தோழி ஈஸ்வரி முந்தைய பதிவின் பின்னூட்டத்தில், "ஒண்ணு கேட்குறேன் தப்பா நினைக்காதிங்க ரமேஷ்,
ராமன் கர்பவதியான சீதையை காட்டில் விட சொல்லும் இடத்தில் உங்கள் மனதில் என்ன பட்டது?
என்னால் எவ்வளவு சரியான காரணங்கள் சொன்னாலும் இதை மட்டும் ஏற்றுகொள்ளவே முடியலை" என்று கேட்டிருந்தார்.
இது ராமாயணத்தை படிக்கும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் ஏற்படும் உறுத்தல் தான். எனக்கும் அது ஏற்பட்டது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நான் முதலில் நாத்திகனாக இருந்தவன். பின் அருவ வழிபாட்டிற்கு மாறினேன். கண்ணன் தந்த கீதையில் இருக்கும் பல கருத்துக்கள் எனக்கு உதவியதால் கிருஷ்ண பக்தனானேன். அதன் பிறகு கடந்த மூன்றாண்டுகளாக ராமரையே அதிகமாக வழிபட்டு வருகிறேன்.
நான் ராமபக்தியை சுவைக்க துவங்கிய புதிது. ராமாயணம் படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அப்பொழுது எனக்கு 'ஆர்ஷிய சத்தார்' என்கிற இஸ்லாமிய பெண்மணி ஆங்கிலத்தில் எழுதிய ராமாயணம் படிக்கக் கிடைத்தது.
மிகவும் ரசித்து படித்துக் கொண்டே வந்தேன். அன்னை சீதையை தீக் குளிக்கும் காட்சி வந்தது. அப்பொழுது என் மனதில் எந்த உறுத்தலும் ஏற்படவில்லை. அதற்கு மூன்று காரணங்கள்.
முதல் காரணம். என் குணமும் அது தான். எனக்கு மனதில் ஒரு உறுத்தல் இருந்தால் அதை நான் வெளிப்படையாக கேட்டுவிடுவேன். எனக்கு மனதில் சந்தேகத்தை ஒளித்து வைத்துக் கொண்டு அன்பாக இருப்பது போல நடிப்பது ஒவ்வாது. அதனால் அவர் தன் சந்தேகத்தை வெளிப்படையாக கேட்டதில் தவறிருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
இரண்டாம் காரணம். ராமர் ஏகபத்தினி விரதன். அவர், தன் மனைவி ஒழுக்கத்தில் தனக்கு இணையாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை.
மூன்றாம் காரணம். ராமருக்கு சீதையை நன்றாக தெரியும். அவருக்கு அன்னை சீதை தன் மீது கொண்டுள்ள நேசம் தெரியும். சீதையின் கற்பு நெறி நன்றாக தெரியும். ஆனால் இவ்வுலகம் அப்படிப்பட்டதல்ல. அது யாரைப் பற்றியும் எதுவும் பேசும். அப்படியிருக்கும் பொழுது தன் மனைவியின் மேன்மையை பிறருக்கு எடுத்துக் காட்டுவது அவர் கடமையாகிறது. சீதையிடம் ராமர், "எனக்கு உன்னைப் பற்றி நன்றாக தெரியும். ஆனால் உலகம் உன்னைப் பற்றி தவறாக நினைக்க கூடாது. ஒரு முறை உன் கற்பின் வலிமையை காட்டுவதற்காக நீ தீக் குளிக்க வேண்டுமென்று" சொன்னால். சீதைக்கு தீக் குளிக்கும் வைராக்கியம் ஏற்படாது. ஏனென்றால் சீதைக்கு ராமர் தான் உலகம். சீதை ஏன் மற்றவர்களைப் பற்றி கவலைப் பட போகிறார்?
ராமர் சீதையிடம் அந்த இடத்தில் காட்டிய கோபம் உண்மையானதாக இருக்கலாம், பொய்யானதாக இருக்கலாம். எப்படியிருந்தாலும் அது நியாயமானது தான் என்று எனக்குப் பட்டது.
கதையை தொடர்ந்து படித்து வரும் பொழுது ராமர் தன் தூதுவர்களிடம் நாட்டின் நிலைப் பற்றி விசாரிக்கும் காட்சி வருகிறது. அப்பொழுது பத்ரன் என்கிற ஒரு ஒற்றன் சொல்கிறான், "நான் மக்கள் பேசுவதை ஒளிவு மறைவின்றி சொல்கிறேன். உங்கள் ஆட்சியில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். உங்கள் பராக்ரமங்களை வியக்கிறார்கள். நீங்கள் கடலைக் கடக்க பாலம் அமைத்தது பற்றி அதிசயப்படுகிறார்கள். ராவணனையும் அவன் படைகளையும் அழித்தது குறித்து பிரமிப்போடு பேசிக்கொள்கிறார்கள். ராமர் கசப்பான பல நினைவுகளை கூட மறந்து விட்டு சீதையோடு மகிழ்ச்சியாக வாழ்கிறார். ராவணனால் கொண்டு செல்லப் பட்டது தெரிந்தும் அவரால் எப்படி சீதையொடு மகிழ்ச்சியாக வாழ முடிகிறது என்கிறார்கள். நமக்கு அந்நிலை ஏற்பட்டால் நாமும் அதையே செய்ய வேண்டியிருக்கும். அரசன் எவ்வழியோ நாமும் அவ்வழியே" என்கிறார்கள்."
இதைக் கேட்டதும் ராமர் மனம் உடைந்து போகிறார். தன் மூன்று தம்பிகளை மட்டும் அழைக்கிறார். அவர்களிடம்," நான் ஒரு முடிவு எடுத்துள்ளேன். நீங்கள் மூவரும் அதை மறுக்காமல் ஏற்க வேண்டும்" என சொல்கிறார். அவர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். அப்பொழுது லக்ஷ்மணரிடம் சீதையை அழைத்துக் கொண்டு போய் காட்டில் விட்டு விடும் படி சொல்கிறார். முதலில் மூவரும் அதைக் கேட்டு அதிர்ச்சியாகி அது பற்றி விவாதிக்க முயல்கிறார்கள். அவர் அவர்களை தடுத்து விடுகிறார்.
லக்ஷ்மணர் மறுநாள் அன்னையை அழைத்துக் கொண்டு காட்டிற்கு செல்கிறார். லக்ஷ்மணர் சோகம் தாங்காமல் ரகசியமாக அழுத படி ஒன்றும் பேசாமல் தேரை ஓட்டிச் செல்கிறார். வழி நெடிகிலும் தன்னை காட்டில் விடப் போகிறார்கள் என்பதே தெரியாமல் அனனை வெகுளியாக ஏதேதோ பேசி வருகிறார்.
எனக்கு இக்காட்சியைப் படித்த பொழுது இதயம் கனத்துப் போய் இருந்தது.
காட்டிற்கு சென்றவுடன் லக்ஷ்மணர் அன்னையின் காலில் விழுந்தபடி கதறி அழுகிறார். ராமரின் முடிவைப் பற்றி அன்னையிடம் தெரிவித்து தன்னால் தன் அண்ணனின் வார்த்தைகளை எதிர்க்க முடியவில்லை எனக் கூறி மன்னிப்புக் கேட்கிறார். அன்னை அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அன்னையை அழுதபடி கங்கைக் கரையில் விட்டு விட்டு லக்ஷ்மணர் தேரில் ஏறி திரும்பி விடுகிறார்.
எனக்கு இக்காட்சியைப் படித்த பொழுது அழுகையும் கோபமும் மாறி மாறி வந்தது. கோபத்தின் உச்சத்தில் ராமாயணத்தை அப்படியே ராமர் படத்தின் மீது விட்டெறிந்தேன். எழுந்து வெளியே சென்று விட்டேன்.
