பிள்ளையார் துதி!
------------
ஓமென்ற ஒரு சொல்லா
நற்செயலான பெருவல்லா
நீக்கிடு தடையெல்லா
பெருக்கிடு நல்வினை நல்லா
பா துதி
-----
சீராமர் நற்கவசம்
சீராமரருள் பெறுங்கவசம்
சீதையை சக்தியாய்
தன்னுள்ளே கொண்டது
ஆஞ்சநேயரை காவலாய்
தன்னிடம் கொண்டது
பாவுரைத்த பசுபதிக்கு
ஹரஹர சிவசிவ
பாடிவைத்த புத்தருக்கு
போற்றிகள் பலபல
பா தேவதை துதி
------------
ஸ்ரீராமச்சந்திர பரப்பிரம்மணைப் பற்றி
ஸ்ரீசீதா மஹாமாயைப் போற்றி
ஸ்ரீ ஆஞ்சநேயசுவாமியின் பாதைகள் ஒட்டி
பாமாலை படைக்கிறேன் வார்த்தைகள் கட்டி
பா தலைவர் துதி
------------
முட்டி தொடும் கையழகும்
வில் பிடித்த கரத்தழகும்
அம்பெடுத்த விரலழகும்
புஜங்களின் புடைப்பழகும்
மஞ்சள் நிற உடையழகும்
செந்தாமரை கண்ணழகும்
அன்றலர்ந்த முகத்தழகும்
அதிலுறையும் நிறைவழகும்
நல்லசீதை வீற்றிருக்கும்
சிறப்பான தொடையழகும்
சீதையை கண்டிருக்கும்
கொட்டாத இமையழகும்
மழைமுகில் மேலழகும்
பொன்மின்னல் நகையழகும்
இருளடர்ந்த சிகையழகும்
சூரியச்சுடர் முடியழகும்
கண் மூடிப் பாக்கிறேன்
காட்சியில் திளைக்கிறேன்
மகிழ்ச்சியாய் ரசிக்கிறேன்
அமிர்தமாய் புசிக்கிறேன்
ஆனந்தம் ஆனந்தம்
ராம நினைவதுவே ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
ராம தரிசனமும் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
ராம புகழ் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
ராம துதி ஆனந்தம்
ஆனந்த ராமரே போற்றுகிறேன் உம்மை
என்றுமும் திருவடியாய் ஏற்றிடுவீர் எம்மை
ஆதர்ஷ ராமரே போற்றுகிறேன் உம்மை
இப்பூமியில் உம்பிம்பமாய் மாற்றிடுவீர் எம்மை
ஆகாய ராமரே போற்றுகிறேன் உம்மை
அறிவளித்து ஞானியாய் ஆக்கிடுவீர் எம்மை
ஆண்டவ ராமரே போற்றுகிறேன் உம்மை
ஆவியாய் உட்புகுந்து ஆட்கொள்வீர் எம்மை
ஆளுகை ராமரே போற்றுகிறேன் உம்மை
மனதினின்று மனிதினின்று ஆண்டிடுவீர் எம்மை
ஆற்றல் மிகுராமரே போற்றுகிறேன் உம்மை
ஆபத்தில் சாமத்தில் காத்திடுவீர் எம்மை
ஆத்மார்த்த ராமரே போற்றுகிறேன் உம்மை
ஆசைகளால் தவறாமல் தடுத்திடுவீர் எம்மை
ஆத்மராம் ராமரே போற்றுகிறேன் உம்மை
புண்ணியனாய் புவியினிலே வாழவைப்பீர் எம்மை
ஆனந்தராம் ஆதர்ஷராம்
ஆகாயராம் ஆண்டவராம்
ஆளுகைராம் ஆற்றல்மிகுராம்
ஆத்மார்த்தராம் ஆத்மராம்ராம்
ராம கவசம்
---------
திருராமர் திருக்காதை
கடலனைய பெருங்காதை
அதிலிருக்கும் ஒருவார்த்தை
அமிர்தம் அத்திருவார்த்தை
அதற்கேதும் இணையில்லை
போக்காத வினையில்லை
கருநீல உடலழகர்
செம்பத்ம விழியழகர்
நற்சீதை இணையழகர்
லக்ஷ்மண துணையழகர்
இருண்டிருக்கும் கருமுடியும்
ஒளிர்ந்திருக்கும் மணிமுடியும்
ஒளிர்சூர்ய விழியழகும்
குளிர்ச்சந்திர முகத்தழகும்
வாளிருக்கும் இடையழகும்
இடையிலவ் வாளழகும்
வில்லழகும் அம்பழகும்
ஏந்தியுள்ள வடிவழகும்
அரக்கரை கொன்றொழித்து
வென்ற நற்புகழழகும்
காவலனாய் வீற்றிருக்கும்
கம்பீர மிடுக்கழகும்
பிறப்பற்று விளங்குகின்ற
தெய்வவீகப் பெருநிலையும்
மனிதருக்காய் பிறப்பெடுத்த
கருணைமிகு அருள்நிலையும்
இதயத்தில் சிலையாக்கி
ஈரத்தால் குளிப்பாட்டி
மலர்மாலை பல சூட்டி
பாடிடுவோம் ராம்போற்றி!!
