CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

ஸ்ரீராமர்புகழ்

நம்மைப்போல சிரித்தவர் நம்மைப்போலே அழுதவர்
நம்மைப்போலே காதலித்து காதலோடு வாழ்ந்தவர்
இழப்புகளைக் கண்டவர் மீண்டெழுந்து வந்தவர்
உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகங்களை அறிந்தவர்
செல்வத்தையும் கண்டவர் ஏழ்மையையும் கண்டவர்
செல்வத்திலும் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தவர்

விதியென்னும் புயலிலே ஆடாத மரமல்லர்
அத்தனை புயலிலும் வீழாத மரமவர்
தன்னுயிராம் சீதையை தியாகம்செய்த மேன்மையர்
இதயத்தில் சீதையை இழக்காத ஆண்மையர்
புரிதலில்லா மக்களை பொறுத்துக்காத்த பூமியர்
புரிந்தபின் இதயத்தில் உயிரான சாமியர்

என்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே
என்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே
என்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே
என் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே
என் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே!

ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்

கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
துறு துறு சிறுவன் தசரத ராமர்
கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்

இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
ராஜ குருவாம் பரத ராமர்
தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
அன்புள்ள கணவன் சீதா ராமர்

உற்ற தோழன் குகனின் ராமர்
உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
தெய்வ உருவாம் அனுமத் ராமர்
ஞான சூரியன் ஜாம்பவ ராமர்

மூத்த மகனாம் சுமித்ர ராமர்
மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
மன்னித்தருளும் கைகேயே ராமர்
மகனே போன்றவர் ஜனக ராமர்

எளிய விருந்தினர் சபரியின் ராமர்
அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
பாப வினாசனர் கோதண்ட ராமர்

ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்
பெண்கள் போற்றும் கற்புடை ராமர்
மக்கள் மகிழும் அரசுடை ராமர்
பக்தர் நெகிழும் பண்புடை ராமர்

வேள்விகள் காக்கும் காவலன் ராமர்
சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்
இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
திருமண நாயகன் ஜானகி ராமர்

சிவ வில் முறித்த பராக்ரம ராமர்
ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
கடலை வென்ற வருண ராமர்
பாலம் கண்ட சேது ராமர்

மரம் ஏழு துளைத்த தீர ராமர்
மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
குலப் புகழ் காத்த சூர்ய ராமர்

சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்
தாயுமானவர் லவகுச ராமர்
தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்

கீதை தந்த கண்ணன் ராமர்
கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
சிவனை வணங்கும் பக்த ராமர்
சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்

முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
காந்தியின் கடவுள் சத்திய ராமர்
அறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்

ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்

ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்
ராம் ராம் என்றால் உவகை பெருகும்
ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
ராம் ராம் என்றால் தர்மம் புரியும்

ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
ராம் ராம் என்றால் வெற்றி விழையும்
ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்

ராம் ராம் என்றால் மனது அடங்கும்
ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்
ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்

ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
இன்பம் எல்லாம் விரைவில் கூடும்

ஸ்ரீராமபுண்யஜெயம்

ஸ்ரீராமபுண்யஜெயம்

பெரிய குரு தட்சணை

தேவகிநந்தன் வசுதேவபுத்ரன்
யசோதேயன் நந்தகுமாரன்

ஆயன் மாயன் சேயன் தூயன்
இலையன் சிலையன் களையன் மலையன்
அமிழ்ந்தவன் உமிழ்ந்தவன் விழுங்கினன் முழங்கினன்
உதைத்தவன் வதைத்தவன் கதைத்தவன் சிதைத்தவன்

ஆலன் லீலன் சீலன் ஞாலன்
பாலன் வாலன் காலன் காலன்
குறும்பன் கரும்பன் இரும்பன் துரும்பன்
ஆடலன் விளையாடலன் கூடலன் குழலூதினன்

ராதையன் பூங்கோதையன்
பாதையன் நற்கீதையன்
துகிலிழுத்தவன் துகிலளித்தவன்
உடனிருப்பவன் துயரறுப்பவன்