என்னால் இந்தப் பைத்தியக்காரத் தனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அது தான் ஒரு முறை தன்னை நிரூபித்துக் காட்டினாளே மீண்டும் மீண்டும் இது என்ன பைத்தியக்காரத்தனம் எனக் கடுமையான கோபம் போகவே யில்லை
நான் எல்லா தெய்வங்களையும் அலசி ஆராய்ந்து தான் ராமரைத் தேர்ந்தெடுத்திருந்தேன். கிருஷ்ணரை விடவும், நரசிம்மரை விடவும், சிவ பெருமானை விடவும் எனக்கு ராமர் மீது தான் பிடிப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம் அவர்களெல்லாம் ஆற்றல்களாலேயே பெரும்பாலும் தங்கள் மேன்மையை நிரூபித்து இருந்தார்கள். ராமரோ எந்த ஒரு இடத்திலும் தன் ஆற்றல்களால் தன் மேன்மையை நிரூபிக்கவில்லை. கடவுள்கள் ஆற்றலை பயன்படுத்தி தங்கள் மேன்மையை நிரூபிக்கும் காட்சிகளை நான் பெரிதாக போற்றுவதில்லை. எனக்கு அவை பிரமிப்பை ஏற்படுத்துவதில்லை. கிருஷ்ணர் சுண்டு விரலால் மலையைத் தூக்குவது எனக்கு பந்தா செய்யும் வேலையாகத் தான் தோன்றியது. சிவபெருமான் நக்கீரரை சுட்டெறித்தது அதிகார துஷ்பிரயோகமாகவே எனக்கு பட்டது. ஆனால் ராமரை நினைத்தாலே காலில் விழ வேண்டும் என்று தோன்றியது. நான் இப்படியெல்லாம் வியந்து வியந்து போற்றிய ராமர் இப்படி ஈவு இரக்கமில்லாமல் நடந்து கொண்டிருப்பார் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
நான் எப்பொழுது அறையை விட்டு வெளியே சென்றாலும் ராமர் படத்தை பார்த்து விட்டு செல்வது தான் வழக்கம். அதே போல திரும்ப உள் நுழையும் பொழுதும் ராமர் படத்தை பார்த்து விட்டுத் தான் உள் நுழைவேன். அது மட்டுமில்லாமல் ராமர் படத்தை என் எல்லா எண்ணங்களயும் பகிர்ந்து கொள்ளும் விதமாக அவ்வப்பொழுது பார்த்துக் கொள்வேன். ராம நாமம் இடையறாது உள்ளே ஓடிக் கொண்டே இருக்கும்.
ராமரைப் பார்ப்பதைக் கூட தவிர்த்தேன். ராம நாமம் ஜபிப்பதையும் நிறுத்தினேன். மனசுக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. ரொம்ப நாட்கள் கழித்து என் அகம்பாவத்தை ஒருவர் முன் பலியிட முடியும் என நினைத்திருந்தேன். ராம நாமம் ஜபிப்பதில் கிடைக்கும் நிம்மதி போதும், பணம் புகழ் கூட வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால் கடைசியில் அவரும் இப்படி இதயமற்ற ஒரு செயலை செய்திருக்கிறார்.
ஒரு நாள் கழித்து மிகுதியையும் படித்தேன். ராமர் அஸ்வமேத யாகம் நடத்தும் பொழுது அன்னை மீண்டும் ராமரை சந்திப்பார். அப்பொழுது வால்மீகி ராமரிடம் அன்னையை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்வார். அப்பொழுது மீண்டும் அன்னை தன்னை நீரூபிக்க வேண்டும் என்று ராமர் கூறுவார். அன்னை அப்படியே பூமி பிளக்க உள்ளே சென்று மறைந்து விடுவார். எனக்கு அது கொஞ்சம் திருப்தியாக இருந்தது. நான் ராமரைப் பார்த்து, "நீங்க நினைச்சா தீக்குளிக்க சொல்வீங்க. அவங்களுக்கு வேற வேலையில்லையா?" என்றேன். அப்பொழுது ராமரின் அந்த கருணை விழிகள் என் உள்ளத்தில் தைத்தது. இந்த ராமரா இப்படிச் செய்தார் என்று தோன்றியது.
ஏற்கனவே ஒருமுறை ராமர் இவ்வுலகில் வாழ்ந்த பொழுது எப்படி இருந்தாரோ அப்படியே என் கனவில் பார்த்திருக்கிறேன். (அது பற்றி இத்தளத்தின் 50வது பதிவாக எழுதுவேன்.) அந்தக் கனவு என் நினைவில் வந்தது. அந்த ராமரா இப்படி செய்தார் என்று தோன்றியது?
மீண்டும் ஒரு முறை ராமாயணம் படிக்க வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் படித்தேன். இந்த முறை ராமரே என் இதயத்தில் இருந்து தன்னிலை விளக்கம் அளிப்பது போல இருந்தது. ஐம்பூதங்களிலும் அசுத்தப் படுத்த முடியாத ஆகாயம் என் ராமர் என்பது அப்பொழுது எனக்கு விளங்கியது. எந்த சம்பவம் ராமர் மீது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியதோ, அதே சம்பவம் அவரை நான் மேலும் மேலும் போற்றி புகழவும் கொண்டாடவும் காரணமாக அமைந்து விட்டது. அது வரை ராமரைப் பற்றி புகழ்ந்தது கடலலைகளை மட்டுமே பார்த்துவிட்டு கடலைப் புகழ்ந்ததுப் போல் தான் என்பது அப்பொழுது புரிந்தது.
ராமர் அன்னை சீதையை வனத்திற்கு அனுப்பிய செயல் கல் மனம் கொண்டு செய்த செயலாக தோன்றலாம். ஆனால் அந்தக் கல்லுக்குள் கசிந்த ஈரத்தை நாம் கவனிப்பதில்லை.
ராமர் இன்றைய ஆட்சியாளர்கள் போல ஆட்சி நடத்தவில்லை. இன்றைய ஆட்சியாளர்கள் எதை செய்கிறார்களோ இல்லையோ வாய் கிழிய நன்றாக பேசுகிறார்கள். எல்லா தவறுகளையும் செய்துவிட்டு தவறே செய்யவில்லையென பேசுகிறார்கள். ராமர் அப்படிப்பட்டவர் அல்ல. அவர் செயல் வீரராக இருந்தார். தன்னிடம் உண்மையிலேயே எந்த தவறும் இல்லாதவாறு நடந்து கொண்டார். அதற்குக் காரணம் மக்கள் தன்னை நல்ல முன் உதாரணமாக கொண்டு வாழ வேண்டும் என்பது தான். அது ஒரு அரசனின் கடமை என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
இப்பொழுது ராமர் சீதையிடம் குறையிருந்தும் ஏற்றுக் கொண்டுவிட்டார் என்று மக்கள் நினைத்துவிட்டார்கள். அப்படி மக்கள் நினைத்தால் மக்களிடம் குற்றங்களை சகித்துக் கொள்ளும் மன நிலை ஏற்படும். இதை ராமர் விரும்பவில்லை. அன்னையிடம் குறையில்லை என்பதையும் ராமரால் மக்களிடம் நிரூபிக்க முடியவில்லை. காரணம் அக்னிப் பரீக்ஷை இலங்கையில் நடந்திருந்தது. அதுப் பற்றி இங்கு சொன்னால் சிலர் நம்பாமலும் போகலாம். அதனால் அவருக்கு இருந்த ஓரே வழி அன்னையை துறப்பது தான். அப்படி அன்னையை அவர் துறந்து விட்டால் ராமர் குறையோடு அன்னையை ஏற்றார் என்பது பொய்யாகி விடும். குறையொடு அன்னையை ராமர் ஏற்றார் என்பது பொய்யாகிவிட்டால் மக்களும் குறைகளை பொறுத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் வந்துவிடும். குற்றம் குறைகளை சகித்துக் கொள்ளாத ஒரு சமுதாயத்தில் தான் ராம ராஜ்யம் மலர முடியும். ராம ராஜ்யம் என்பது பூமியை சொர்க்கத்துக்கு இணையாக உயர்த்தும் முயற்சி. அந்த முயற்சிக்கு ராமர் கொடுத்த விலை, தன் உயிரான மனைவியை காட்டுக்கு அனுப்பியது.