காக்க காக்க கோதண்டம் காக்க
காக்க காக்க கனகவாள் காக்க
காக்க காக்க கரபுஜம் காக்க
காக்க காக்க கருணையால் காக்க
அம்புறாத்தூணியின் அம்புகள் காக்க
சர சர சரவென பறந்தெம்மை காக்க
குறியென்றும் தப்பா கூரான அம்புகள்
சர்ரென்று வந்தெம்மை சடுதியாய் காக்க
வருணனை வாட்டிய வென்சரம் காக்க
சம்சார பெருங்கடல் வற்றிட காக்க
வாலியை வீழ்த்திய ராம்சரம் காக்க
வாலாட்டிடும் கர்வத்தை வெட்டியே காக்க
தாடகையை தகர்த்த வன்சரம் காக்க
ஆணவ ஆட்டத்தை அடக்கியே காக்க
மாரீசனை வென்ற மனசரம் காக்க
மயக்கத்தை போக்கி அறிவைக் காக்க
சுபாகுவை கொன்ற சுடுசரம் காக்க
சுர்ரென்று வந்து சுகத்தை காக்க
வல்லரக்கரை கலக்கிய வாயுசரம் காக்க
உறுதியாய் வந்து உடல்நலம் காக்க
பத்துத் தலையறுத்த பலசரம் காக்க
பரபர வந்தென் பண்பினை காக்க
கும்பக்காதனைக் கொன்றக் கனிசரம்
கடகட வந்தென் கௌரவம் காக்க
மணிகள் பொறுத்திய மணிவில் காக்க
கிங்கிணி ஒலித்து கிருபையால் காக்க
வேலைப்பாட்டுடன் விளங்கும் வில்காக்க
வேகமாய் இயங்கியென் வெற்றியை காக்க
இடையில் இடம்கண்ட வாளெனை காக்க
இருட்டில் மின்னியென் நம்பிக்கைக் காக்க
இருகரம் விரிந்தென் அன்பினை காக்க
இதயம் இளகியென் தவத்தினை காக்க
ரகுவம்ச ராமர் தலையினைக் காக்க
தசரத ராமர் நெற்றியைக் காக்க
கௌசல்ய ராமர் கண்ணினைக் காக்க
கௌசிக ராமர் காதினைக் காக்க
யாகத்தை காத்தவர் நாசியைக் காக்க
லக்ஷ்மணப் பிரியர் வாயினைக் காக்க
ஞானக் கடல்ராமர் நாவினைக் காக்க
பரதஇறை ராமர் கழுத்தினைக் காக்க
தேவாஸ்திர ராமர் தோளினை காக்க
சிவாஸ்திர ராமர் புஜங்களை காக்க
சீதாநாத ராமர் கைகளை காக்க
பரசுராம ராமர் இதயத்தை காக்க
கரவதை ராமர் வயிற்றினை காக்க
ஜாம்பவ ரட்சகர் தொப்புளைக் காக்க
சுக்ரீவ ராமர் அல்லையைக் காக்க
அனுமந்த் ராமர் இடையினைக் காக்க
ரகுகுல திலகர் வலத்தொடை காக்க
ராக்கத வைரி இடத்தொடை காக்க
சேதணை ராமர் முட்டியைக் காக்க
தசமுக வதையர் முழந்தாள் காக்க
விபீஷண ராமர் பாதத்தை காக்க
ஸ்ரீராம தேவர் தேகத்தை காக்க
காக்க காக்க நோயின்றி காக்க
காக்க காக்க தாயாய்க் காக்க
ராமகவசத்தை ஓதிடும் நல்லவர்