உரலுருட்டினன் உறித்திருட்டினன்
தோலிருட்டினன் பொய்புரட்டினன்
மலையெடுத்தவன் குடைப்பிடித்தவன்
தேர்ச்செழுத்தினன் தேரழுத்தினன்

மண்ணையுண்டவன் வெண்ணையுண்டவன்
கீரையுண்டவன் தோலையுண்டவன்
அவலையுண்டவன் அகிலமுண்டவன்
அறிவுக்குவிருந்தினன் மனதுக்குமருந்தினன்

ஏகன் அனேகன் ப்ரணவன் ப்ராணன்
ஈகன் இகபரன் அரங்கன் சுரங்கன்
மயக்கினன் கலக்கினன் விளக்கினன் விளக்கினன்
லயித்தவன் ஜெயித்தவன் நழுவினன் சிறையினன்

பன்முகன் இன்முகன் நன்முகன் நாயகன்
இன்னகன் விண்ணகன் மண்ணகன் தாயகன்
இன்மனன் நன்மனன் பொன்மனன் பூமணன்
சற்குணன் பொற்குணன் நற்குணன் நாரணன்

மேஷன் ரிஷபன் மிதுனன் கடகன்
சிம்மன் கன்யன் துலான் விருச்சிகன்
தனுஷன் மகரன் கும்பன் மீனன்
கிரகன் நட்சத்திரன் நாடியன் நற்சோதிடன்

முதலையறுத்தவன் யானைவிடுத்தவன்
கஜேந்திரவரதன் நரேந்திரவதனன்
உரலையிழுத்தவன் மரத்தைவிடுத்தவன்
நளகூபரவரதன் நலமேதருவதனன்

ஆமேய்த்தவன் ஆதேய்த்தவன்
புல்லூட்டினன் பால்கூட்டினன்
ஆவருடினன் ஆதடவினன்
ஆசுற்றினன் ஆபற்றினன்

ஆவணைத்தவன் ஆவனைத்தவன்
ஆமயக்கினன் ஆயியக்கினன்
ஆவுக்கொருநண்பன் ஆவிரும்புமன்பன்
ஆமணிக்கிசைவன் ஆமணியின்னிசையன்

காளிங்கநர்த்தனன் ஆலிங்கனர்த்தனன்
ராசலீலாதாரி பரமவுபகாரி
அகயோகியன் சுகபோகியன்
தவவீரியன் சுபகாரியன்

ஸ்ரீபாண்டவதூதன் ஸ்ரீபார்த்தகீதன்
பான்சசன்யசத்தன் குருட்சேத்திரயுத்தன்
பரீட்சீத்தைமீட்டான் தற்பெருமைகாட்டான்
இஷ்டத்துக்குக்கல்யாணன் பிரம்மச்சர்யப்ரமாணன்

வாழைபோல்செழிப்பன் ஆலைமேல்மிதப்பன்
ஊழிதோறும்பிறப்பன் வாழியெனவுரைப்பன்
அருந்தருமகற்பன் பெருஞ்சத்யகவசன்
கடமையிருகண்ணன் கண்ணியகருமன்னன்

ஆனந்தசயனன் ஆனந்தநடனன்
கரும்புஜகசயனன் கரும்புஜகநடனன்
நவநீதசோரன் தங்கமணியாரன்
புன்முறுவல்காரன் கீர்த்தியபாரன்

தோப்புக்கரணன் அபிஷேகன் அலங்காரன் புகழாரன்
பொன்னாரன் பூவாரன் பல்லாரன் சொல்லாரன்
மலராரன் மல்லியாரன் முத்தாரன் மணியாரன்
தாமரையாரன் வெண்தாமரையாரன்
செண்பகமலராரன் செந்தாமரையாரன்

கலியமூர்த்தி எளியமூர்த்தி இனியமூர்த்தி புனிதமூர்த்தி
மறைமூர்த்தி மலைமூர்த்தி சத்யமூர்த்தி நித்யமூர்த்தி
வரதமூர்த்தி விரதமூர்த்தி தேவமூர்த்தி தெய்வமூர்த்தி
அன்புமூர்த்தி அகிலமூர்த்தி அண்டமூர்த்தி உண்டமூர்த்தி

