CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

ஸ்ரீராமர்புகழ்

நம்மைப்போல சிரித்தவர் நம்மைப்போலே அழுதவர்
நம்மைப்போலே காதலித்து காதலோடு வாழ்ந்தவர்
இழப்புகளைக் கண்டவர் மீண்டெழுந்து வந்தவர்
உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகங்களை அறிந்தவர்
செல்வத்தையும் கண்டவர் ஏழ்மையையும் கண்டவர்
செல்வத்திலும் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தவர்

விதியென்னும் புயலிலே ஆடாத மரமல்லர்
அத்தனை புயலிலும் வீழாத மரமவர்
தன்னுயிராம் சீதையை தியாகம்செய்த மேன்மையர்
இதயத்தில் சீதையை இழக்காத ஆண்மையர்
புரிதலில்லா மக்களை பொறுத்துக்காத்த பூமியர்
புரிந்தபின் இதயத்தில் உயிரான சாமியர்

என்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே
என்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே
என்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே
என் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே
என் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே!

ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்

கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
துறு துறு சிறுவன் தசரத ராமர்
கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்

இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
ராஜ குருவாம் பரத ராமர்
தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
அன்புள்ள கணவன் சீதா ராமர்

உற்ற தோழன் குகனின் ராமர்
உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
தெய்வ உருவாம் அனுமத் ராமர்
ஞான சூரியன் ஜாம்பவ ராமர்

மூத்த மகனாம் சுமித்ர ராமர்
மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
மன்னித்தருளும் கைகேயே ராமர்
மகனே போன்றவர் ஜனக ராமர்

எளிய விருந்தினர் சபரியின் ராமர்
அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
பாப வினாசனர் கோதண்ட ராமர்

ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்
பெண்கள் போற்றும் கற்புடை ராமர்
மக்கள் மகிழும் அரசுடை ராமர்
பக்தர் நெகிழும் பண்புடை ராமர்

வேள்விகள் காக்கும் காவலன் ராமர்
சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்
இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
திருமண நாயகன் ஜானகி ராமர்

சிவ வில் முறித்த பராக்ரம ராமர்
ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
கடலை வென்ற வருண ராமர்
பாலம் கண்ட சேது ராமர்

மரம் ஏழு துளைத்த தீர ராமர்
மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
குலப் புகழ் காத்த சூர்ய ராமர்

சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்
தாயுமானவர் லவகுச ராமர்
தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்

கீதை தந்த கண்ணன் ராமர்
கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
சிவனை வணங்கும் பக்த ராமர்
சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்

முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
காந்தியின் கடவுள் சத்திய ராமர்
அறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்

ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்

ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்
ராம் ராம் என்றால் உவகை பெருகும்
ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
ராம் ராம் என்றால் தர்மம் புரியும்

ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
ராம் ராம் என்றால் வெற்றி விழையும்
ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்

ராம் ராம் என்றால் மனது அடங்கும்
ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்
ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்

ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
இன்பம் எல்லாம் விரைவில் கூடும்

ஸ்ரீராமபுண்யஜெயம்

ஸ்ரீராமபுண்யஜெயம்

பெரிய குரு தட்சணை

தேவகிநந்தன் வசுதேவபுத்ரன்
யசோதேயன் நந்தகுமாரன்

ஆயன் மாயன் சேயன் தூயன்
இலையன் சிலையன் களையன் மலையன்
அமிழ்ந்தவன் உமிழ்ந்தவன் விழுங்கினன் முழங்கினன்
உதைத்தவன் வதைத்தவன் கதைத்தவன் சிதைத்தவன்

ஆலன் லீலன் சீலன் ஞாலன்
பாலன் வாலன் காலன் காலன்
குறும்பன் கரும்பன் இரும்பன் துரும்பன்
ஆடலன் விளையாடலன் கூடலன் குழலூதினன்

ராதையன் பூங்கோதையன்
பாதையன் நற்கீதையன்
துகிலிழுத்தவன் துகிலளித்தவன்
உடனிருப்பவன் துயரறுப்பவன்

உரலுருட்டினன் உறித்திருட்டினன்
தோலிருட்டினன் பொய்புரட்டினன்
மலையெடுத்தவன் குடைப்பிடித்தவன்
தேர்ச்செழுத்தினன் தேரழுத்தினன்

மண்ணையுண்டவன் வெண்ணையுண்டவன்
கீரையுண்டவன் தோலையுண்டவன்
அவலையுண்டவன் அகிலமுண்டவன்
அறிவுக்குவிருந்தினன் மனதுக்குமருந்தினன்

