அது ஒரு முருகர் கோவில். அங்கே ஒரு தனி சன்னதியில் பெருமாள் படுத்திருந்தார். அவரைப் பார்த்துவிட்டு முருகரை தரிசிக்க சென்றோம். அடுத்த காட்சியில் முருகரை தரிசித்து விட்டு வெளியே வரும் வழியில் சுவரெங்கும் ராமர் படங்களும் இடையிடையே அம்மன் படங்களும் இருந்தன. குறிப்பாக ராமர் ராவணனை வதம் செய்யும் படம் தெளிவாக தெரிந்தது. அந்த படங்களை பார்த்த படி என் அம்மாவின் தாயாரிடம், "அம்மாயி, இந்த பெருமாள பாருங்களேன். இவருக்கு ரொம்ப பெரிய மனசு. முருகர் கோவில்ல ஒரு சின்ன சன்னதியா இருந்தாலும் எவ்வளவு ஆனந்தமா படுத்திருக்கார் பாருங்களேன். இவருக்கு கௌரவ பிரச்சனையெல்லாம் கிடையாது. சிவபெருமான் கால்ல கூட விழ தயங்க மாட்டார். மக்கள் எல்லாரும் எங்கடா சிவபெருமான பெரிய கடவுள்னு நினைச்சுருவாங்களோ அப்படிங்கற கவலையெல்லாம் இவருக்கு கிடையாது. ரொம்ப பெருந்தன்மையானவர். எல்லாரையும் அரவணைச்சு போவார். அதனாலயே இவர யாராலும் ஜெயிக்க முடியாது. ஆனா இவர் யார வேணா ஜெயிச்சுருவார்" என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே பெருமாள் சன்னதி வந்தது.
பெருமாளை பார்த்துக் கொண்டிருந்த பொழுது பெருமாள் புரண்டு படுத்தார். "கல் சிலையா இருந்தாலும் எப்படி புரண்டு படுக்குறார் பாருங்க" என்றேன் என் அம்மாவின் தாயாரிடம். நான் இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே பெருமாள் எழுந்து உட்கார்ந்து கொண்டார். எங்களை பார்த்து சிரித்த முகத்துடன் கைகுவித்து வணக்கம் சொன்னார். சிரித்த முகத்துடன் அவர் தலையசைப்பது எப்படியிருந்ததென்றால்- நாங்கள் அவர் இடத்திற்கு சென்றிருப்பது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது போலும் எங்களை வருக வருக என வரவேற்பது போலும் இருந்தது. அவர் நாற்பது வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் இருந்தாலும் அவர் சிரிப்பு குழந்தை சிரிப்பாக இருந்தது. எங்களை கண்டதில் ரொம்ப குதூகலம் அடைந்திருப்பதாக இருந்தது. அவர் எங்களை வணங்கிய விதத்தையும் அந்த குழந்தை சிரிப்பின் மூலம் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விதத்தையும் கண்ட பொழுது அழுகை பீறிட்டுவந்தது.
அழுத படி, "பெருமாளே பெருமாளே பெரிய மனத்து பெருமாளே" என்றேன்.
அவர் ஒரு நிமிடம் இருங்கள் என்பது போல கையால் சைகை செய்து, உங்களுக்கு ஒன்று தருகிறேன் என்பது போல தலையாட்டினார். பின்னர் பின்புறம் திரும்பி குனிந்து ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து எங்கள் மீது வீசினார். முதல் முறை என் இடது புறத்தில் விழுந்தது. இரண்டாவது முறை எனக்கு கொஞ்சம் முன்பாக விழுந்தது. ஆனால் நான் நனையவில்லை. பின்னர் மூன்றாவது முறையாக அவர் நீரை கையில் விட்டு எங்கள் பக்கம் வீசினார். அது எனக்கு முன்பாக இருந்த சுவற்றில் ஒரு அருவியை போல பெருக்கெடுத்து வழிந்தது. (அந்த சுவருக்கு மேல் இருக்கும் மேடையில் தான் பெருமாள் இருந்தார்.) நான் அழுதபடியே அந்த சுவற்றில் இரண்டு கைகளையும் வைத்தபடி என் தலையை அந்த அருவியில் நனைத்தேன்.