அப்படி அவர் தன் உயிரை காட்டுக்கு அனுப்பிவிட்டு நடைபிணமாக வாழ்ந்த வாழ்க்கைதான் ராமாயணத்திற்கே காவிய அந்தஸ்த்தை வழங்குகிறது.
ராமர் லக்ஷ்மணரிடம் அன்னையை காட்டுக்கு அழைத்து சென்று விட்டுவிடும் படி கூறுகிறார். அன்னை ராமரிடம் சொன்னால் வனத்திற்கு செல்ல மனம் வராது என்பதால் சொல்லாமலேயே கிளம்புகிறாள். (இரண்டொரு நாளில் வந்துவிடுவோம் என்ற எண்ணம் அவளுக்கு) அப்பொழுது ராமர் தன் அறையில் கண்களில் நீர் வழிய அமர்ந்திருக்கிறார். அதன் பிறகு அது பற்றி ராமர் யாரிடமும் பேசுவதில்லை. அவர் தானும் காட்டுக்குப் போகப்போவதாக சொல்லியிருந்தால் மீண்டும் தம்பிகள் மூவரும் நாங்களும் வருகிறோம் என்பார்கள். மக்களில் பாதி பேர் பின்னாலேயே வருவார்கள். அவர் வேறு என்ன தான் செய்திருக்க முடியும்?
ஒரு பக்கம் தன் காதல் மனைவியை காட்டிற்கு அனுப்பிவிடுகிறார். மறுபக்கம் அன்னையின் பொற்சிலையை தன் அறையில் வைத்துக் கொள்கிறார். தேவதாசைப் போல சோகத்தில் குடித்து சீரழியவும் இல்லை. மாறாக எல்லா சோகத்தையும் தனக்குள்ளேயே புதைத்துவிட்டு மக்களுக்கான தன் கடமையை சிறப்பாக செய்கிறார். அவர் நினைத்திருந்தால் எத்தனை பெண்களோடு வேண்டுமானாலும் கூடிக் களித்திருக்கலாம். ஆனால் அவர் அன்னையைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மனதாலும் தொடவில்லை. அலுவல்கள் முடித்தவுடன் தனிமையில் அன்னையின் சிலை அருகில் வந்து அமர்ந்துவிடுவார். தன் சோகத்தைக் லக்ஷ்மணரிடம் கூட அவர் சொல்லவில்லை. சொன்னால் அன்னையை கூட்டிவர வேண்டும் என லக்ஷ்மணர் கிளம்பக் கூடும்.
என் ராமர் எப்படி வாழ்ந்திருக்கிறார் பாருங்கள்.
மனதுக்குள் ஒரு மென்மையான சோகம். அதை வெளிப்படுத்த முடியாத கடமையுணர்ச்சி. அன்னையின் மீதான காதலும் பிரிவின் ஏக்கமும் ஒரு புறம் இதயத்தை துளைக்க மக்கள் நலனுக்காக மட்டுமே செயல் பட்ட அந்த பரந்த மனம்.
இதையெல்லாம் உணர்ந்ததால் தான் நான் ஸ்ரீ ராமர் புகழில்
"சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்" என்று எழுதினேன்.
ராமரை குற்றம் சொல்வது நிறைய பேருக்கு ரொம்ப எளிதாக இருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லாம் ராமர் அளவுக்கு நல்லவர்களும் இல்லை, புத்திசாலிகளும் இல்லை. அப்புறம் எங்கிருந்து ராமரை புரிந்து கொள்வது?
அதிவேகமாக சுற்றும் ஒரு பம்பரம் நிற்பது போல தெரியும். ராமரின் நற்பண்பும் அத்தகையது தான்.
அதிசுத்தமான கண்ணாடி தான் இருப்பதையே காட்டிக் கொள்ளாது.ராமரின் நல்ல மனம் அப்படிப்பட்டது தான்.
இதையெல்லாம் உணர்ந்த பிறகு எனக்கு ராமரை முன்பைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக பிடித்துப் போனது. என் அகம்பாவத்தை ஒருவர் முன்னால் விட்டுக் கொடுக்க முடியும் என்றால் அது ராமர் முன் மட்டும் தான். நான் சிரம் தாழ்த்தித் தொழ ஒரு தெய்வத்திற்கு தகுதியுண்டென்றால் அது ராமர் மட்டும் தான்.
48 comments:
Thank You very much for writing & sharing this post.Because as you wrote ''ராமரை குற்றம் சொல்வது நிறைய பேருக்கு ரொம்ப எளிதாக இருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லாம் ராமர் அளவுக்கு நல்லவர்களும் இல்லை, புத்திசாலிகளும் இல்லை. அப்புறம் எங்கிருந்து ராமரை புரிந்து கொள்வது?''
I think they blame Rama easily as they know he is good & wouldn't harm them even they talk bad.
He is so kind.That's why all talk.
Me also misundertood Rama before as you did.I refused to pray Lord Rama as I love Mother Seeta a lot.Then I met a Chinmaya Mission Swamiji by accident as I was lucky.I asked him questions.He explained me well & I understood.
By writing this comment I request Lord Rama & Seeta to forgive my mistake.
ரமேஷ். ஒரு நிமிஷம் அசந்து போய் நிற்கிறேன். மகிழ்கிறேன். மீண்டும் படிக்கிறேன்.
இன்னும் என்ன எழுவது என்று தெரியாமலேயே மீண்டும் துவக்கம் நோக்கி scroll செய்கிறது இந்த பக்கம்.
-வித்யா
Dear Niru,
Welcome. Ya, may be that's why it is easy for people to talk bad about Ramar. :)
As I wrote in the beginning of this article, all good hearts feel disturbed by this act of Lord Ramar. But it is only lack of maturity. So you and me are no exceptions. We are like children. We are just growing! Lord Rama and Mother Sita know this. So they will certainly forgive us for this ignorant act. :)
அன்புள்ள வித்யா அவர்களுக்கு,
மிக்க நன்றி. தங்கள் பின்னூட்டம் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. :)
வித்யாவின் நிலையில்தான் நானும் இருக்கின்றேன்.பிரமிப்பாக உள்ளது உங்கள் எழுத்தாற்றல்.ராமர் யுகம் வேறு,கலி யுகம் வேறு. தர்மமே வேறு.இப்பொதைய அளவு கோலால் அளவிடமுடியாது.க்ஷத்திரிய தர்மம்,ராஜ தர்மம்,பதி தர்மம்,அவதார குறிக்கோள் எல்லாம் உள்ளது.நிதானமாக படித்து பின்னர் எழுதுகிறேன்.
அழகான விளக்கங்களுக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும் திரு.ரமேஷ் சதாசிவம்.
#K.Parthasarathy
அன்புடையீர்,
தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. நான் அத்தனை தர்மங்களைப் பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. "எல்லா தர்மங்களையும் விட்டு என்னையே சரண் புகுவாய்" என்ற கிருஷ்ணரின் கட்டளையை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். என் மனதிலிருந்து இறைவன் தந்த கருத்துக்களையே எழுதினேன். முரண்பாடுகள் இருந்தால் வெளிப்படையாக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
#ஜீவா
நான் முக்கியமாக ஏதாவது எழுதும் பொழுதெல்லாம் என்னை ஊக்குவித்து வருகிறீர்கள். மிக்க நன்றி ஜீவா.