ஏகன் அனேகன் ப்ரணவன் ப்ராணன்
ஈகன் இகபரன் அரங்கன் சுரங்கன்
மயக்கினன் கலக்கினன் விளக்கினன் விளக்கினன்
லயித்தவன் ஜெயித்தவன் நழுவினன் சிறையினன்

பன்முகன் இன்முகன் நன்முகன் நாயகன்
இன்னகன் விண்ணகன் மண்ணகன் தாயகன்
இன்மனன் நன்மனன் பொன்மனன் பூமணன்
சற்குணன் பொற்குணன் நற்குணன் நாரணன்

மேஷன் ரிஷபன் மிதுனன் கடகன்
சிம்மன் கன்யன் துலான் விருச்சிகன்
தனுஷன் மகரன் கும்பன் மீனன்
கிரகன் நட்சத்திரன் நாடியன் நற்சோதிடன்

முதலையறுத்தவன் யானைவிடுத்தவன்
கஜேந்திரவரதன் நரேந்திரவதனன்
உரலையிழுத்தவன் மரத்தைவிடுத்தவன்
நளகூபரவரதன் நலமேதருவதனன்

ஆமேய்த்தவன் ஆதேய்த்தவன்
புல்லூட்டினன் பால்கூட்டினன்
ஆவருடினன் ஆதடவினன்
ஆசுற்றினன் ஆபற்றினன்

ஆவணைத்தவன் ஆவனைத்தவன்
ஆமயக்கினன் ஆயியக்கினன்
ஆவுக்கொருநண்பன் ஆவிரும்புமன்பன்
ஆமணிக்கிசைவன் ஆமணியின்னிசையன்

காளிங்கநர்த்தனன் ஆலிங்கனர்த்தனன்
ராசலீலாதாரி பரமவுபகாரி
அகயோகியன் சுகபோகியன்
தவவீரியன் சுபகாரியன்

ஸ்ரீபாண்டவதூதன் ஸ்ரீபார்த்தகீதன்
பான்சசன்யசத்தன் குருட்சேத்திரயுத்தன்
பரீட்சீத்தைமீட்டான் தற்பெருமைகாட்டான்
இஷ்டத்துக்குக்கல்யாணன் பிரம்மச்சர்யப்ரமாணன்

வாழைபோல்செழிப்பன் ஆலைமேல்மிதப்பன்
ஊழிதோறும்பிறப்பன் வாழியெனவுரைப்பன்
அருந்தருமகற்பன் பெருஞ்சத்யகவசன்
கடமையிருகண்ணன் கண்ணியகருமன்னன்

ஆனந்தசயனன் ஆனந்தநடனன்
கரும்புஜகசயனன் கரும்புஜகநடனன்
நவநீதசோரன் தங்கமணியாரன்
புன்முறுவல்காரன் கீர்த்தியபாரன்

தோப்புக்கரணன் அபிஷேகன் அலங்காரன் புகழாரன்
பொன்னாரன் பூவாரன் பல்லாரன் சொல்லாரன்
மலராரன் மல்லியாரன் முத்தாரன் மணியாரன்
தாமரையாரன் வெண்தாமரையாரன்
செண்பகமலராரன் செந்தாமரையாரன்

கலியமூர்த்தி எளியமூர்த்தி இனியமூர்த்தி புனிதமூர்த்தி
மறைமூர்த்தி மலைமூர்த்தி சத்யமூர்த்தி நித்யமூர்த்தி
வரதமூர்த்தி விரதமூர்த்தி தேவமூர்த்தி தெய்வமூர்த்தி
அன்புமூர்த்தி அகிலமூர்த்தி அண்டமூர்த்தி உண்டமூர்த்தி

கோப்ரியன் கோபிப்ரியன் ஆப்ரியன் ஆவினப்ரியன்
கோநேசன் கோதாசன் கோவாசன் கோவீசன்
கோபாலன் கோவாளன் கோவைத்தியன் கோவைத்தனன்
பால்சோறுப்ரியன் திருவெண்ணைப்ரியன்
தயிர்சாதப்ரியன் நீர்மோர்ப்ரியன்

குதிரைமுகன் கூர்மமுகன் பன்றிமுகன் சிங்கமுகன்
ராமமுகன் கிருஷ்ணமுகன் கருணைமுகன் பொறுமைமுகன்
நல்லமுகன் ஞானமுகன் வல்லமுகன் வரதமுகன்
சூர்யமுகன் சந்திரமுகன் மலர்ச்சிமுகன் குளிர்ச்சிமுகன்