ராமரின் சக்தி இதுவென உணர்ந்தவர்
வாழ்வர் நெடுநாள் பிள்ளைகள் பெற்று
வெற்றிகள் பெற்று ஆணவம் அற்று
ராமகவசத்தை தரித்தவர் சுற்றி
துஷ்ட சக்திகள் வராது சுற்றி
ராமநாமரை ராமபத்ரரை ராமசந்த்ரரை
விடாது போற்றி
பக்தன் புனிதனாய்ப்பெறுகிறான்
இகபர வெற்றி
ராமநாமக் கவசத்தை கழுத்தில் உறுபவன்
மூவுலக ஆற்றல்கள் முழுவதும் பெறுபவன்
ராமகவசத்துள் வைரக்கூடென உறைபவன்
எவரும் தட்டா வார்த்தையை உறைப்பவன்
புத்தகௌசிகர் கனவில் சிவனார் உரைத்தது
அக்காலைக் கௌசிகர் எழுத்தில் விதைத்தது
இதுவே இக்கவசம் உருவான காதை
எனவே இதொழிக்கும் சகல உபாதை
கற்பக மரமாய் வரங்கள் தருபவர்
நற்பாதைக் காட்ட தடைகள் களைபவர்
மூவுலகினர் பாடும் துதியை ஏற்பவர்
சீராமரே எங்கள் உயிராய் இருப்பவர்
இளமை அழகு வீரம் ஞானம்
அகன்ற கண்ணோ மலர்ந்த பத்மம்
மரவுரி தரித்த மரகத தேகம்
தேகம் காக்க காய்கனி விரதம்
இளைஞராய் இருந்தும் சிற்றின்ப துறவும்
இளவரசராய் இருந்தும் அருந்தவ உறவும்
எளிமை அழகுடன் வாழ்ந்த தசரத புத்திரர்
ராமலக்ஷ்மரைப் பணிந்தவர் என்றுமே பத்திரர்
சகல உயிரையும் கண்ணென காப்பவர்
வில்லாள வீரரில் முன்னணி நிற்பவர்
ராக்கதர் வம்சத்தை வேரோடு அகழ்பவர்
ரகுவம்ச வரிசையில் திலகராய் திகழ்பவர்
எண்ணிக்கைக் குறையா அம்புறாத்தூணியர்
வலக்கரம் சரம்தொடும் ஆயத்த பாணியர்
வாழ்க்கைக்கும் வழிக்கும் விளக்காய் நிற்பவர்
ராமலக்ஷ்மரைப் பணிந்தவர் என்றுமே பத்திரர்
கௌசல்ய தசரதர் இருஇதய உலகர்
ரகுராஜ வம்சத்தின் நெற்றியொரு திலகர்
வில்லம்பு தரித்தவர் கேடயவாள் பிடித்தவர்
ஆயத்த யுவர்கள் ஸ்ரீராம லக்ஷ்மணர்கள்
எம்மிதய சொத்து ராமரெமை காக்க
அவரிதய சொத்து லக்ஷ்மரும் காக்க
ரகுவம்ச தீபம் திருவீரராமர்
சர்வசெயல்வல்லர் திருத்தமொருரூபர்
தசரதபுத்ரர் கௌசல்யைபுத்ரர்
என்றுமவர் துணைவர் திருலக்ஷ்மபத்ரர்
வேதத்தின் விளக்கம் யாகத்தீ தெய்வம்
தொல்புகழ் லட்சம் சிறப்புகளின் உச்சம்
சீதையின் உயிர் வீரத்தின் உடல்
தமைப்பற்றும் பக்தர்க்கு சிவனார் சொல்கிறார்
சீராமரை இப்படித் துதிக்கச் சொல்கிறார்
அஸ்வமேத புண்ணியம் கிட்டும் என்கிறார்
சந்தேகம் விட்டு நம்பவே சொல்கிறார்
தாமரைக்கண்ணர் மஞ்சளுடையாளர்
பச்சைப்புல்லிலை கருநிற ராமர்
புகழை என்றும் பாடிடும் வாணர்
பூபந்தம் அறுந்து ஆவர் வானர்
லக்ஷ்மணத் தமையர் ரகுவம்சத் திலகர்
சீதையின் நாதர் அழகிய அழகர்
அன்பின் ஆழ்கடல் அறத்தின் புதையல்
மதமதை மதிப்பவர் மனதினில் நிலைத்தவர்
அரசர்க்கு அரசர் அருஞ்சத்ய விரதர்
தசரதர் மைந்தனர் மேனியில் மையினர்
திருசாந்தப் புனிதர் ஆதர்ஷ மனிதர்
ரகுவம்சமகுடம் ராவணமரணம்
சீதாமணாளரே மதியின் குணாளரே
ரகுவம்ச சுவாமியே ஆருயிர் ராமரே
வணக்கம் வணக்கம் பல வணக்கம்
ரகுவம்ச அரசருக்கு இனியதொரின்பம்
அக்ரம அரசர்க்கு அவரொரு துன்பம்
பரதநம்பிக்கு அணைத்திடும் அண்ணன்
அடிதொடும் எனக்கோ அடைக்கல நன்னன்
ஸ்ரீராமச்சந்திரர் பாதத்தை என்றும் மனதால்
நினைத்துப் போற்றுகிறேன்
ஸ்ரீராமச்சந்திரர் பாதத்தை என்றும் சொல்லால்
புகழ்ந்துப் போற்றுகிறேன்
ஸ்ரீராமச்சந்திரர் பாதத்தை என்றும் தலையால்
தொட்டுப் போற்றுகிறேன்
ஸ்ரீராமச்சந்திரர் பாதமே கதியென அடிக்கீழ்
பணிந்தே போற்றுகிறேன்
தாயும் ராமரே தந்தையும் ராமரே
அருமை நண்பனும் ராமரே ராமரே
அனைத்தும் எனக்கென் அன்புக் கடலே
அன்புக் கடலவர் ராமரே ராமரே
அவரைப் போலே யாரையும் அறியேன்
அறியேன் அறியேன் உண்மையில் அறியேன்
லக்ஷ்மணத் தம்பி வலப்பக்கம் வணங்க
ஜனகரின் புதல்வி இடப்பக்கம் அணைக்க
அன்பன் அனுமனும் அவர்முன் இருக்க
ரகுவம்ச மகிழ்ச்சியை பணிந்து நான் துதிக்க
மக்களை ஈர்ப்பவர் போரில் ஜொலிப்பவர்
ரகுவம்ச மன்னர் தாமரைக் கண்ணர்
கருணை உருவரை சரணம் புகுந்தேன்
சரணம் ராமா சரணம் சரணம்
ராமா சரணம் ராமா சரணம்
மனதுக்கு இணையாய் வேகமாய் செல்பவர்
வேகத்தில் காற்றுக்கு இணையாய் இருப்பவர்
ஐந்து புலனை அடக்கத்தில் வைத்தவர்
அறிவுச் சுடர்களில் அகரமாய் இருப்பவர்
குரங்குப் படையின் தலைவராய் இருப்பவர்
காற்றின் பிள்ளை ஸ்ரீராம தூதர்
அனுமன் அவருக்கு வணக்கம் வணக்கம்
அவரடி பணிந்து அன்பாய் வணக்கம்
ராம நாமத்தை குயிலென கூவிய
வால்மீகி முனிவரே வணக்கம் வணக்கம்
ராம காதையை அழகாய்ப் பாடிய