ஸ்ரீராமரின் மன நிலையையும் காரண காரியங்களையும் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி ரமேஷ்.
நன்றி கவிநயா!
//ராமரை குற்றம் சொல்வது நிறைய பேருக்கு ரொம்ப எளிதாக இருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லாம் ராமர் அளவுக்கு நல்லவர்களும் இல்லை, புத்திசாலிகளும் இல்லை. அப்புறம் எங்கிருந்து ராமரை புரிந்து கொள்வது?//
U r correct Ramesh
ஒரு பெண்ணாய் எனக்கு சீதையின் நிலையும்,கண்ணீரும் மட்டுமே பெரியதாக தெரிகிறது.
ராமரை புரிந்து கொள்ள எனக்கு இன்னும் பக்குவம் இல்லை தான் .
நான் இன்னொரு காரணம் கூட படித்து இருக்கேன். (இது வால்மீகி ராமயணத்திலா அல்லது கம்ப ராமயணத்திலான்னு தெரியலை)
ராவண வதம் முடிந்தபோது தசரத மகராஜா தோன்றி ராமரிடம் வேண்டும் வரம் கேட்க சொன்னார் .
ராமர் தனக்காக எதுவும் கேட்காததால் அவரே முன் வந்து ஒரு வரம் தந்தார்.
அதாவது ராமரின் ஆயுட்காலம் இன்னும் சிறுது நாட்கள் தான் இருந்தது .
தசரத மகாராஜா இறந்தது புத்திர சோகத்தினால் மட்டுமே . அவர் ஆயுட்காலம் இன்னும் முடியவில்லை .
சீதா பிராட்டி என்றும் மங்களகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய ஆயுட்காலத்தை ராமருக்கு கொடுத்தாராம்.
சீதா பிராட்டி காட்டிற்கு போன நாளில் ராமரின் ஆயுட்காலம் முடிந்து தசரத ராஜாவின் காலம் தொடங்குகிறது. இது ராமருக்கும், லட்சுமணனுக்கும் மட்டும் தெரிந்த தேவ ரகசியம்.
இந்த காரணத்தை படித்த பிறகு ராமரின் மேலிருந்த கோபம் விலகியது.
இருந்தாலும் அன்னை சீதா காட்டில் பட்ட கஷ்டங்களை படிக்கும் போது மீண்டும் என் மனது ஏனோ இந்த பிரிவை ஏற்றுக்கொள்ளமாட்டேன்கிறது.
அது நான் உங்களைப் பற்றி சொன்னதல்ல. ராமர் மீது குறை சொல்ல வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு சிலர் சிந்திக்கிறார்கள். அவர்களைப் பற்றி சொன்னேன். :)
//இருந்தாலும் அன்னை சீதா காட்டில் பட்ட கஷ்டங்களை படிக்கும் போது மீண்டும் என் மனது ஏனோ இந்த பிரிவை ஏற்றுக்கொள்ளமாட்டேன்கிறது.//
அன்னை சீதை காட்டில் கஷ்டப்பட்டார் என்பதெல்லாம் மிகைப் படுத்தப்பட்ட கூற்று. அவர் வன வாழ்க்கையை எப்பொழுதுமே விரும்பியவர் தான். அவருக்கு இருந்த ஒரே வருத்தம் ராமரை பிரிந்திருந்தது தான். அந்த வலி ராமருக்கும் தான் இருந்தது. அதனால் இருவரும் சமமான துன்பங்களையே இப்பிரிவால் அனுபவித்தார்கள்.
//ராமரை புரிந்து கொள்ள எனக்கு இன்னும் பக்குவம் இல்லை தான் .//
உண்மை தான்.
ராமரை பற்றி நான் புரிஞ்சு கொள்ளாமல் இருப்பதால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை.
ஆனால் சிறந்த ராம பக்தராய் இருக்கும் நீங்கள், தப்பு தாப்பா ராமாயணத்தை புரிந்து கொண்டு அதை மற்றவர்களுக்கும் எடுத்து சொல்வதில் தான் இருக்கு கஷ்டம்(எனக்கில்லை).
ராமரை ஒரு சந்தேககாரராக சொல்லிவிட்டு அதுக்கு சில சப்பையான காரணங்களை சொல்லி உங்களை நீங்களே தேற்றி கொண்டு மற்றவர்களையும் தேற்றி....... ,
சிறந்த ராம பக்தராய் இருக்கும் நீங்கள் very very great Ramesh.
//போற்றுதலோ தூற்றுதலோ ஸ்ரீ ராமரையே சேரும். :) [அதனால் தாராளமாய் திட்டலாம் நான் தவறாக நினைக்க மாட்டேன்]
by
Ramesh Sadasivam.//
அப்படின்னு நெனைச்சு மனசுல பட்டதை சொல்லிட்டேன். இருந்தாலும் உங்க மனசு வருத்த படுவதால் i am very very very very sorry.
நான் ராமாயணத்தை தவறாக புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் தான் நான் எழுதிய மூன்றாம் காரணத்தை படிக்காமல் நான் ராமர் சந்தேகப்பட்டதாக கூறியிருப்பதாக நினைத்துவிட்டீர்கள். நான் சொல்வது எதிலும் தவறில்லை. நீங்கள் தான் முயற்சி செய்து புரிந்து கொள்ள வேண்டும். நான் ஏற்கனவே இது பக்திக்கான தளம் இதில் சர்ச்சை செய்ய வேண்டாம் என கேட்டிருந்தேன். நீங்கள் தான் அதை மீண்டும் மீண்டும் மீறுகிறீர்கள். என் மனசு நிச்சயம் வருத்தப்படவில்லை. தாங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் எண்ணத்தோடு கேள்வி கேட்டால் நான் நிச்சயம் பதில் சொல்வேன்.
Sory Ramesh. எனக்கு மனைவியின் மேல் சந்தேகப் படும் ஆண்களை சுத்தமா பிடிக்காது. அப்படி இருக்கையில் எல்லா மனிதர்களுக்கும் உதாரண புருசனாக இருக்கும் ஸ்ரீ ராமர் எப்படி தனக்காகவோ, மற்றவர்களுக்காகவோ தன்னில் சரி பாதியை பலிக்கடா ஆக்குவார்? இந்த காரணங்கள் தெரியாத வரை நான் ராமரை வெறுத்தேன். ஆனால் சரியான காரணங்கள் தெரிந்த பின்னே அவர்மீதிருந்த வெறுப்பு போனது. ஆனால் இவ்வளவு ராம பக்தரா இருக்கும் நீங்கள் மனைவியின் மீது சந்தேகப் படுவது சரி என்று சொன்னது எனக்கு சிறிது கோபத்தை தூண்டியது. நான் சொல்லியது உங்கள் மனதை பாதித்திருக்கலாம். ஆனாலும் நீங்களும் எதனால் ராமர் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதை தெரிந்து கொண்டல் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.
திருப்பூர் கிருஷ்ணன் அவர்களது இராமாயண மொழிப் பெயர்ப்பில் தான் உண்மையான அர்த்தங்களை பல கண்டேன். அதை நான் சொல்வதை விட நீங்களே தேடி தெரிந்து கொள்ளுங்களேன்.