திருத்துழாய்ஆரன் சதுர்வேதஆரன்
பிரபந்தஆரன் அபங்கஆரன்
திருவாய்மொழியாரன் திருப்பாவைமணியாரன்
பல்லாண்டுமுத்தாரன் நாச்சியார்மொழியாரன்

திருமழிசைத்தமிழாரன் மதுரகவிமொழியாரன்
திருமாலையாரன் ஸ்ரீசுப்ரபாதன்
கொஞ்சுகுலசேகரபிஞ்சுதமிழாரன்
திருமங்கைமன்னன்பெரியமொழியாரன்

திருப்பாவையாரன் நாச்சிமொழியாரன்
திருமொழியாரன் சந்தவிருத்தாரன்
திருமாலையாரன் திருவெழுச்சியாரன்
அன்றலர்ந்ததாமரையன் சென்றுளவுமாநிறையன்
கொண்டலுடைவான்நிறத்தன் வெள்ளைமனபால்நிறத்தன்

ஸ்ரீராமானுஜஜெயம்

ஸ்ரீராமானுஜஜெயம்

இளையபெருமாள் துதி

அவர் படுக்கப்போனால் அவர் படுக்க முன்படுத்தீர்
அவர் பிறக்கப்போனால் அவர் சிறக்க பிறப்பெடுத்தீர்
அவர் மழையிலானால் நனையவிடாமல் நீர் குடையானீர்
அவர் மழையானால் சிதறவிடாமல் நீர் கூடையாவீர்

அவர் அமரப்போனால் அவர் அமர ஆசனமாய்
அவர் ஆளப்போனால் அவர் ஆள தாசனுமாய்
அவர் நிற்கப்போனால் அவர் நிற்க நீர் மேடை
உமக்கு கட்டளையாவதவர் முகக்குறிப்பு கண்ஜாடை

அவர் தமையனானால் அவர் அணைக்க நீர் தம்பி
அவர் தம்பியானால் அவரை அணைக்க நீர் தமையன்
அவர் தலைவனானால் அவருக்கு நீர் தொண்டன்
நீர் தலைவனானால் உமக்கு அவர் தொண்டன்

அவர் வேதமானால் நீர் விளக்கம்தரும் ஆசான்
அவர் கீதையானால் நீர் பொருளுரைக்கும் பாஷ்யான்
அவர் நடக்கும் பாதையெல்லாம் நீர் முன்சென்று திருத்துவீர்
அவருக்காய் உண்ணாமல் உறங்காமல் உம்மைநீர் வருத்துவீர்
பொன்ஆதிஷேஷ ராமானுஜேஷ
லக்ஷ்மண அருளாளே பலராமப் பெருமாளே
உடையவரே பாஷ்யரே உடையளவில் காஷ்யரே
எதிராஜ மூர்த்தி எண்ணற்ற கீர்த்தி

கோவிலொரு கோபுரம் சுருக்கமாய் ஏறி
நாராயண மந்திரம் முழக்கமாய் கூறி
அனைவருக்கும் மோக்ஷம் வழங்கினீர் வாரி
நரகம் புக துணிந்த பரம உபகாரி

இளையபெருமாளே உம் பாதம் போற்றி
லக்ஷ்மணப்பெருமாளே உம் சேவை போற்றி
பலராமப்பெருமாளே உம் கீர்த்தி போற்றி
ராமானுஜேஷரே உம் தொண்டு போற்றி

கிருஷ்ண பலராமரே போற்றி
பலராம கிருஷ்ணரே போற்றி
ராம லக்ஷ்மணரே போற்றி
லக்ஷ்மண ராமரே போற்றி!!