கோப்ரியன் கோபிப்ரியன் ஆப்ரியன் ஆவினப்ரியன்
கோநேசன் கோதாசன் கோவாசன் கோவீசன்
கோபாலன் கோவாளன் கோவைத்தியன் கோவைத்தனன்
பால்சோறுப்ரியன் திருவெண்ணைப்ரியன்
தயிர்சாதப்ரியன் நீர்மோர்ப்ரியன்

குதிரைமுகன் கூர்மமுகன் பன்றிமுகன் சிங்கமுகன்
ராமமுகன் கிருஷ்ணமுகன் கருணைமுகன் பொறுமைமுகன்
நல்லமுகன் ஞானமுகன் வல்லமுகன் வரதமுகன்
சூர்யமுகன் சந்திரமுகன் மலர்ச்சிமுகன் குளிர்ச்சிமுகன்

திருத்துழாய்ஆரன் சதுர்வேதஆரன்
பிரபந்தஆரன் அபங்கஆரன்
திருவாய்மொழியாரன் திருப்பாவைமணியாரன்
பல்லாண்டுமுத்தாரன் நாச்சியார்மொழியாரன்

திருமழிசைத்தமிழாரன் மதுரகவிமொழியாரன்
திருமாலையாரன் ஸ்ரீசுப்ரபாதன்
கொஞ்சுகுலசேகரபிஞ்சுதமிழாரன்
திருமங்கைமன்னன்பெரியமொழியாரன்

திருப்பாவையாரன் நாச்சிமொழியாரன்
திருமொழியாரன் சந்தவிருத்தாரன்
திருமாலையாரன் திருவெழுச்சியாரன்
அன்றலர்ந்ததாமரையன் சென்றுளவுமாநிறையன்
கொண்டலுடைவான்நிறத்தன் வெள்ளைமனபால்நிறத்தன்

ஸ்ரீராமானுஜஜெயம்

ஸ்ரீராமானுஜஜெயம்

இளையபெருமாள் துதி

அவர் படுக்கப்போனால் அவர் படுக்க முன்படுத்தீர்
அவர் பிறக்கப்போனால் அவர் சிறக்க பிறப்பெடுத்தீர்
அவர் மழையிலானால் நனையவிடாமல் நீர் குடையானீர்
அவர் மழையானால் சிதறவிடாமல் நீர் கூடையாவீர்

அவர் அமரப்போனால் அவர் அமர ஆசனமாய்
அவர் ஆளப்போனால் அவர் ஆள தாசனுமாய்
அவர் நிற்கப்போனால் அவர் நிற்க நீர் மேடை
உமக்கு கட்டளையாவதவர் முகக்குறிப்பு கண்ஜாடை

அவர் தமையனானால் அவர் அணைக்க நீர் தம்பி
அவர் தம்பியானால் அவரை அணைக்க நீர் தமையன்
அவர் தலைவனானால் அவருக்கு நீர் தொண்டன்
நீர் தலைவனானால் உமக்கு அவர் தொண்டன்

அவர் வேதமானால் நீர் விளக்கம்தரும் ஆசான்
அவர் கீதையானால் நீர் பொருளுரைக்கும் பாஷ்யான்
அவர் நடக்கும் பாதையெல்லாம் நீர் முன்சென்று திருத்துவீர்
அவருக்காய் உண்ணாமல் உறங்காமல் உம்மைநீர் வருத்துவீர்
பொன்ஆதிஷேஷ ராமானுஜேஷ
லக்ஷ்மண அருளாளே பலராமப் பெருமாளே
உடையவரே பாஷ்யரே உடையளவில் காஷ்யரே
எதிராஜ மூர்த்தி எண்ணற்ற கீர்த்தி

கோவிலொரு கோபுரம் சுருக்கமாய் ஏறி
நாராயண மந்திரம் முழக்கமாய் கூறி
அனைவருக்கும் மோக்ஷம் வழங்கினீர் வாரி
நரகம் புக துணிந்த பரம உபகாரி

இளையபெருமாளே உம் பாதம் போற்றி
லக்ஷ்மணப்பெருமாளே உம் சேவை போற்றி
பலராமப்பெருமாளே உம் கீர்த்தி போற்றி
ராமானுஜேஷரே உம் தொண்டு போற்றி

கிருஷ்ண பலராமரே போற்றி
பலராம கிருஷ்ணரே போற்றி
ராம லக்ஷ்மணரே போற்றி
லக்ஷ்மண ராமரே போற்றி!!