பக்திக்கான தளத்தில் சர்ச்சைகள் வேண்டாம் என நினைத்தேன். சரி இந்த கட்டுரைப் பற்றி உங்கள் எல்லா கேள்விகளையும் விமர்சனங்களையும் முன் வையுங்கள். நான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்கிறேன். கோபம் வருத்தம் எதுவும் இல்லை. நல்ல விவாதமாக இருக்கட்டும். :)
ஈஸ்வரி, நான் மூன்றாம் காரணம் ஒன்று எழுதினேன். அதை படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
நான் மனைவி மீது சந்தேகப்படுவது சரியென்று சொல்லவில்லை. ஆனால் அதே சமயம் கணவன் தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையை தவறாக பயன்படுத்தும் பெண்கள் இன்று இல்லை என்று நீங்கள் சொல்லக் கூடாது. அது தவறு.
எல்லாவற்றிக்கும் உதாரண புருசனாக இருக்கும் ராமர் சீதையின் மீது மற்றவர்களுக்கு தப்பான அபிப்ராயாம் இருக்க கூடாது ன்னு தீக்குளிக்க சொன்னார். அவருக்கு தெரியும் தீ சீதையை எதுவும் செய்யாது.
ராமரை வணங்குபவர்களுக்கும் அதே போல ஒரு சூழ்நிலை வந்தால் அவர்கள் எடுக்கும் முடிவு எதுவாக இருக்கும்?
சரி தீ குளிக்க செய்தார்? பின் காட்டிற்கு அனுப்பினார். இப்போது திருமணத்தின் போது சீதையின் தந்தைக்கு அக்னி சாட்சியாக சீதையை கை விட மாட்டேன் என்று சொன்ன வாக்கு என்னானது? ராமர் தன் சத்தியத்தை பின்பற்றலையா?
நீங்கள் சொன்ன இந்த காரணங்களை மட்டும் படித்ததால் இந்த கேள்வி எல்லாம் எனக்கு முன்னால் தோன்றியவை.(மறைந்து போனவை)
இந்தக் கட்டுரையைப் பொறுத்தவரை ராமர் சீதையை காட்டுக்கு அனுப்பியது சூழ்நிலைகளுக்கும் தன் கடமைக்கும் கட்டுப்பட்டு மக்கள் நலன் கருதி எடுக்கப் பட்ட முடிவு என்பதையும் அந்த முடிவை அவர் முழு மனதோடு எடுக்கவில்லை என்பதையும் தான் விளக்கி இருந்தேன்.
அதுவும் என் புரிதலில் அந்த சம்பவத்தை நான் எப்படி பார்த்தேன் என்பதைத் தான் விளக்கியிருந்தேன்.
இதே சம்பவத்தை பலரும் பலவாறாக விளக்குகிறார்கள். அதில் உங்களுக்கு வேறொவரின் விளக்கம் பொருத்தமானதாக தோன்றலாம். நான் என் அறிவிற்கு பட்டதை சொல்லியிருந்தேன்.
ராமர் கடவுளாக இருந்த பொழுதும் ராமவதாரத்தில் முழுக்க முழுக்க ஒரு நல்ல பண்புள்ள சராசரி மனிதராக நடந்து கொண்டார் என்பது தான் எனக்கு அவரிடம் பிடித்த-புரிந்த விஷ்யம்.
நீங்கள் கேட்பது போன்ற கோணத்தில் நான் சிந்திக்கவில்லை.
ராமர் ஜனகருக்கு கொடுத்த வாக்குறுதியை மீறிவில்லை என்றும் அது எப்படி என்பதற்கும் வேறு யாரேனும் விளக்கங்கள் சொல்லியிருக்கலாம். எனக்கு அது தெரியாது.
என்னைப் பொறுத்த வரை நல்ல கணவனாக இருக்க வேண்டும் அல்லது நல்ல அரசனாக இருக்க வேண்டும் என்ற சூழ்னிலையில் அவர் நல்ல அரசனாக இருப்பதை தேர்ந்தெடுத்தார் என்றே கருதுகிறேன். அது தான் எனக்கு அவரிடம் பிடித்திருக்கிறது.
//ராமரை வணங்குபவர்களுக்கும் அதே போல ஒரு சூழ்நிலை வந்தால் அவர்கள் எடுக்கும் முடிவு எதுவாக இருக்கும்?//
அது அந்த அந்த சூழ்நிலையைப் பொறுத்தது.
//நான் மனைவி மீது சந்தேகப்படுவது சரியென்று சொல்லவில்லை.//
//அதனால் அவர் தன் சந்தேகத்தை வெளிப்படையாக கேட்டதில் தவறிருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
இரண்டாம் காரணம். ராமர் ஏகபத்தினி விரதன். அவர், தன் மனைவி ஒழுக்கத்தில் தனக்கு இணையாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. //
(இந்த பின்னூட்டம் மின்னஞ்சலின் கழிவிற்குள் சென்றுவிட்டதால் நேற்று இதை கவனிக்கவில்லை)
நான் ராமர் சீதையை தீக் குளிக்கச் செய்ததை மூன்று கோணங்களில் சிந்தித்து பார்த்ததாகவும், மூன்று கோணங்களிலுமே அவர் செய்ததில் தவறிருப்பதாக எனக்கு தோன்றவில்லை என்றும் தான் சொல்லியிருந்தேன்.
ராமர் சீதையை சந்தேகப்பட்டிருப்பாரா இல்லையா என்று முடிவுக்கு வரும் முன் இப்படியெல்லாம் சிந்தித்தேன் என்று தான் நான் குறிப்பிட்டிருந்தேன்.
ஒருவன் இறுதியாக ஒரு விஷயத்தை பற்றி முடிவுக்கு வரும் முன் பல்வேறு கோணங்களிலும் சிந்திப்பதில் எந்த தவறும் இல்லை.
//சீதா பிராட்டி என்றும் மங்களகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய ஆயுட்காலத்தை ராமருக்கு கொடுத்தாராம்.
சீதா பிராட்டி காட்டிற்கு போன நாளில் ராமரின் ஆயுட்காலம் முடிந்து தசரத ராஜாவின் காலம் தொடங்குகிறது. இது ராமருக்கும், லட்சுமணனுக்கும் மட்டும் தெரிந்த தேவ ரகசியம்.
இந்த காரணத்தை படித்த பிறகு ராமரின் மேலிருந்த கோபம் விலகியது.//
இப்படி தேவ ரகசியம் என்று ஏதாவது காரணம் சொன்னால் அது உங்களுக்கு ரொம்ப திருப்தியாக இருக்கிறது.
அதே நான் நடைமுறை அடிப்படையில் ராமரின் மனநிலையை விளக்கினால் அது உங்களுக்கு திருப்தியளிப்பதில்லை. உங்களைப் போன்றவர்களால் தான் ஆன்மிகம் என்கிற பெயரில் அறிவுப் பூர்வமான விளக்கங்களை விட ஜீபூம்பா கதைகள் மலிந்து கிடக்கின்றன.
ஸ்ரீ ராமர் சத்தியவான். ஒருநாளும் எதற்காகவும் தான் கொடுத்த வாக்கை மீறியதில்லை. அது சீதைக்கும், ஜனகருக்கும் தான். மனிதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரண புருஷன்.
தன் மனைவி மீது (ஊருக்காக) சந்தேகபட்டு இருந்தாலோ, அல்லது தன் மனைவிக்கும், ஜனகர் மகா ராஜாவுக்கும் மக்கள் முன்னிலையிலும் பஞ்ச பூதங்கள் முன்னிலையிலும் செய்த சத்தியத்தை தானே மீறி இருந்திருந்தாலோ உதாரண புருசனகவோ, சத்தியவானாகவோ இருக்கும் தகுதியை இழந்திருப்பார்.
ஆனால் நீங்க இப்போது சொன்ன விளக்கங்கள் மட்டுமே பெரும்பாலனவர்களுக்கு தெரிந்து இருக்கிறது. இவற்றை கேட்கும் போது உண்மையில் என்னை போன்றோருக்கு ஸ்ரீ ராமர் மீது கோபமே வரும்.