ஸ்ரீராமதூதஜெயம்

ஸ்ரீராமதூதஜெயம்

சின்ன குரு தட்சணை

அஞ்சனை பெற்ற அருந்தவப் புதல்வனே
வஞ்சனையற்ற பக்தியில் முதல்வனே
ராம பக்தியில் தன்னை இழந்திடும்
தன்னை இழப்பதில் உள்ளம் நெகிழ்ந்திடும்
நல்ல வித்தையில் நீயென் முன்னோடி
அதை நான் கற்றிட கேட்கிறேன் மன்றாடி

மீண்டும் மீண்டும் கனவில் வந்து
உள்ளம் தளரா ஊக்கம் தந்து
எனை ராம பக்தனாய் ஆக்கிய குருவே
பணிவின் துணிவின் பக்தியின் உருவே
எப்படி சொல்வேன் நன்றிகள் உனக்கு
கைம்மாறு செய்ய வக்கில்லை எனக்கு

காமக் களியாட்டம் நிறைந்த இலங்கையில்
ராக்கதர் யாவும் உறங்கும் வேளையில்
ராம தூதனாய் உள்ளே நுழைந்தாய்
ராக்கதர் ஆட்டத்தை அறவே களைந்தாய்
நான் இருந்ததனாலா நடமாடும் இலங்கையாய்
நானுறங்கும் வேளையில் என்னுள்ளே புகுந்தாய்?

ஆணவம் உள்ளவன் நானென புரிந்தும்
காடென வளர்த்த காமங்கள் தெரிந்தும்
கதையோடு எந்தன் கனவில் தோன்றினாய்
பக்தியின் விதையை சேற்றில் ஊன்றினாய்
ராவணன் மமதையை நெருப்பால் எரித்தாய்
என் மமதையை மட்டுமேன் அன்பால் கரைத்தாய்?

எண்ணுருப்பு தேய நிலத்தில் விழுகிறேன்
ராம பக்தனே உன் பாதம் தொழுகிறேன்
நீ கைகூப்பும் நிலையை மனதில் கொணர்கிறேன்
ஆணவம் அற்றல் இதுவென உணர்கிறேன்
இறை படைப்பில் உனைவிட செல்வந்தர் இல்லை
இதை உணர்ந்ததால் என்னுள் ஏழ்மைகள் இல்லை

அடியேன் பணிகிறேன் உன் பாதம் தொழுகிறேன்
இன்னொரு இமயமே உன் கால்களில் விழுகிறேன்
இவ்வுலகம் எனையும் உனைப் போல கொள்ளட்டும்
இன்னொரு அனுமன் இவனென்று சொல்லட்டும்

ஸ்ரீராமருக்காய் மலைசுமந்த உன் தோளுக்கு வணக்கம்
வெண்கல மணியணிந்த உன் வாலுக்கு வணக்கம்
ஸ்ரீராமர்புகழ் பாட நீ மீட்டும் யாழுக்கு வணக்கம்
உன்னையே தாங்கி நிற்கும் உன் காலுக்கு வணக்கம்

ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்!!

ரோம ரோமமு ராம நாமமே!

ஓம் ஸ்ரீசீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமந்த் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மணே நமஹ!

கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.
- நம்மாழ்வார்


சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்

எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்

ஸ்ரீராம காயத்ரி

ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்

ஸ்ரீ சீதா காயத்ரி

ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்

ராம பாத காயத்ரி

ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்

வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே

கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே

ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே

நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே

ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை

ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்
-கம்பர்

நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே

-கம்பர்

மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்

நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கிய
ர்

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்

ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்

காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்

நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்

ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்

ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-
சிவவாக்கியர்

காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்

திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி

டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே

ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே

சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?

ராம்ராம்

அம்மா பரமேஸ்வரியை
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்

கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்

இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!

சுவாமி சின்மயானந்தர்

சுவாமி சின்மயானந்தர்
என் கீதாச்சார்யார்

நன்றியுரை

சின்மையா னந்தரை சிந்தையுடன் நினைக்கிறேன்
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது

அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது

இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது

மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது

கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது

அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ

அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!

சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!

சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!

Sunday, April 27, 2014

அகர ராமாயணம்


































அன்பு

அகரமானவர் அரியுமானவர் அன்புராமனாய் அவதரித்தார்
அண்டமானவர் அன்னையானவள் அங்கமானதை அலங்கரித்தார்
அன்பு அமுதையே அன்னமாகவே அருந்தி அருந்தியே அவருயர்ந்தார்
அல்லல் அல்லலை அறுத்து அகற்றவே அண்ணலானவர் அகமிசைந்தார்

அகலிகை அவதியை அக்கணமே அழித்தது அண்ணலின் அருட்பாதம்
அடுத்ததாய் அரனின் அரியவில் அறுந்து அவர் அடியில் அடைந்தது அருட்செல்வம்
அழகியராமர் அழகியசீதை அன்பால் அன்று அகமிணைந்தார்
அகமகிழ் அன்னையர் அகமகிழ் அரசர்கள் அன்புடன் அன்பினை அர்ச்சித்தார்