ஸ்ரீராமதூதஜெயம்

ஸ்ரீராமதூதஜெயம்

சின்ன குரு தட்சணை

அஞ்சனை பெற்ற அருந்தவப் புதல்வனே
வஞ்சனையற்ற பக்தியில் முதல்வனே
ராம பக்தியில் தன்னை இழந்திடும்
தன்னை இழப்பதில் உள்ளம் நெகிழ்ந்திடும்
நல்ல வித்தையில் நீயென் முன்னோடி
அதை நான் கற்றிட கேட்கிறேன் மன்றாடி

மீண்டும் மீண்டும் கனவில் வந்து
உள்ளம் தளரா ஊக்கம் தந்து
எனை ராம பக்தனாய் ஆக்கிய குருவே
பணிவின் துணிவின் பக்தியின் உருவே
எப்படி சொல்வேன் நன்றிகள் உனக்கு
கைம்மாறு செய்ய வக்கில்லை எனக்கு

காமக் களியாட்டம் நிறைந்த இலங்கையில்
ராக்கதர் யாவும் உறங்கும் வேளையில்
ராம தூதனாய் உள்ளே நுழைந்தாய்
ராக்கதர் ஆட்டத்தை அறவே களைந்தாய்
நான் இருந்ததனாலா நடமாடும் இலங்கையாய்
நானுறங்கும் வேளையில் என்னுள்ளே புகுந்தாய்?

ஆணவம் உள்ளவன் நானென புரிந்தும்
காடென வளர்த்த காமங்கள் தெரிந்தும்
கதையோடு எந்தன் கனவில் தோன்றினாய்
பக்தியின் விதையை சேற்றில் ஊன்றினாய்
ராவணன் மமதையை நெருப்பால் எரித்தாய்
என் மமதையை மட்டுமேன் அன்பால் கரைத்தாய்?

எண்ணுருப்பு தேய நிலத்தில் விழுகிறேன்
ராம பக்தனே உன் பாதம் தொழுகிறேன்
நீ கைகூப்பும் நிலையை மனதில் கொணர்கிறேன்
ஆணவம் அற்றல் இதுவென உணர்கிறேன்
இறை படைப்பில் உனைவிட செல்வந்தர் இல்லை
இதை உணர்ந்ததால் என்னுள் ஏழ்மைகள் இல்லை

அடியேன் பணிகிறேன் உன் பாதம் தொழுகிறேன்
இன்னொரு இமயமே உன் கால்களில் விழுகிறேன்
இவ்வுலகம் எனையும் உனைப் போல கொள்ளட்டும்
இன்னொரு அனுமன் இவனென்று சொல்லட்டும்

ஸ்ரீராமருக்காய் மலைசுமந்த உன் தோளுக்கு வணக்கம்
வெண்கல மணியணிந்த உன் வாலுக்கு வணக்கம்
ஸ்ரீராமர்புகழ் பாட நீ மீட்டும் யாழுக்கு வணக்கம்
உன்னையே தாங்கி நிற்கும் உன் காலுக்கு வணக்கம்

ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்!!

ரோம ரோமமு ராம நாமமே!

ஓம் ஸ்ரீசீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமந்த் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மணே நமஹ!

கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.
- நம்மாழ்வார்


சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்

எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்

ஸ்ரீராம காயத்ரி

ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்

ஸ்ரீ சீதா காயத்ரி

ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்

ராம பாத காயத்ரி

ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்

வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே

கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே

ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே

நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே

ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை

ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்
-கம்பர்

நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே

-கம்பர்

மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்

நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கிய
ர்

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்

ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்

காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்

நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்

ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்

ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-
சிவவாக்கியர்

காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்

திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி

டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே

ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே

சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?