பல ஆன்மீக வித்தகர்கள், ராம பக்தர்கள் எழுதிய ராமாயணத்தையும் நீங்கள் படித்து ராமரின் செயல்களுக்கு உண்மையான காரணங்ககளை நன்கு தெரிந்து கொண்டு உங்கள் அழகான எழுத்து நடையில் அனைவருக்கும் விளக்க வேண்டும் என்பதே என் ஆசை.
//உங்களைப் போன்றவர்களால் தான் ஆன்மிகம் என்கிற பெயரில் அறிவுப் பூர்வமான விளக்கங்களை விட ஜீபூம்பா கதைகள் மலிந்து கிடக்கின்றன.//
இது ஜீபூம்பா கதைகள் என்றால் ராமர் சிவ தனுசை உடைத்ததும், பாதாள உலகத்துக்கு போனதும், வானரங்கள் பேசியது, ஆட்சி செய்தும், தசரத மகராஜ் அறுபதாயிரம் வருடங்கள் வாழ்ந்ததும், புஷ்பக விமானத்தில் ராமரும், வானரங்களும் பறந்து வந்ததும், ஹனுமான் மலையை தூக்கியதும்...... இப்படி ராமாயணம் முழுவதும் இருக்கும் விசயங்களுக்கும் என்ன பேர்? இதை நீங்கள் நம்ப வில்லை என்றால் ராமாயணம் பற்றி ஏன் பேசுகிறிர்கள்?
சீதா தேவி மண்ணிலிருந்து தோன்றியதும், அசோக வனத்தில் எதையும் சாப்பிடாமல், தூங்காமல், ஆடைகள் மாற்றாமல் இருந்ததும், தீயில் இருந்து எந்த காயமும் இல்லாமல் வந்ததும், ......... இதில் அறிவு பூர்வமான விஷயங்கள் எதாவது இருந்தால் சொல்லவும்.
//ராமருக்கும், லட்சுமணனுக்கும் மட்டும் தெரிந்த தேவ ரகசியம். //
தேவ ரகசியமாக இருந்தது. (கொஞ்சம் பிங்கரிங் ஸ்லிப் ஆயிடுச்சு)
ராமாயணத்தில் நம்பிக்கை அடிப்படையில் ஏற்றுக் கொள்ள வேண்டிய பல விஷ்யங்கள் இருப்பதை நான் மறுக்கவில்லை. நான் அவற்றி நம்புகிறேன்.
ஆனால் ராமர் சீதையை வனத்திற்கு அனுப்பியது தெரிந்து கோபம் கொள்ளும் ஒருவர், ராமர் நல்லவர் என்பதை தெரிந்த பின் தான் சமாதானம் அடைய வேண்டுமே ஒழிய, ராமருக்கு தசரதர் ஆயுளை கொடுத்ததால் தான் சீதை காட்டுக்கு போனாராம் அதனால் எனக்கு ராமர் மீதிருந்த கோபம் போய்விட்டது என்பது வேடிக்கையில்லையா?
ராமருக்கு தசரதர் ஆயுளை கொடுத்திருந்தாலும் ராமருக்கு சீதையை காட்டிற்கு அனுப்ப எப்படி மனம் வந்தது என்பதற்கான் பதில் அந்த விளக்கத்தில் இருக்கிறதா?
என் விளக்கம் எந்த புத்தகத்திலிருந்தும் எடுக்கப்பட்டதல்ல. அது என்னை நான் ராமரின் இடத்தில் வைத்து சிந்தித்ததில் கிடைத்தது. ராமரிடம் பிரார்த்தனை செய்து கேட்டபின் என் இதயத்தில் தோன்றிய பதில் இது.
அப்படி நம்பிக்கை அடிபடையில் ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷ்யங்களாய்யும் கூட எனகென்று சில தியான அனுபவங்கள் கிடைத்த பின் தான் ஏற்றுக் கொண்டேன். உதாரணம் ஒருவர் நெடுநாட்கள் உணவருந்தாமல் இருப்பது ஒரு நிலைப்பட்ட மன் நிலையில் முடியும் என்பதை அனுபவ ரீதீயாகவே நான் உணார்ந்திருக்கிறேன். அதே போல தியானத்தின் போது உடல் வலிமையோடும் காற்றைப் போல லேசாக ஆவதையும் உணர்ந்திருக்கிறேன். அதன் பிறகு தான் ஆஞ்சநேயர் மலையைத் தூக்கி கொண்டு பறந்திருப்பார் என்பதை ஏற்றுக்கொண்டேன்.
தேவ ரகசியம் என்றாலும் தேவ ரகசியாமாக இருந்தது என்றாலும் என்ன வித்தியாசம். இரண்டும் ஒன்று தான்.
//தன் மனைவிக்கும், ஜனகர் மகா ராஜாவுக்கும் மக்கள் முன்னிலையிலும் பஞ்ச பூதங்கள் முன்னிலையிலும் செய்த சத்தியத்தை தானே மீறி இருந்திருந்தாலோ உதாரண புருசனகவோ, சத்தியவானாகவோ இருக்கும் தகுதியை இழந்திருப்பார். //
முதலில் இதற்கு விளக்கம் உங்க தியான சக்தியின் மூலம் கேட்டு சொல்லவும். மேலும் நீங்கள் சொல்லவருவது ராமர் ஒரு மனிதனா அல்லது இறை அவதாரமா? என்பதையும் விளக்கவும்.
// ராமர் நல்லவர் என்பதை தெரிந்த பின் தான் சமாதானம் அடைய வேண்டுமே //
தப்பு செய்யாத சீதை பழியை அனுபவிக்கனும், ராமர் செய்த தப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமா?
தேவ ரகசியம் என்றால் - ராமர் லக்ஷ்மனுக்கும் மட்டும் தெரியும். வேறு யாருக்கும் தெரியாது
தேவ ரகசியாமாக இருந்தது என்றால் - பின்னாளில் பலருக்கும் தெரிந்து இருக்கிறது
//நல்ல கணவனாக இருக்க வேண்டும் அல்லது நல்ல அரசனாக இருக்க வேண்டும் என்ற சூழ்னிலையில் அவர் நல்ல அரசனாக இருப்பதை தேர்ந்தெடுத்தார் //
// ராமர் சீதையை வனத்திற்கு அனுப்பியது தெரிந்து கோபம் கொள்ளும் ஒருவர், ராமர் நல்லவர் என்பதை தெரிந்த பின் தான் சமாதானம் அடைய வேண்டுமே //
//ராமவதாரத்தில் முழுக்க முழுக்க ஒரு நல்ல பண்புள்ள சராசரி மனிதராக நடந்து கொண்டார் என்பது தான் எனக்கு அவரிடம் பிடித்த-புரிந்த விஷ்யம். //
ராமர் சராசரி மனிதர் - 100% ok
ராமர் பண்புள்ள மனிதர் - Not ok
எல்லாமே தெரிந்தவர் இவ்வுலகில் யாரும் இல்லை. நீங்களும் ராமாயணத்தில் தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் இருக்கிறது என்பது மட்டுமே என் வாதம். இதை நீங்கள் புரிந்து கொண்டாலும் சரி, புரிந்து கொள்ளாவிட்டாலும் சரி என் வாதத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
என் தியான சக்தியை பயன்படுத்தி எந்தக் கேள்விக்கும் பதில் கண்டுபிடிக்க முடியும். அது எனக்கு ஏற்படும் சந்தேகமாக இருக்கும் பட்சத்தில். நீங்கள் சர்சை செய்யும் நோக்குடன் கேட்கும் கேள்விகளுக்காகவெல்லம் என் தியான நேரத்தை செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பதில் தெரிய வேண்டும் என்றால் நீங்கள் தியானம் செய்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் என் தியான சக்தியை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.