அறம்

அரியணை அகன்று அரசினை அளித்து அறமே அவரென அவரிருந்தார்
அண்ணனின் அன்பே அரியது அரியணை அன்றென அன்புப்பரதர் அகமுடைந்தார்
அயோத்தி அரசுக்கு அரசன் அவசியம் அன்புடன் அண்ணனை அழைத்திட்டார்
அண்ணன் அடியை அன்புடன் அணைத்து அழுதே அவரை அசைத்திட்டார்

அண்ணன் அசைவது அல்லதென்றானதும் அண்ணன் அடியை அணைத்திட்டார்
அண்ணன் அடியின் அருட்பாதுகையை அன்பளிப்பாய் அளிக்க அழுதிட்டார்
அடிபணிந்தவன் அன்பின் அசலாயிருக்க அண்ணன் அவரும் அழுதிட்டார்
அடியை அணைக்கும் அருட்பாதுகையை அன்புடன் அக்கணம் அளித்திட்டார்

அரவணைப்பு

அத்திரி அனுசூயை அகத்தியர் அகங்களை அதிதியாய் அண்ணல் அடைந்திட்டார்
அட்சயபாணங்கள் அகத்தியர் அருள அவ்வனத்தில் அகத்தை அமைத்திட்டார்
அரக்கி அடங்க அல்லாள் அதனால் அரக்கியின் அங்கம் அறுத்திட்டார்
அரக்கியின் அண்ணன் அரும்படை அனைத்தும் அசகாயராக அழித்திட்டார்

அரக்கனொருவனும் அணங்கை அள்ளி அவ்விடம் அக்கணம் அவன் அகன்றான்
அனந்தராமரும் அனிச்சமலராள் அகன்றதெங்கென அகமுடைந்தார்
அழுதார் அழுதார் அருவியாய் அருவியாய் அலைந்தார் அலைந்தார் அகதியாய்
அனலை அணைத்த அனிச்சமாய் அண்ணலின் அகக்கண்ணாடி அருகியது
அனலை அணைத்த அருகம்புல்லென அண்ணலின் அகமோ அரற்றியது

அணங்கினை அடைய அவ்விடம் அகன்று அடியடியடியாய் அலைக்கழிந்தார்
அங்கதன் அப்பனை அண்ணனாய் அடைந்தவன் அமைச்சன் அனுமனை அணைத்தறிந்தார்
அழகுக்கழுத்தன் அனுமனின் அறிவால் அஞ்சனவண்ணரை அடிபணிந்தான்
அஞ்சனவண்ணரும் அழகுக்கழுத்தனை அனலின் அருகினில் அரவணைத்தார்

அங்கதன் அப்பன் அகந்தை அகன்றதால் அஞ்சனர் அவனை அடித்தழித்தார்
அங்கதன் அப்பன் அரசினை அவனின் அம்பிக்கு அஞ்சனர் அன்பளித்தார்
அழகுக்கழுத்தன் அழகிய அரசை அனந்தமாக அனுபவித்தான்
அவன் அரும்படை அதனை அஞ்சனர் அடியில் அன்புடன் அன்புடன் அர்ப்பணித்தான்

அழகு

அரியின் அம்சர் அரனின் அம்சரை அன்பாய் அருகில் அழைத்தாரே
அணிந்த அரும்பொன் அங்கணி அகற்றி அனுமன் அங்கையில் அளித்தாரே
அணங்கு அவளோ அன்னத்தின் அம்சம் அவளிடம் அகிலத்தில் அறிந்திடுவாய்
அனிச்சம் அனையாள் அகமே அலர அவளிடம் அங்கணி அளித்திடுவாய்

அனுமன் அவ்விடம் அக்கணம் அகன்று அன்னையை அறிய அகமுகந்தார்
அவ்வனம் அகரமாய் அலசியே அலசியே அந்தகன் அருந்திசை அடியெடுத்தார்
அல்லும் அல்லதும் அகன்றன அகன்றன அனுமன் அகமோ அடங்கவில்லை
அறுதியாய் அவரும் அருங்கடல் அருக அலையும் அஃதே அடங்கவில்லை

அன்புராமர் அருளணும் அருளணும் அழகுராமர் அருளணும் அருளணும்
அறிவுராமர் அருளணும் அருளணும் அகமிருராமர் அருளணும் அருளணும்
அவர் அருளும் அடியும் அருளணும் அருளணும்
அடிப்புகழ் அரற்றும் அனுமனுக் அருளணும்