ராம்ராம்

அம்மா பரமேஸ்வரியை
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்

கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்

இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!

சுவாமி சின்மயானந்தர்

சுவாமி சின்மயானந்தர்
என் கீதாச்சார்யார்

நன்றியுரை

சின்மையா னந்தரை சிந்தையுடன் நினைக்கிறேன்
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது

அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது

இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது

மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது

கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது

அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ

அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!

சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!

சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!

Wednesday, March 24, 2010

பெரிய மனத்து பெருமாள்


அது ஒரு முருகர் கோவில். அங்கே ஒரு தனி சன்னதியில் பெருமாள் படுத்திருந்தார். அவரைப் பார்த்துவிட்டு முருகரை தரிசிக்க சென்றோம். அடுத்த காட்சியில் முருகரை தரிசித்து விட்டு வெளியே வரும் வழியில் சுவரெங்கும் ராமர் படங்களும் இடையிடையே அம்மன் படங்களும் இருந்தன. குறிப்பாக ராமர் ராவணனை வதம் செய்யும் படம் தெளிவாக தெரிந்தது. அந்த படங்களை பார்த்த படி என் அம்மாவின் தாயாரிடம், "அம்மாயி, இந்த பெருமாள பாருங்களேன். இவருக்கு ரொம்ப பெரிய மனசு. முருகர் கோவில்ல ஒரு சின்ன சன்னதியா இருந்தாலும் எவ்வளவு ஆனந்தமா படுத்திருக்கார் பாருங்களேன். இவருக்கு கௌரவ பிரச்சனையெல்லாம் கிடையாது. சிவபெருமான் கால்ல கூட விழ தயங்க மாட்டார். மக்கள் எல்லாரும் எங்கடா சிவபெருமான பெரிய கடவுள்னு நினைச்சுருவாங்களோ அப்படிங்கற கவலையெல்லாம் இவருக்கு கிடையாது. ரொம்ப பெருந்தன்மையானவர். எல்லாரையும் அரவணைச்சு போவார். அதனாலயே இவர யாராலும் ஜெயிக்க முடியாது. ஆனா இவர் யார வேணா ஜெயிச்சுருவார்" என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே பெருமாள் சன்னதி வந்தது.

பெருமாளை பார்த்துக் கொண்டிருந்த பொழுது பெருமாள் புரண்டு படுத்தார். "கல் சிலையா இருந்தாலும் எப்படி புரண்டு படுக்குறார் பாருங்க" என்றேன் என் அம்மாவின் தாயாரிடம். நான் இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே பெருமாள் எழுந்து உட்கார்ந்து கொண்டார். எங்களை பார்த்து சிரித்த முகத்துடன் கைகுவித்து வணக்கம் சொன்னார். சிரித்த முகத்துடன் அவர் தலையசைப்பது எப்படியிருந்ததென்றால்- நாங்கள் அவர் இடத்திற்கு சென்றிருப்பது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது போலும் எங்களை வருக வருக என வரவேற்பது போலும் இருந்தது. அவர் நாற்பது வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் இருந்தாலும் அவர் சிரிப்பு குழந்தை சிரிப்பாக இருந்தது. எங்களை கண்டதில் ரொம்ப குதூகலம் அடைந்திருப்பதாக இருந்தது. அவர் எங்களை வணங்கிய விதத்தையும் அந்த குழந்தை சிரிப்பின் மூலம் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விதத்தையும் கண்ட பொழுது அழுகை பீறிட்டுவந்தது.

அழுத படி, "பெருமாளே பெருமாளே பெரிய மனத்து பெருமாளே" என்றேன்.