//தப்பு செய்யாத சீதை பழியை அனுபவிக்கனும், ராமர் செய்த தப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமா?//
நீங்கள் ராமரை எதிர்க்கிறீர்களா இல்லை என்னை எதிர்கிறீர்களா என்பதை தெளிவுபடுத்துங்கள். அதன் பிறகு தேவைப் பட்டால் நான் ராமர் அவதாரமா இல்லை மனிதரா என்பதை தெளிவுபடுத்துகிறேன்.
//ராமர் சராசரி மனிதர் - 100% ok
ராமர் பண்புள்ள மனிதர் - Not ok//
ஒன்றும் தெரியாதது போல கேள்வி கேட்பதும். பின் அதற்கு பதில் சொன்னால் அதை படிக்காமலே எனக்கு ஏற்கனவே வேறொருவர் பதில் சொல்லிவிட்டார் அந்த பதில் தான் எனக்கு திருப்திகரமாக இருக்கிறது என்பதும். கேள்விகளை கேட்டுவிட்டு பதில் சொல்லும் முன்பே விவாதத்திலிருந்து விலகிக் கொள்கிறேன் என்பதும் --- உங்களை போனற தெளிவற்ற சிந்தனை உள்ள குழப்பவாதிகள் என் ராமரை ok செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் உங்கள் சான்றிதழுக்காக காத்திருக்கவில்லை.
நான் எல்லாம் தெரிந்தவனென்று சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் நான் தெரிந்ததாக சொல்லும் விஷயங்களில் தெளிவாக இருக்கிறேன்.
உங்களைப் போல ராம பக்தனை எதிர்க்க ராமரை திட்டுவதா அல்லது ராமரை எதிர்ப்பதற்காக ராம பக்தனை சீண்டுவதா என்ற குழப்பத்தில் தவிக்கவில்லை.
நீங்கள் சொல்ல வந்த கருத்தையே தெளிவாக சொல்லாத பட்சத்தில் வாதத்தை முடித்து கொண்டதாக ஏன் ஓடி ஒளிகிறீர்கள்.?
முதலில் நீங்கள் என்னை விமர்சிக்க நினைக்கிறீர்களா அல்லது ராமரையா, என்பதில் ஒரு தெளிவுக்கு வாருங்கள்.
பிறகு உங்களுக்கு சத்து இருந்தால் வாதத்தை தொடரலாம்.
1. //ஒன்றும் தெரியாதது போல கேள்வி கேட்பதும். பின் அதற்கு பதில் சொன்னால் அதை படிக்காமலே எனக்கு ஏற்கனவே வேறொருவர் பதில் சொல்லிவிட்டார் அந்த பதில் தான் எனக்கு திருப்திகரமாக இருக்கிறது என்பதும். //
//"ஒண்ணு கேட்குறேன் தப்பா நினைக்காதிங்க ரமேஷ்,ராமன் கர்பவதியான சீதையை காட்டில் விட சொல்லும் இடத்தில் உங்கள் மனதில் என்ன பட்டது? என்னால் எவ்வளவு சரியான காரணங்கள் சொன்னாலும் இதை மட்டும் ஏற்றுகொள்ளவே முடியலை"//
உங்கள் மனதில் பட்டதை கேட்டேன் . எனக்கு எந்த காரணமும் தெரியலைன்னு சொல்லலை. சரியான காரணங்கள் சொன்னாலும் ஏற்று கொள்ள முடியலைன்னு தான் சொன்னேன்.
-----------------------------------
2.//நீங்கள் சொல்ல வந்த கருத்தையே தெளிவாக சொல்லாத பட்சத்தில் வாதத்தை முடித்து கொண்டதாக ஏன் ஓடி ஒளிகிறீர்கள்.?//
a)நான் சொல்வது ராமரின் வாழ்நாளில் அவருக்கு யார்மீதும் சந்தேகம் என்பது வந்ததில்லை.
நீங்க சொல்வது அவருக்கு சந்தேகம் வந்தது அது நீங்கள் சொன்ன மூன்று காரணங்களால் முற்றிலும் சரி என்பது.
b) யாருடைய நலனுக்காகவும் (தன் நாட்டு மக்களுக்காக கூட) யாரையும் பலி கடா ஆக்கியது இல்லை.
நீங்க சொல்வது தன் நாட்டு மக்களுக்காக தான் சீதையை பலிகடா ஆகினார் என்று.
c) நான் சொல்வது ராமர் சத்தியவான். தன் சத்தியத்தை ஒருபோது மீறியது இல்லை
உங்கள் பதில் இன்னும் சொல்லலை.
------------------------------------
3.//அப்படி நம்பிக்கை அடிபடையில் ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷ்யங்களாய்யும் கூட எனகென்று சில தியான அனுபவங்கள் கிடைத்த பின் தான் ஏற்றுக் கொண்டேன். //
பதில் சொல்லாத கேள்விக்கு மட்டும் தான் உணர்ந்து பதில் சொல்ல சொன்னேன்.
------------------------------------
4. //உங்களை போனற தெளிவற்ற சிந்தனை உள்ள குழப்பவாதிகள் //
//ஆன்மிகம் என்கிற பெயரில் அறிவுப் பூர்வமான விளக்கங்களை விட ஜீபூம்பா கதைகள் மலிந்து கிடக்கின்றன.//
//ராமாயணத்தில் நம்பிக்கை அடிப்படையில் ஏற்றுக் கொள்ள வேண்டிய பல விஷ்யங்கள் இருப்பதை நான் மறுக்கவில்லை. நான் அவற்றி நம்புகிறேன்.//
நான் முன்பு சொன்னதும் இந்த நம்பிக்கையில் தான். குழப்பவாதி நானா? நீங்களா?
------------------------------------
5. //முதலில் நீங்கள் என்னை விமர்சிக்க நினைக்கிறீர்களா அல்லது ராமரையா, என்பதில் ஒரு தெளிவுக்கு வாருங்கள்.//
நான் எந்த கடவுளையும், நண்பர்களையும் விமர்சிக்க விரும்புவதில்லை.
கடவுள் ஒருபோதும் மனிதர்களுக்கு தப்பான முன் உதாரணங்களை கொடுப்பதில்லை.
நண்பர்கள் ஒருபோதும் நட்பை தப்பாக புரிஞ்சிக்கமாட்டாங்க
------------------------------------
6. //பிறகு உங்களுக்கு சத்து இருந்தால் வாதத்தை தொடரலாம்//
வாதம் ஏற்கனவே விமர்சனமாக போவதால் என் தோல்வியை ஒத்துக் கொண்டு நான் விலகுகிறேன் (அல்லது ஒளிந்து கொள்கிறேன்) .
என் மனதில் பட்டதை நானும் சொல்லியிருந்தேன். உங்களால் சரியான காரணங்கள் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாததற்கு நான் என்ன செய்ய முடியும். அதற்கும் நீங்களே, ராமரைப் புரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு இல்லை தான் என்றீர்கள். பிறகு ராமர் சராசரி மனிதர் என்பது 100%ok பண்புள்ள மனிதர் என்பது not ok என்றீர்கள்.
//2.//நீங்கள் சொல்ல வந்த கருத்தையே தெளிவாக சொல்லாத பட்சத்தில் வாதத்தை முடித்து கொண்டதாக ஏன் ஓடி ஒளிகிறீர்கள்.?//
a)நான் சொல்வது ராமரின் வாழ்நாளில் அவருக்கு யார்மீதும் சந்தேகம் என்பது வந்ததில்லை.