அஞ்சனை அருமகன் அப்படி அரற்றி அளந்தார் அளந்தார் அவ்வானம்
அஞ்சனவண்ணரின் அடிப்புகழ் அரற்ற அகன்றது அவரது அஞ்ஞானம்
அடுத்த அக்கணம் அஞ்சனை அன்பர் அருங்கடல் அப்புறம் அவரிருந்தார்
அல்லும் அமர அந்த அல்லில் அன்னையை அறிய அவர் அலைந்தார்

அழுது அழுது அடங்கா அழுகையில் அமர்ந்திருந்தாரே அன்னையுமே
அஞ்சனவண்ணரின் அணங்கே அவளென அறிந்தார் அறிந்தார் அனுமனுமே
அன்னையின் அகத்தின் அன்பினை அடைய அனுமனும் அனுமனும் அகமுகந்தார்
அணங்கவள் அரசரை அன்பர்க்கு அன்பரை அல்லர்க்கும் அன்பரை அடிப்புகழ்ந்தார்

அன்பின் அகரம் அவர் அகம் அகமே அன்பின் அகரம் அவரகமே
அருந்தவத்தால் அயோத்தி அரசர் அடைந்த அருமை அமுதம் அவரன்பே
அயோத்ய அரசரின் அருந்தவப்பிள்ளை அனுப்பிய அனுமன் அரற்றுகிறேன்
அன்புடைராமரின் அகமுடைசீதை அமர்ந்து அழுவதை அறிகின்றேன்
அன்னையானவள் அச்சம் அகற்றி அனுமனை அன்பனாய் அங்கீகரித்தாள்
அவரும் அளித்த அங்கணி அதனை அஞ்சனவண்ணராய் அவளணைத்தாள்

அக்ஷன் அகரமாய் அரக்கரை அரக்கரை அனுமனும் அனுமனும் அடித்துதைத்தார்
அவ்வானம் அளப்பதாய் அகன்ற அகங்களை அனுமனும் அனுமனும் அடித்துடைத்தார்
அகந்தையுடனே அலைந்த அரக்கரை அவர் அடியில் அரைத்து அவர் அழித்தார்
அரக்க அரசனும் அளித்த அனலினில் அந்நகர் அனைத்தையும் அவரெறித்தார்

அவ்வெற்றியை அனுமனும் அஞ்சனவண்ணர் அருளடி அதனில் அர்ப்பணித்தார்
அஞ்சனவண்ணரின் அடிப்புகழ் அரற்றி அருளும் அடியினை அணைத்திருந்தார்
அஞ்சனவண்ணரும் அணங்கிடம் அறிய அக்கணமே அவ்விடம் அகன்றிட்டார்
அலைகடல் அடைந்து அஞ்சனவண்ணரும் அக்கரையில் அழகாய் அமர்ந்திட்டார்

அரசு

அரக்க அரசனின் அம்பி அமைச்சன் அஞ்சனர் அருமை அறிந்திட்டான்
அரக்க அரசனின் அவையில் அஞ்சனர் அருமை அருமை அளந்திட்டான்
அரக்க அரசனோ அறிவுடை அம்பியை அனைவர் அவையில் அவமதித்தான்
அவமதிப்பால் அடிபட அம்பியும் அக்கணம் அவ்விடம் அகல அறுதியிட்டான்

அஞ்சனர் அடியே அறுதியென்றறுதியென்று அரக்கனின் அம்பியும் அறிந்திட்டான்
அஞ்சனர் அடியே அவனது அறுதியென்று அரக்கனின் அம்பியும் அடைந்திட்டான்
அரக்கக்குணத்தை அகற்றி அம்பியும் அஞ்சனர் அடியினை அணைத்திட்டான்
அன்பால் அலர்ந்த அப்புப்பூக்களை அஞ்சனர் அடிக்கே அர்ப்பணித்தான்

அஞ்சனநிறத்தர் அக்கணமே அவ் அம்பியை அன்புடன் அணைத்திட்டார்
அவ் அம்பியும் அதுமுதல் அஞ்சனர் அம்பியாய் அஞ்சனர் அஞ்சனர் அறுதியிட்டார்
அக்கணமே அவரும் அருஞ்சொல்லொன்றை அனைத்து அடியவர்க்களித்திட்டார்
அம்பி அனைய அடி அடை அடியவர் அனைவர் அன்பையும் அங்கீகரிப்பேன்
அப்படி அடைந்த அடியவர் அல்லலை அதுமுதல் அதுமுதல் அழித்தொழிப்பேன்