அப்பொழுது அழுதபடியே, "இந்த சிறியனுக்கும் மனது வைத்த பெரிய மனத்து பெருமாளே" என்றேன்.
பின் உலகியல் நினைவு வந்து கனவு கலைந்தது. விழித்துக் கொண்டேன். மணி அதிகாலை 3.25. தேதி 22.03.2010. நேற்றைய முன் தினம். என் பிறந்த நாள்.
அன்று என் தம்பி ராமர் பட்டாபிஷேகப் படமும், துளசி தாசர் ராமர் மீது இயற்றிய பக்தி கவிதைகளும், வெண்ணை உண்ணும் பாலகிருஷ்ணர் திரு உருவ பொம்மையும் பரிசளித்தான்.
பார்த்தசாரதி சுவாமி கோவிலுக்கு சென்று திரும்பும் பொழுது சீதா லக்ஷ்மண அனுமன் சமேத ராமர் படம் ஒன்று வாங்கி வந்தேன். சில நாட்களுக்கு முன்பாக பி.ஜி.ஷர்மா அவர்கள் வரைந்த ராமாயண ஓவியங்களை சகோதரி வைஜெயந்தி அவர்களிடம் கேட்டிருந்தேன். ராமநவமிக்கு அனுப்புவதாக சொல்லியிருந்தார். ஆனால் அவரும் என் பிறந்த நாள் அன்றே எனக்கு அனுப்பியிருந்தார். அவருக்கு அன்று எனக்கு பிறந்தநாள் என்பது தெரியாது. இப்படியாக அன்று முழுவதும் பல்வேறு ரூபங்களில் என்னிடம் வந்து, தன்னையே கதியென்று சரண் புகுந்தவர்களுக்கு தன்னையே பரிசாக கொடுப்பவர் என்பதை என் விஷயத்தில் நிரூபித்து விட்டார் பெரிய மனதுடைய பெருமாள்.
கனவில் நான் சொன்ன அந்த இரண்டு வரிகளையும் முதல் இருவரிகளாக கொண்டு பின் வரும் கவிதையை அன்றே இயற்றினேன்.
பெரிய மனத்து பெருமாள்
பெருமாளே பெருமாளே பெரிய மனத்து பெருமாளே
இந்த சிறியன் மீதும் மனது வைத்த பெரிய மனத்து பெருமாளே
உங்களை ராமராக மட்டுமே நான் காண விரும்புவேன்
என் கண்ணை கட்டிவிட்டாலும் ராமர் பக்கம் திரும்புவேன்
தாங்கள் நெஞ்சில் எட்டி உதைப்பவரை 'கால் வலிக்குமே?' என கேட்பவர்
நல்லவரை தேடிச் சென்று தன் கூட்டத்தில் சேர்ப்பவர்
பக்தி செய்த அன்பர் நெஞ்சில் கைதியாக வாழ்பவர்
அன்பான அர்ச்சனையில் ஆனந்தம் கொள்பவர்
பக்தர் புகழ் காப்பதையே விரதமென்று நோற்பவர்
பக்தர் புகழ் சேர்ப்பதற்கு பக்தரிடம் தோற்பவர்
போலி கௌரவம் பாராமல் சிவனாரையும் வணங்குவீர்
உயர்வு தாழ்வு பேதம் தீர்க்க சிரம் தாழ்த்த இணங்குவீர்
தங்கள் செய்கையதை பார்த்துவிட்டு சிவம் பெரிது என்பவர்
தங்கள் பெருந்தன்மை புரியாத அறியாமை உள்ளவர்
தாங்கள் பக்தர்களை பூஜிப்பதை வரலாறு சொல்லுமே
சிவனார் முதல் குசேலர் வரை பட்டியலும் நீளுமே
பக்தர்களை கௌரவிக்க தங்களை போல் யாருளர்?
