கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.- நம்மாழ்வார்
ஸ்ரீராமபிரான் இப்பூவுலக வாழ்க்கையை நிறைவு செய்யும் நாள் வந்தது. அதிகாலையில் ராஜ வாத்தியங்கள் முழங்க துயிலெழுந்து மங்கள நீர் ஆடினார். வெண்மையான ஆடைகள் அணிந்தார். அழகிய ஆபரணங்கள் யாவும் அணிந்தார். நெற்றியில் திருமண் அணிந்து கொண்டார்.
அவர் முகத்தில் மகிழ்ச்சியும் நிறைவும் குடிகொண்டிருந்தன.
தன் அறையை விட்டு அவர் வெளியே வந்த பொழுது அவருக்காக பரதரும் சத்ருக்னரும் அவரைப் போலவே வெண்ணிற ஆடைகள் அணிந்தவர்களாக அஸ்வினி தேவர்கள் போல அவருக்காக காத்திருந்தார்கள்.
ஸ்ரீராமபிரான் அவர்களைப் பார்த்து பாசத்தோடு புன்னகைத்தார். அவர்களும் அப்புன்னகையில் மகிழ்ந்தவர்களாய் அவரைக் கண்டு புன்னகைத்தார்கள். ஸ்ரீராமபிரானின் கால்களில் விழுந்து வணங்கினார்கள்.
அப்பொழுது ஸ்ரீராமபிரானின் கோதண்டம் ஒரு மனிதனாக வடிவெடுத்து அவரருகில் வந்து அவரை பணிந்து நின்றது. கோதண்டரின் பின்பாக ஸ்ரீராமபிரானின் ஸ்ரீராமபாணங்கள் யாவும் மனிதர்களாக உருவெடுத்து அணிவகுத்து நின்றன.
ஸ்ரீராமபிரான் தன் அரண்மனையிலிருந்து வெளியேறி நடக்கத் துவங்கினார். பரத சத்ருக்னர்கள் ஸ்ரீராமரின் இருபக்கங்களிலும் நடந்து சென்றனர்.
அம்மூவரையும் தொடர்ந்து கோதண்டரும் கோதண்டரைத் தொடர்ந்து ராமபாணிகள் யாவரும் நடந்து சென்றார்கள்.
அயோத்தியின் மக்கள் யாவரும் ஸ்ரீராமரை தொடர்ந்து நடந்து சென்றார்கள்.
ஸ்ரீராமர் சரயு நதியில் இறங்கினார். பரத சத்ருக்னரும் உடன் இறங்கினர். ராம பரத சத்ருக்னரை தொடர்ந்து கோதண்டரும் ராமபாணிகளும் இறங்கினர்.
இதை கண்ணுற்ற அயோத்தி நகரவாசிகள் யாரும் கண் கலங்கவில்லை. அவர்கள் முகத்தில் துளி சலனமில்லை. அவர்கள் முகத்தில் வைராக்கியம் ஒன்று மட்டுமே இருந்தது.
அவர்கள் யாவரும் ஒவ்வொருவராக தங்கள் ராம-பரத-சத்ருக்னர்கள் மூழ்கிய நதியினுள் இறங்கி மூழ்கினர். முதியவர்கள் யாவரும் முகமலர்ச்சியுடன் இறங்கி மூழ்கினார்கள். கணவர்கள் யாவரும் தங்கள் மனைவியரோடு இறங்கினார்கள். சிறுவர்கள் கூட தங்கள் தந்தையின் தோள்களில் இருந்தபடி கண்களை மூடிக் கொண்டு கைகளை குவித்துக் கொண்டு ராமநாமம் சொல்லிக் கொண்டே அந்த நதியில் இறங்கினார்கள்.
இதைத் தொடர்ந்து பசுக்கள் யாவும் அந்த புனித சரயு நதியினுள் இறங்கின. அப்பசுக்களைத் தொடர்ந்து யானைகளும் குதிரைகளும் நாய்களும் அயோத்தியா நகரத்தின் எறும்புகளும் கூட அந்த புனித நதியில் இறங்கின.
பின்பு அங்கிருந்த மரங்களும் செடி கொடிகளும் கூட மனிதர்களாக வடிவடுத்து நடக்கத் துவக்கின. அவையும் அவ்வூரின் மக்களைப் போலவும் விலங்குகளைப் போலவும் சரயு நதியுனுள்ளே சென்று மறைந்தன.
சரயு நதியின் உள்ளிருந்து மகாவிஷ்ணு சதுர்புஜராய் சங்குசக்ர தாரியாய் சகல ஆபரணங்கள் அணிந்தவராய் கௌஸ்துப மார்பினராய் பொன்மகுட தாரியாய் மஞ்சள் பட்டாடைகள் அணிந்தவராய் சூரியக் கோடி பிரகாசத்தோடு சரயு நதியிலிருந்து வெளிப்பட்டார். கருடாழ்வார் அவருக்காக பேரானந்தத்தோடு காத்திருந்தார். அவர்மேல் ஸ்ரீமந் நாராயணன் கம்பீரமாக ஏறியமர்ந்தார். கருடாழ்வார் வைகுண்டம் நோக்கி பறந்தார்.
வைகுண்டத்தின் கதவுகள் யாவும் தம் தலைவருக்காக தாமே திறந்தன.