அஞ்சனர் அடிமுன் அரக்கன் அக்ரமம் அளந்தான் அளந்தான் அசுர அம்பி
அரக்க அரசனின் அதர்மம் அழிக்க அறுதிகள் அடைந்தார் அரசு அம்பி
அலைகடல் அப்புறம் அணியுடன் அடைய அஞ்சனவண்ணர் அறுதியிட்டார்
அப்புத்தேவனை அகத்தால் அன்பால் அர்ச்சித்து அர்ச்சித்து அமர்ந்திருந்தார்

அலையும் அசைந்தது அலைக்கடல் அசைந்தது அப்புத்தேவனோ அசையவில்லை
அகரமானவர் அரியுமானவர் அருமையை அவனும் அறியலில்லை
அஞ்சனர் அடைந்தார் அருங்கோபம்
அப்புக்கு அளித்தார் அனல்சாபம்
அனலால் அடிப்பட்ட அப்புத்தேவனும் அஞ்சனர் அடியினை அடிபணிந்தான்
அப்புறம் அடைய அணைக்கட்டும் அறிவினை அவனும் அவனும் அன்பளித்தான்

அஞ்சனர் அணியும் அரும்பாடுகள் அடைந்து அமைத்தது அமைத்தது அரும்பாலம்
அணிலொன்றும் அப்பணி அரும்பணியென்று அங்கமண் அளித்தது அக்காலம்
அஞ்சருந்தினங்கள் அகன்றன அகன்றன அலைக்கடலை அளந்தது அரும்பாலம்
அப்பாற்கடல் அரங்கன் அரிதுயில் அனைய அப்புக்கடல்மேல் அப்பாலம்

அப்பாலம் அடைந்து அப்புறம் அடைந்தனர் அஞ்சனவண்ணர் அணியினரே
அஞ்சனவண்ணரின் அருஞ்சொல் அதனை அரக்கனுக்களித்தார் அங்கதரே
அன்பே அசலாம் அறிவுச்சொற்கள் அரக்கன் அகத்தை அடையவில்லை
அம்பே அவனது அகம்புகுமென்று அஞ்சனர் அணைத்தார் அரியவில்லை

அரக்கனின் அரணை அரக்கனின் அணியியை அரக்கனனின் அரண்மனை அவரழித்தார்
அரக்கனின் அரும்புகழ் அரக்கனின் அகந்தை அரக்கனும் அழும்படி அவரழித்தார்
அரக்கன் அங்கையில் அல்லது அம்பென்று அன்று அவனை அனுப்பிவிட்டார்
அடுத்த அமரில் அம்புகள் அனுப்பி அர்ககனை அரக்கனை அழித்துவிட்டார்

அமரர் அனைவரும் அஞ்சனவண்ணரின் அருமையை அருமையை அளந்துரைத்தார்
அறராமருமே அறசீதையுமே அணைத்திட அணைத்திட அறிவுரைத்தார்
அஞ்சில் அகரத்தை அருவழியாக்கி அயோத்தி அடைந்தனர் அனைவருமே
அன்புப்பரதரை அணைத்தே அணைத்தே அகமே அலர்ந்தார் அஞ்சனரே

அனைவரின் அகமும் அலர்ந்திட அலர்ந்திட அரசினை அடைந்தார் அஞ்சனரே
அவர் அடிப்புகழ் அரற்றி அகமே அலர்ந்தனர் அவரை அகத்தில் அடைத்தவரே
அனுமனும் அனுமனும் அன்புக்கடலின் அருளும் அடியினை அர்ச்சித்தார்
அருமைராமரை அன்புச்சீதையை அகத்தினில் அகத்தினில் அடைத்திட்டார்

அன்புராமர் அருளணும் அருளணும் அறிவுராமர் அருளணும்
அருமைராமர் அருளணும் அருளணும் அழகியராமர் அருளணும்
அருளும் அவரடி அருளணும் அருளணும்
அடி அடையும் அடியவர்க்கருளணும்