நீங்க சொல்வது அவருக்கு சந்தேகம் வந்தது அது நீங்கள் சொன்ன மூன்று காரணங்களால் முற்றிலும் சரி என்பது.
b) யாருடைய நலனுக்காகவும் (தன் நாட்டு மக்களுக்காக கூட) யாரையும் பலி கடா ஆக்கியது இல்லை.
நீங்க சொல்வது தன் நாட்டு மக்களுக்காக தான் சீதையை பலிகடா ஆகினார் என்று.
c) நான் சொல்வது ராமர் சத்தியவான். தன் சத்தியத்தை ஒருபோது மீறியது இல்லை
உங்கள் பதில் இன்னும் சொல்லலை.//
இவ்வளவு நியாயம் இப்பொழுது சொல்லும் நீங்கள் ராமர் சராசரி மனிதர் என்பது 100%ok பண்புள்ள மனிதர் என்பது not ok என்று சொல்ல காரணம் என்ன? ராமரைப் பற்றி அவதூறாக பேசிவிட்டு, ராமருக்கு ஆதரவாக எழுதிய நான் ராமரை குறை சொன்னதாக குற்றம் சொல்ல முயற்சிப்பது தங்கள் மனசாட்சிக்கு ஏற்புடையதா?
4>என் விளக்கத்தில் ராமர் நல்லவர் என்பதை தெளிவாக்கியிருந்தேன். தங்கள் கூறும் ராமருக்கு ஆயூள் கொடுக்கப்பட்ட விளக்கத்தில் ராமர் எப்படி நல்லவர் என்பது உங்களுக்கு விளங்கியதா?
அப்படியிருக்கையில் அந்த விளக்கம் உங்களுக்கு திருப்தி அளிப்பதாக சொன்னதாலேயே நான் தாங்கள் ஜீபூம்பா கதையை ஏற்பவர் என்றேன்.
5. கடவுளையும் நண்பர்களையும் விமர்சிக்க விரும்பாத நீங்கள் எதற்காக எனக்கு ராமாயணம் முழுமையாக தெரியவில்லை என்று சொல்ல வேண்டும். நான் எங்காவது ,"ராமாயாணத்தில் எனக்கு தெரியாததே கிடையாது. ராமாயணம் பற்றியும் ராமர் பற்றியும் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் இங்கு விடை கிடைக்கும் என்றும் அறிவிப்பு பலகை வைத்திருந்தேனா?" நீங்கள் வந்து கேள்வியையும் கேட்டுவிட்டு பின் இதை விட நல்ல பதிலை நான் ஏற்கனவே படித்துவிட்டேன் என்று சொல்லி, எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை என்றும் கூற காரணம் என்ன. நான் எல்லாம் தெரிந்தவன் என்று உங்களிடம் எப்பொழுதாவது சொன்னேனா? கடவுளை விமர்சிக்க விரும்பாத நீங்கள் ராமர் சீதையை காட்டுக்கு அனுப்பியது பற்றி மட்டும் விமர்சனம் செய்ய காரணம் என்ன?
இப்பொழுது தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் என்கிறீர்கள். நீங்கள் ஆரம்பத்தில் இருந்து நல்லெண்ண அடிப்படையில் என்னை அணுகினீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?
////2.//நீங்கள் சொல்ல வந்த கருத்தையே தெளிவாக சொல்லாத பட்சத்தில் வாதத்தை முடித்து கொண்டதாக ஏன் ஓடி ஒளிகிறீர்கள்.?//
a)நான் சொல்வது ராமரின் வாழ்நாளில் அவருக்கு யார்மீதும் சந்தேகம் என்பது வந்ததில்லை.
நீங்க சொல்வது அவருக்கு சந்தேகம் வந்தது அது நீங்கள் சொன்ன மூன்று காரணங்களால் முற்றிலும் சரி என்பது.
b) யாருடைய நலனுக்காகவும் (தன் நாட்டு மக்களுக்காக கூட) யாரையும் பலி கடா ஆக்கியது இல்லை.
நீங்க சொல்வது தன் நாட்டு மக்களுக்காக தான் சீதையை பலிகடா ஆகினார் என்று.
c) நான் சொல்வது ராமர் சத்தியவான். தன் சத்தியத்தை ஒருபோது மீறியது இல்லை
உங்கள் பதில் இன்னும் சொல்லலை.////
-----------------------------------
இந்த பதிவின் நோக்கத்தை எள்முனையளவும் தாங்கள் புரிந்து கொள்ளவில்லை எனபதற்கு இந்த வார்த்தைகளே சாட்சி. நான் ராமரை புரிந்து நேசித்து என்னால் முடிந்த அளவில் ராமர் புகழை பரப்புவதற்காக இத்தளத்தை வைத்திருக்கிறேன். அப்படி யிருக்கையில் ராமர் செய்த ஒரு செயல் தங்களுக்கு ஏற்புடையதல்ல என்று சொல்லிவிட்டு, கடைசியில் நான் ராமரைப் பற்றி தவறாக சொல்வதாக கதையை மாற்றப் பார்ப்பது, எவ்வகையில் நியாயம்?
ஒரு ராமபக்தனையே புரிந்து கொள்ள முடியாத தாங்கள் ராமரை புரிந்து கொள்வது என்பது கொஞ்சம் சிரமம் தான்.
Ayya, Thank you so much for this article. Ramarai sila per ippadi toocamaga pesum polutu en manathilaye alutirukiren..en ramar ippadi ellam seya mataar endra nambikai. Ungalai pola naan ramayanam paditathillai. naan pirantathil irunte sollum ore namam sri rama jayam taan. nandri.
நன்றி பரமேஸ்வரி.
மிக சிறப்பான பதிவு. ஆனால் வேண்டாத விவாதம். மனத்தால் செய்கிற விவாதம் எல்லாம் இப்படித்தான் மனக்கசப்பில் வந்து முடிகிறது. மனத்தை முழுவதும் ஸ்ரீ இராமரிடமோ, ஸ்ரீ கிருஷ்ணரிடமோ ஒப்படைத்துவிட்டால் அதற்குப் பின் சுயமாக ஒரு கருத்து உருவாகலாமா ? சரணாகதிக்கு பின் கருத்துக்கே அதிகாரம் இல்லை எனும்போது மறுகருத்து கொண்டோருடன் விவாதத்திற்கு போவது எப்படி சரியாகும்?
முற்றும் தவிர்ப்பது நல்லது என்று தோன்றுகிறது.
நன்றி - பதிவுகளைப் பாட்டுக்களை தொடருங்கள்...
Karuthu sonnamaikku nanri nanbarae.
SUPER DEFINITION. I AM VERY HAPPY TO READE THIS. THANK I VERY MUCH
ஸ்ரீ மஹா விஷ்னு அவதாரமே ராமர்.இது அனைவரும் அறிந்ததே.
அப்படி அன்னை மாஹாலக்ஷ்மியிடம் விஷ்னு கூறும் போது அழுதுக்கொண்டே தான் இப்பூலகிற்கு அவதறிக்க வந்தார்.
இப்படி ஒரு சொகம் நடக்கும் என்பது பகவானுக்கும் அன்னைக்கும் தெரிந்ததே.
பகவானும் மனிதானாக பிறந்துட்டதனால கஷ்டப்பட்டுதானே ஆகனும்.அவர்களுக்கே அப்படின்னா.நம்ம எல்லாரும்.
-ராமராஜன்.(+918124818767 & Ram_rajan@hotmail.com.
அற்புதமான பதிவு. வழி நடத்திகாட்டிய மன்னனின், எண்ணங்கள் அவன் மனதப் படித்தது போன்று அமைத்த பாண்மை மிகவும் சிறப்பு நன்றி தேழரே
உங்கள் பதிவு உண்மையை அழகாக சொல்கிறது
Post a Comment