வால்மீகி முனிவரே வணக்கம் வணக்கம்
அனைத்து ஆபத்தை அழிப்பவர் அழிப்பவர்
அனைத்து நன்மையும் அளிப்பவர் அளிப்பவர்
மக்கள் மனதினை கவரும் ராமரை
மக்கள் அறிவினை வளர்த்திடும் ராமரை
அன்புடன் அன்புடன் வணங்குகிறேன்
வணங்கியே வணங்கியே போற்றுகிறேன்
மறு ஜென்மம் எடுக்கும் காரணம் அழிக்கும்
மனதுக்கு ஆனந்தம் அளவற்று அளிக்கும்
அனைத்து செல்வமும் நிறைவாய் அளிக்கும்
மரணம் அதனை அலறவே அடிக்கும்
ராம நாமத்தின் கர்ஜனை கர்ஜனை
எங்கு இருப்பினும் அணியாய் இருப்பவர்
எங்கு இருப்பினும் ஜெயமாய் இருப்பவர்
என்றும் சீயைத் துணையாய்க் கொண்டவர்
இரவில் உலவும் அரக்கரை அழித்தவர்
அழகிய ராமரே வணக்கம் வணக்கம்
வெல்லும் ராமரே வணக்கம் வணக்கம்
செல்வ ராமரே வணக்கம் வணக்கம்
சீதையின் ராமரே வணக்கம் வணக்கம்
சரண்புக ராமரின் சரணைவிட்டால்
நமக்கு வேறு கதியில்லை
ராமரின் சேவகன் ராமரின் அடியவன்
ராமரின் நினைவில் மனதால் அமிழ்பவன்
ராமா ராமா எனை உயர்த்து
ராமா ராமா என் நிலை உயர்த்து
அழகிய முகத்தை உடையவளே
அன்பே அன்பே உமையவளே
ராமரின் பெயரைச்
சொல்லி சொல்லி
எனது மனமோ மகிழ்கிறது
ராமரின் பெயரை
ஒரு முறைச் சொல்லி
ஆயிரம் பலன்கள் அடைகிறது
வேறெந்தத் தெய்வத்தின் பெயரையுமே
ஆயிரம் முறைகள் சொன்னாலும்
ராமரின் பெயரை ஒருமுறையே
சொல்வது போலே ஆகாது
ராமரை ஏற்றிப் புத்தக் கௌசிகர்
இயற்றிய பாடல் முடிகிறது
எனது அனைத்தும் ராமரின் ராமரின்
அடியை அடியை அடைகிறது!
- ஸ்ரீராமஜெயம்--
புத்த கௌசிகர் இயற்றிய ராம ரக்ஷா ஸ்தோத்திரத்தின் தமிழாக்கம்.
ராம ரக்ஷா ஸ்தோத்திரத்தின் மொழி பெயர்ப்பை ஆங்கிலத்தில் காண இங்கே சொடுக்கவும்.
3 comments:
ஸ்ரீராமஜெயம்!
ஸ்ரீராமநற்கவசஜெயம்!
ஸ்ரீராமபாதஜெயம்!
ஸ்ரீராமச்சந்திர பரப்பிரம்மணைப் பற்றி
ஸ்ரீசீதா மஹாமாயைப் போற்றி
ஸ்ரீ ஆஞ்சநேயசுவாமியின்
பாதைகள் ஒட்டி வார்த்தைகள் கட்டி
படைத்திட்ட
பாமாலை அற்புதம்..
பாராட்டுக்கள்..!
ஸ்ரீராமஜெயம்!
ஸ்ரீராமஜெயம்!
ஸ்ரீராமஜெயம்!
ஸ்ரீராமநற்கவசஜெயம்!
ஸ்ரீராமபாதஜெயம்!
ஸ்ரீராமநற்கவசஜெயம்!
ஸ்ரீராமபாதஜெயம்!
ஸ்ரீராமநற்கவசஜெயம்!
ஸ்ரீராமபாதஜெயம்!
Post a Comment