மகாவிஷ்ணு பாற்கடலை அடைந்தார். அங்கே பூரண பொற்குடம் தாங்கி நின்று தாயார் அன்னை மகாலக்ஷ்மி தம் மணவாளரை வரவேற்றார்.
அவரை தாங்கிக் கிடக்கவே ஏங்கிக் கிடந்த ஆதிசேஷனார் மீது ஏறி சாய்ந்த வண்ணம் அமர்ந்து கொண்டார். அவரருகில் மகாலக்ஷ்மியும் மகிழ்வுடனே வீற்றிருந்தார்.
அயோத்தியாவின் உயிர்கள் யாவும் அங்கே அவரை அத்திருக் கோலத்தில் கண்டு மகிழ்ந்தன.
அப்பொழுது அங்கே தோன்றிய பிரம்மா அந்த ஆத்மாக்களை நோக்கி திருவுடையீர் 'அடியேன் தங்களுக்கென ஒரு புதிய சுவர்க்கமொன்றை படைத்துள்ளேன். தாங்கள் அனைவரும் அதை தங்களிடமாக்கிக் கொண்டு அவ்விடத்தை சிறப்பிக்க வேண்டும்' என விண்ணப்பித்தார். அந்த ஆத்மாக்கள் யாவும் தங்கள் பிரபுவின் திரு முகத்தை நோக்கின. திருமால் அந்த ஆத்மாக்களை அங்கு சென்று வசிக்கும் படியும் அங்கிருந்தபடியே தன்னை தரிசிக்க முடியும் என்பதையும் திருவாய் மலர்ந்தார்.
இப்படியாக ஸ்ரீராமபிரான் தான் வாழ்ந்திருந்த அயோத்தியாவின் புல் முதலான தாவரங்கள் எறும்புகள் முதலான உயிரனங்கள் என அயோத்தியாவின் சகல ஜீவன்களையும் நான்முகனார் படைத்த புதிய சுவர்க்கத்திற்கு அழைத்து சென்று அமர வைத்தார். அப்பேர்ப்பட்ட ஸ்ரீராமரை கல்வியாக கற்பதை விடவும் வேறெதையும் கற்பது கற்பவர்களுக்கு உகந்த செயலாகுமோ? என கேட்கிறார் நம்மாழ்வார்.
நம்மாழ்வார் திருவடிகளை போற்றி மகிழ்ந்து அடியேனும் அதையே வழி மொழிகிறேன்.
உயிரான ராமர்!
பிள்ளையாரைப் போற்றலாம் கிருஷ்ணரையும் போற்றலாம்
முருகரையும் போற்றலாம் முக்கண்ணர் போற்றலாம்
சுண்டெலியில் போகவும் நம்மாலே முடியுமோ?
சுண்டுவிரலில் மலையவும் தூக்கிநிற்க முடியுமோ?
கந்தனாரைப் போலவும் உருண்டுத் திரள முடியுமோ?
முக்கண்ணர் போலவும் சக்திக் காட்ட முடியுமோ?
ரங்கர்போல எப்பவும் படுத்துக்கிடக்க முடியுமோ?
வேங்கடவர் போலவும் வாரிவழங்க முடியுமோ?
நரசிம்மர் போலவும் கோபம்காட்ட முடியுமோ?
கூர்மபிரான் போலவும் ஆமையாக முடியுமோ?
வாமனரைப் போலவும் வானமளக்க முடியுமோ?
ஆஞ்சநேயர் போலவும் பறந்து போக முடியுமோ?
அத்தனை தெய்வங்களும் வரம்தரவே உள்ளன
ராமபிரான் மட்டுமே வழிகாட்ட இருக்கிறார்
அத்தனை தெய்வங்களும் உதவிசெய்ய உள்ளன
ராமபிரான் மட்டுமே ஊக்கந்தர இருக்கிறார்
அத்தனை தெய்வங்களும் தெய்வமாக உள்ளன
ராமபிரான் மட்டுமே மனிதனாவும் இருக்கிறார்
நம்மைப்போல சிரித்தவர் நம்மைப்போலே அழுதவர்
நம்மைப்போலே காதலித்து காதலோடு வாழ்ந்தவர்
இழப்புகளைக் கண்டவர் மீண்டெழுந்து வந்தவர்
உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகங்களை அறிந்தவர்
செல்வத்தையும் கண்டவர் ஏழ்மையையும் கண்டவர்
செல்வத்திலும் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தவர்
விதியென்னும் புயலிலே ஆடாத மரமல்லர்
அத்தனை புயலிலும் வீழாத மரமவர்
தன்னுயிராம் சீதையை தியாகம்செய்த மேன்மையர்
இதயத்தில் சீதையை இழக்காத ஆண்மையர்
புரிதலில்லா மக்களை பொறுத்துக்காத்த பூமியர்
புரிந்தபின் இதயத்தில் உயிரான சாமியர்
என்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே
என்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே
என்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே
என் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே
என் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே!
2 comments:
மகிழ்ச்சியும் நிறைவும் குடிகொண்டிருக்கும் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!
ஸ்ரீராமஜெயம்!
ஸ்ரீராமஜெயம்!!
நன்றி மேடம்!
Post a Comment