அவர் ஒரு நிமிடம் இருங்கள் என்பது போல கையால் சைகை செய்து, உங்களுக்கு ஒன்று தருகிறேன் என்பது போல தலையாட்டினார். பின்னர் பின்புறம் திரும்பி குனிந்து ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து எங்கள் மீது வீசினார். முதல் முறை என் இடது புறத்தில் விழுந்தது. இரண்டாவது முறை எனக்கு கொஞ்சம் முன்பாக விழுந்தது. ஆனால் நான் நனையவில்லை. பின்னர் மூன்றாவது முறையாக அவர் நீரை கையில் விட்டு எங்கள் பக்கம் வீசினார். அது எனக்கு முன்பாக இருந்த சுவற்றில் ஒரு அருவியை போல பெருக்கெடுத்து வழிந்தது. (அந்த சுவருக்கு மேல் இருக்கும் மேடையில் தான் பெருமாள் இருந்தார்.) நான் அழுதபடியே அந்த சுவற்றில் இரண்டு கைகளையும் வைத்தபடி என் தலையை அந்த அருவியில் நனைத்தேன்.

அப்பொழுது அழுதபடியே, "இந்த சிறியனுக்கும் மனது வைத்த பெரிய மனத்து பெருமாளே" என்றேன்.

பின் உலகியல் நினைவு வந்து கனவு கலைந்தது. விழித்துக் கொண்டேன். மணி அதிகாலை 3.25. தேதி 22.03.2010. நேற்றைய முன் தினம். என் பிறந்த நாள்.

அன்று என் தம்பி ராமர் பட்டாபிஷேகப் படமும், துளசி தாசர் ராமர் மீது இயற்றிய பக்தி கவிதைகளும், வெண்ணை உண்ணும் பாலகிருஷ்ணர் திரு உருவ பொம்மையும் பரிசளித்தான்.
பார்த்தசாரதி சுவாமி கோவிலுக்கு சென்று திரும்பும் பொழுது சீதா லக்ஷ்மண அனுமன் சமேத ராமர் படம் ஒன்று வாங்கி வந்தேன். சில நாட்களுக்கு முன்பாக பி.ஜி.ஷர்மா அவர்கள் வரைந்த ராமாயண ஓவியங்களை சகோதரி வைஜெயந்தி அவர்களிடம் கேட்டிருந்தேன். ராமநவமிக்கு அனுப்புவதாக சொல்லியிருந்தார். ஆனால் அவரும் என் பிறந்த நாள் அன்றே எனக்கு அனுப்பியிருந்தார். அவருக்கு அன்று எனக்கு பிறந்தநாள் என்பது தெரியாது. இப்படியாக அன்று முழுவதும் பல்வேறு ரூபங்களில் என்னிடம் வந்து, தன்னையே கதியென்று சரண் புகுந்தவர்களுக்கு தன்னையே பரிசாக கொடுப்பவர் என்பதை என் விஷயத்தில் நிரூபித்து விட்டார் பெரிய மனதுடைய பெருமாள்.

கனவில் நான் சொன்ன அந்த இரண்டு வரிகளையும் முதல் இருவரிகளாக கொண்டு பின் வரும் கவிதையை அன்றே இயற்றினேன்.

பெரிய மனத்து பெருமாள்

பெருமாளே பெருமாளே பெரிய மனத்து பெருமாளே
இந்த சிறியன் மீதும் மனது வைத்த பெரிய மனத்து பெருமாளே
உங்களை ராமராக மட்டுமே நான் காண விரும்புவேன்
என் கண்ணை கட்டிவிட்டாலும் ராமர் பக்கம் திரும்புவேன்
தாங்கள் நெஞ்சில் எட்டி உதைப்பவரை 'கால் வலிக்குமே?' என கேட்பவர்
நல்லவரை தேடிச் சென்று தன் கூட்டத்தில் சேர்ப்பவர்

பக்தி செய்த அன்பர் நெஞ்சில் கைதியாக வாழ்பவர்
அன்பான அர்ச்சனையில் ஆனந்தம் கொள்பவர்
பக்தர் புகழ் காப்பதையே விரதமென்று நோற்பவர்
பக்தர் புகழ் சேர்ப்பதற்கு பக்தரிடம் தோற்பவர்
போலி கௌரவம் பாராமல் சிவனாரையும் வணங்குவீர்
உயர்வு தாழ்வு பேதம் தீர்க்க சிரம் தாழ்த்த இணங்குவீர்

தங்கள் செய்கையதை பார்த்துவிட்டு சிவம் பெரிது என்பவர்
தங்கள் பெருந்தன்மை புரியாத அறியாமை உள்ளவர்
தாங்கள் பக்தர்களை பூஜிப்பதை வரலாறு சொல்லுமே
சிவனார் முதல் குசேலர் வரை பட்டியலும் நீளுமே
பக்தர்களை கௌரவிக்க தங்களை போல் யாருளர்?
தாங்கள் கௌரவித்த பக்தர்கள் எண்ணற்ற பேருளர்.