                                                      -ஸ்ரீராமஜெயம்-

நேற்றைய முன் தினம் ஏகாதசி விரதம். ஒவ்வொரு தடவை ஏகாதசி விரதம் முடிக்கும் பொழுதும் புதிதாய் சிறப்புகள் பெற்று பிறப்பபெடுக்கும் அனுபவம் கிடைக்கும். அப்படி நேற்று விரதம் முடித்த பின் சனிப் பிரதோஷ தினத்தில் ஹயக்ரீவர் அளித்த அன்பளிப்பே இந்த அகர ராமாயணம். அகர ராமாயணத்தை எழுதத் தூண்டியதும் அகர ராமாயணமே. அதைப் படித்தவுடன் எனக்கும் அப்படியொரு ராமாயணம் எழுத எண்ணம் பிறந்து அகர ராமாயணத்தை எழுதத் துவங்கினேன். நேற்று சனிப் பிரதோஷத்தன்று 'அழகு' என்று நான் தலைப்பிட்டிருக்கும் சுந்தரகாண்டம் வரை நிறைவு செய்தேன். பின் இன்று சூர்யகுலத் தோன்றலின் கதையை சூரியனின் தினமான ஞாயிரன்று அவர் அரசை ஏற்பது வரையில் நிறைவு செய்துள்ளேன்.

எப்பொழுதும் ஒரு கவிதையை எழுதிய பின் எவ்வளவு அழகாக எழுதி விட்டோம் என்கிற பெருமிதம் ஒரு வகையான பரபரப்பு என்னுள் இருக்கும். ஆனால் இம்முறை என்னுள்ளிருந்து இந்த அகர ராமாயணம் வெளிபட்டு கிளம்பி என் முன் இருப்பதைக் காண்கின்றேன். இந்த அகர ராமாயணத்தை இவ்வுலகுக்கு அளிக்க என்னை தேர்ந்தெடுத்த இறைவனை இக்கணம் இன்னும் அதிகமாய் உணர்கிறேன்.

என் மனம் நிறைந்திருக்கிறது. ஸ்ரீராமரின் பாதங்களை போற்றுகிறேன். ஸ்ரீஹயக்ரீவருக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகளற்று மௌனிக்கிறேன்.

ஹயக்ரீவசுவாமியே உங்கள் பாதம் போற்றுகிறேன்
ஹயக்ரீவசுவாமியே உங்கள் பாதம் போற்றுகிறேன்
ஹயக்ரீவசுவாமியே உங்கள் பாதம் போற்றுகிறேன்

ஹயக்ரீவப் பெருமாளே உங்கள் பாதம் போற்றுகிறேன்
ஹயக்ரீவப் பெருமாளே உங்கள் பாதம் போற்றுகிறேன்
ஹயக்ரீவப் பெருமாளே உங்கள் பாதம் போற்றுகிறேன்


அகர ராமாயணத்தை எழுதத் தூண்டிய அகர ராமாயணம் படிக்க இங்கே சொடுக்கவும்.

7 comments:

Manivannan Sadasivam said...

அன்புராமஜெயம்!
அறராமஜெயம்!!
அருமைராமஜெயம்!!!
அழகுராமஜெயம்!!!!
அரசுராமஜெயம்!!!!!

ramesh sadasivam said...

அன்புராமஜெயம்!
அறராமஜெயம்!!
அருமைராமஜெயம்!!!
அழகுராமஜெயம்!!!!
அரசுராமஜெயம்!!!!!

அனந்தராமஜெயம்
அற்புதராமஜெயம்
அதிராமஜெயம்
அகராமஜெயம்!!!

இராஜராஜேஸ்வரி said...

அகர ராமாயணம்
அருமை..
பாராட்டுக்கள்..

ramesh sadasivam said...

ஸ்ரீராமஜெயம்
ஸ்ரீராமஜெயம்
ஸ்ரீராமஜெயம்!!

Thanks Madam!

Guwahati Venkat said...

என்னே சொல் வளம் !!! என்னே பக்தி மணம் கமழும் வார்த்தைகள் !!! "சுத்த ப்ரஹ்ம பராத்பர ராம்" ராம நாம ராமாயணத்தை சுவைத்ததுண்டா ?

ramesh sadasivam said...

https://www.youtube.com/watch?v=FDvGvVNdsug

https://www.youtube.com/watch?v=R7YmhFD381k

நாம ராமாயணம் நிறைய கேட்டிருக்கிறேன். என் கைப்பேசியில் சேர்த்து வைத்து கேட்டும் வருகிறேன்.

பாராட்டியதற்கு நன்றி. எல்லாப் புகழும் ராமர் ரமருக்கே!ஸ்ரீராமஜெயம்!

Unknown said...

அருமையான படைப்பு,நிகழ்கால கம்பர் ரமேஸ், வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன்