காது
அதிர்ஷ்டமும் அவனுக்கு அவ்வப்போது உதவிடும்
ஆதரவு அவனுக்கு எத்திசையிலும் பெருகிடும்
உன் அருள் பெற்றவன் ஆகிடுவான் வாரிதரும் வள்ளல்
என்றும் அவனிடமிருக்கும் ஓர் உற்சாகத் துள்ளல்
உன் பெருமைகளை வள்ளுவனும் தன் குறளில் உரைத்தான்
எதிரிகள் வாயடைக்கப் பொருளைப் பரிந்துரைத்தான்
அருளில்லாதவருக்கு பர உலகில் இல்லை மதிப்பு
பொருளில்லாதவருக்கு இக உலகில் இல்லை மதிப்பு
பொருளில்லாதவர்களின் சொல்லுக் கில்லை மதிப்பு
பொருளில்லாத இல்லறத்தார் இல்லிலில்லை சிறப்பு
பொருளுக்காய் வாழ்வது பொருளற்ற வாழ்வெனினும்
பொருளற்ற மனிதர்களை பழிக்கும் இவ்வுலகு
பொருளிருந்தால் வறியவர்க்கு உதவிடலாம் என்பதனால்
பொருளதிலும் அருளுண்டு என்பததன் அழகு
பொருளுக்காய் எவரையும் துதிப்பவன் நானல்ல
என்றாலும் உனைத் துதித்தேன் ஏற்றிடுவாய் தேவி
தாயென்று நினைத்ததனால் தயக்கமின்றி துதி செய்தேன்
இது ஆசையல்ல அன்பென்று அறிந்திடுவாய் தேவி
ஏழையாய் இருப்பதில் எனக்கில்லை ஒரு தயக்கம்
நிம்மதியே பெரும் செல்வம் அறிந்தவன் நான் தேவி
என் தேவைக்கு எவரையும் நாடாதிருந்திடவும்
பிறர் தேவைக்கு உதவிடவும் உனைத் துதித்தேன் தேவி
தன்மானம் மிகுந்தவன் நான் பொருளுக்காய் பிடிக்கவில்லை
பொருள் அளிக்கும் உன்னுடைய பாதம்
இறைவி நீ மானுடன் நான் என்பதனால் முறை செய்ய
தொழுகின்றேன் உன்னுடைய பாதம்
மிகுதிக்கு கேட்கவில்லை என் தகுதிக்கு கேட்கின்றேன்
தந்திடுவாய் எனக்குரிய செல்வம்
உழைத்திட நான் தயங்கவில்லை நேர்மையதை துறக்கவில்லை
எனக்கில்லை ஆடம்பர நாட்டம்
லட்சுமி உன் பதம் போற்றி பார்கவி உன் பதம் போற்றி
மாதவி உன் பதம் போற்றி போற்றி
சீயே உன் பதம் போற்றி சிறப்பே உன் பதம் போற்றி
செழிப்பே உன் பதம் போற்றி போற்றி
0 comments:
Post a Comment