வள்ளலாக வாழ்ந்தவர் முன் கையேந்தி கௌரவம்
வீரரிடம் சண்டையில் விழுப்புண்ணேற்று கௌரவம்
அக ஆராய்ச்சியில் சிறந்தவர் முன் சிஷ்யனாகி கௌரவம்
உரிமையோடு தொழுதோருக்கு பிள்ளையாகி கௌரவம்
பக்தியோடு தொழுதோருக்கு பாத பூஜை செய்து கௌரவம்
பக்தியோடு காமம் சேர்ந்தால் காதல் செய்து கௌரவம்

நட்போடு பக்தி செய்தால் நண்பனாகி கௌரவம்
பிரியாது இணைந்திருந்தால் உடன்பிறப்பாகி கௌரவம்
விரதமேற்று தவமிருந்தால் கணவனாகி கௌரவம்
தன்னலமற்று அன்பு செய்தால் வேலைக்காரனாகி கௌரவம்
சவரத் தொழில் பக்தருக்காய் சவரம் செய்து கௌரவம்
வலைப் பதிவில் பக்தி சொன்னால் பிறந்ததின ஆசி கூறி கௌரவம்

பெருமாளே உம்பெருமை சொல்ல சொல்ல தீருமோ?
உம் முழுப்பெருமை சொல்லப் போனால் தமிழ் மொழியும் போதுமோ?
இந்த பெருமை போதாதென்று ராமராவும் பிறந்தீரே
அந்த பெருமை சொல்ல போனால் உலக மொழியனைத்தும் போதுமோ?

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு பிறந்த தின நல் வணக்கங்கள்.
அன்பர்களுக்கு ராம நவமி நல்வாழ்த்துக்கள்.

8 comments:

Thilaga. S said...

எத்தனை அற்புதமான கனவு..
பெருமாளிடம் பக்தி வைத்தால் அவர் அருளை நிச்சயம் பெறலாம் என நம்பிக்கை தரும் கட்டுரை இது....

"A faithful man will be richly blessed".

//பக்தி செய்த அன்பர் நெஞ்சில் கைதியாக வாழ்பவர்..
அன்பான அர்ச்சனையில் ஆனந்தம் கொள்பவர்//
மிகவும் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்..
கடவுளின் அருளைவிட இந்த உலகில் சிறந்த செல்வம் எதுவுமில்லை..

Rajewh said...

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு பிறந்த தின நல் வணக்கங்கள்.
அன்பர்களுக்கு ராம நவமி நல்வாழ்த்துக்கள்.

ramesh sadasivam said...

திலகா, ராஜேஷ் இருவருக்கும் என் இதயம் கலந்த நன்றிகள்.

ஸ்ரீ ராமஜெயம்.

Unknown said...

anandham arputham hare rama hare rama rama rama hare hare hare krishna hare krishna krishna hare krishna hare hare

Unknown said...

anandham arputham hare rama hare rama rama rama hare hare hare krishna hare krishna krishna hare krishna hare hare

ramesh sadasivam said...

வருகைக்கும் மகிழ்சியை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி பாலு சார்.

Seenu said...

Hi Ramesh.. I'm srini, 23 yrs old from chennai.. I would fall at ur feet if u r just next to me.. All I can do is to write "Thanks a lot.." thru this comment.. I've never been so emotional like this.. When i read your dream in the post, without any reason and without my conscience I was in a pool of tears.. I dont remember of me crying in the past few years for any reason.. Especially now, when i'm in deep trouble, this post really brought me up.. It just reminds me of the saying a stranger said to me in nanganallur anjaneyaswami temple.. "If u take one step towards god, he runs 100 steps towards U.."..

Jai Sri Ram..

ramesh sadasivam said...

:)