தாங்கள் கௌரவித்த பக்தர்கள் எண்ணற்ற பேருளர்.
வள்ளலாக வாழ்ந்தவர் முன் கையேந்தி கௌரவம்
வீரரிடம் சண்டையில் விழுப்புண்ணேற்று கௌரவம்
அக ஆராய்ச்சியில் சிறந்தவர் முன் சிஷ்யனாகி கௌரவம்
உரிமையோடு தொழுதோருக்கு பிள்ளையாகி கௌரவம்
பக்தியோடு தொழுதோருக்கு பாத பூஜை செய்து கௌரவம்
பக்தியோடு காமம் சேர்ந்தால் காதல் செய்து கௌரவம்
நட்போடு பக்தி செய்தால் நண்பனாகி கௌரவம்
பிரியாது இணைந்திருந்தால் உடன்பிறப்பாகி கௌரவம்
விரதமேற்று தவமிருந்தால் கணவனாகி கௌரவம்
தன்னலமற்று அன்பு செய்தால் வேலைக்காரனாகி கௌரவம்
சவரத் தொழில் பக்தருக்காய் சவரம் செய்து கௌரவம்
வலைப் பதிவில் பக்தி சொன்னால் பிறந்ததின ஆசி கூறி கௌரவம்
பெருமாளே உம்பெருமை சொல்ல சொல்ல தீருமோ?
உம் முழுப்பெருமை சொல்லப் போனால் தமிழ் மொழியும் போதுமோ?
இந்த பெருமை போதாதென்று ராமராவும் பிறந்தீரே
அந்த பெருமை சொல்ல போனால் உலக மொழியனைத்தும் போதுமோ?
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு பிறந்த தின நல் வணக்கங்கள்.
அன்பர்களுக்கு ராம நவமி நல்வாழ்த்துக்கள்.
8 comments:
எத்தனை அற்புதமான கனவு..
பெருமாளிடம் பக்தி வைத்தால் அவர் அருளை நிச்சயம் பெறலாம் என நம்பிக்கை தரும் கட்டுரை இது....
"A faithful man will be richly blessed".
//பக்தி செய்த அன்பர் நெஞ்சில் கைதியாக வாழ்பவர்..
அன்பான அர்ச்சனையில் ஆனந்தம் கொள்பவர்//
மிகவும் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்..
கடவுளின் அருளைவிட இந்த உலகில் சிறந்த செல்வம் எதுவுமில்லை..
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு பிறந்த தின நல் வணக்கங்கள்.
அன்பர்களுக்கு ராம நவமி நல்வாழ்த்துக்கள்.
திலகா, ராஜேஷ் இருவருக்கும் என் இதயம் கலந்த நன்றிகள்.
ஸ்ரீ ராமஜெயம்.
anandham arputham hare rama hare rama rama rama hare hare hare krishna hare krishna krishna hare krishna hare hare
anandham arputham hare rama hare rama rama rama hare hare hare krishna hare krishna krishna hare krishna hare hare
வருகைக்கும் மகிழ்சியை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி பாலு சார்.
Hi Ramesh.. I'm srini, 23 yrs old from chennai.. I would fall at ur feet if u r just next to me.. All I can do is to write "Thanks a lot.." thru this comment.. I've never been so emotional like this.. When i read your dream in the post, without any reason and without my conscience I was in a pool of tears.. I dont remember of me crying in the past few years for any reason.. Especially now, when i'm in deep trouble, this post really brought me up.. It just reminds me of the saying a stranger said to me in nanganallur anjaneyaswami temple.. "If u take one step towards god, he runs 100 steps towards U.."..
Jai Sri Ram..
:)
Post a Comment